குஜராத்தில் ஆலை அமைக்க வால்வோ திட்டம்

ஸ்வீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம் சொகுசு பஸ்கள் மூலம் இந்திய மார்க்கெட்டில் நன்மதிப்பை பெற்றுள்ளது. இதேபோன்று, சொகுசு கார் மார்க்கெட்டிலும் முக்கிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.
ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு நெருக்கடியை கொடுத்து முதல் மூன்று இடங்களில் ஒன்றை கைப்பற்ற வால்வோ திட்டமிட்டுள்ளது. இதற்காக, 5 புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
மேலும், விலையை குறைக்க இந்தியாவிலேயே கார்களை உற்பத்தி செய்யவும் வால்வோ முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிய ஆலையை நிர்மாணிக்க உள்ளது. பாகங்களாக இறக்குமதி செய்து இந்த புதிய ஆலையில் கார்களை அசெம்பிளிங் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பல்வேறு கார் நிறுவனங்களும் குஜராத்தை நோக்கி செல்லத் துவங்கியுள்ள நிலையில், வால்வோவும் குஜராத்தை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது புதிய ஆலைக்கான நிலம தேர்வு செய்யும் பணியில் அந்த நிறுவனம் இறங்கியுள்ளது.
டாடா நானோ கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ள சனந்த் தொழிற்பேட்டையிலேயே தனது புதிய ஆலையை அமைக்கவும் வால்வோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் குஜராத் மாநில முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், குஜராத்துக்கு பெரிய அளவில் முதலீடும், வேலைவாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








