தலைமை நிர்வாகிகளை அதிரடியாக மாற்றிய டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை எதிர்பார்த்த அளவு வளர்ச்சி பெறவில்லை. குறிப்பாக, கார் மார்க்கெட்டில் நீண்ட காலமாக மூன்றாவது இடத்தில் இருந்து வந்த டாடா மோட்டார்ஸ் நடப்பு நிதி ஆண்டின் துவக்கத்திலேயே பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அந்த இடத்தை மஹிந்திரா பிடித்தது. இதனால், சற்று அதிர்ந்து போன டாடா மோட்டார்ஸ் விற்பனை சரிவிலிருந்து மீள்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஜெனரல் மோட்டார்ஸ் முன்னாள் தலைவராக இருந்த கார்ல் ஸ்லிம்மை புதிய தலைவராக நியமித்திருக்கிறது டாடா. அக்டோபர் 1ந் தேதி கார்ல் ஸ்லிம் புதிய தலைவராக பொறுப்பேற்கிறார்.
இதேபோன்று, சாம்சங் மொபைல்போன் மற்றும் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக இருந்த ரஞ்சித் யாதவை பயணிகள் வாகனப் பிரிவின் தலைவராக்கியிருக்கிறது டாடா. இந்தியாவில் ஒற்றை இலக்கத்தில் இருந்த சாம்சங் மார்க்கெட் பங்களிப்பை 30 சதவீதமாக உயர்த்தியதில் ரஞ்சித் யாதவ் முக்கிய பங்கு வகித்தவர்.
இதுதவிர, பல முக்கிய தலைமை நிர்வாகிகளையும் மாற்றியுள்ளது. போக்ஸ்வேகன் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த நீரஜ் கார்க்கையும் டாடா மோட்டார்ஸ் வளைத்துவிட்டது. பயணிகள் வாகனப் பிரிவின் துணைத் தலைவராக நீரஜ் கார்க்கை டாடா மோட்டார்ஸ் நியமித்திருக்கிறது.
இதுதவிர, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களும் வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி மாற்றங்கள் டாடா மோட்டார்ஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








