இந்தியாவில் எந்த கலர் கார் அதிகம் விற்பனையாகிறது?

வாடிக்கையாளர்களை கவர போதும் போதும் எனும் அளவுக்கு தற்போது விதவிதமான கலர்களில் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், சில வாடிக்கையாளர்கள் குழம்பி போவதும் உண்டு.
இந்த நிலையில் நம் நாட்டில் விற்பனையாகும் 60 முதல் 70 சதவீத கார்கள் வெள்ளை அல்லது சி்ல்வர் நிற கார்கள்தான் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மாருதி நிறுவனத்தின் அதிகாரி சசாங்க் வத்சவா கூறுகையில்," நாங்கள் விற்பனை செய்யும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளை மற்றும் சில்வர் நிறம் கொண்டவை. அதிலும் குறிப்பாக, வெள்ளை நிற கார்கள்தான் அதிகம் விற்பனையாகிறது," என்றார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 50 சதவீதம் அளவுக்கு இந்த இரண்டு நிறங்களிலும் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால், தற்போது 20 சதவீதம் அளவுக்கு இந்த இரண்டு நிறங்களை கொண்ட கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
மேலும், பெட்ரோல் கார்களை வாங்குபவர்களை விட டீசல் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு நிறங்களைத்தான் பெரும்பாலும் தேர்வு செய்கின்றனராம்.வெள்ளை மற்றும் சில்வர் நிற கார்களை யூஸ்டு மார்க்கெட்டில் விற்பனை செய்வதும் எளிதாக இருக்கிறதாம். மேலும், வெள்ளை நிற கார்களுக்கு தகுந்த விலையும் கிடைக்கிறதாம்.
மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் யூஸ்டு கார் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில்," எங்களது விற்பனையில் 35 சதவீதம் அளவுக்கு வெள்ளை நிற கார்கள்தான் பங்களிப்பை கொடுக்கின்றன," என்றார். இருப்பினும், ஒவ்வொரு கார் மாடலும் குறிப்பிட்ட ஒரு கலரில் அதிகம் விற்பனையாகிறதாம்.
ஃபிகோ காரின் கிளி பச்சை கலர் வந்தபின் அதன் விற்பனை திடீரென 8 சதவீம் அதிகரித்ததாகவும், ஸ்விப்ட் காரின் சிவப்பு கலரை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவதாகவும் அந்தந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைவிட முக்கியமான விஷயம் கார் நிறத்தை தேர்வு செய்வதில் ஒளிந்திருக்கிறது. இரவில் செல்லும்போது வெள்ளை நிற கார்களில் சென்றால் பாதுகாப்பு அதிகம். தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு விளக்கு வெளிச்சத்தில் வெள்ளை நிற கார்கள்தான் சட்டென்று தெரியுமாம்.


Click it and Unblock the Notifications








