டொயோட்டோ லிவா, எட்டியோஸ் விற்பனை ஒரு லட்சத்தை எட்டியது

பெரிய கார்களை மட்டுமே வைத்து விற்பனை செய்து வந்த டொயோட்டோ இந்தியாவுக்காக களமிறக்கிய சிறிய கார் மாடல்கள்தான் எட்டியோஸ் மற்றும் லிவா கார்கள்.
கடந்த 2010ம் ஆண்டு எட்டியோஸ் செடான் காரை முதலில் விற்பனைக்கு கொண்டு வந்தது டொயோட்டோ. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு லிவா ஹேட்ச்பேக் காரை விற்பனைக்கு கொண்டு வந்தது.
இந்த இரண்டு கார்களும் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைப்பதும், டொயோட்டாவின் மீதான நம்பிக்கையின் காரணமாகவும் வாடிக்கையாளர் நல்ல ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இதனால், தற்போது இந்த இரண்டு கார்களின் ஒட்டுமொத்த விற்பனை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இந்திய மார்க்கெட்டில் இது மிக முக்கியமான தருணம் என டொயோட்டோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டொயோட்டோ நிர்வாக இயக்குனர் ஹிரோஷி நககாவா கூறுகையில்," இந்த இரண்டு கார்களின் விற்பனையும் புதிய மைல்கல்லை எட்டியிருப்பது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
எங்களது பிராண்டு மீது நம்பிக்கை வைத்து பேராதரவு கொடுத்த ஒரு லட்சம் எட்டியோஸ், லிவா உரிமையாளர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன்," என்றார்.
எட்டியோஸ், லிவா கார்களுக்கு தேவை அதிகரித்து வருவதையடுத்து, அடுத்த ஆண்டு முதல் இந்த இரண்டு கார்களின் உற்பத்தியையும் அதிகரிக்க டொயோட்டோ முடிவு செய்துள்ளது.
தற்போது ஆண்டுக்கு 1.20 லட்சம் லிவா, எட்டியோஸ் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 2.10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் வகையில் திறனை மேம்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








