கார் வாங்கும் நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரிவதில்லை!! எவ்வளவு பெரிய தப்பை செஞ்சிட்டு இருக்கோம்னு தெரியுமா?
நன்கு உயரமான & கம்பீரமான எஸ்யூவி கார்களை வாங்கவே நம்மில் பெரும்பாலானோர் விரும்புகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உயரமான எஸ்யூவி கார்களை காட்டிலும் தாழ்வான கார்களே பாதுகாப்பானவை என அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு முடிவு வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது.
ஆட்டோமொபைல் துறை கடந்த நூறாண்டுகளில் பல்வேறு விதங்களில் பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக, அதிக மக்களால் வாங்கப்படும் கார்கள் நிறைய முன்னேற்றங்களையும், மேம்பாடுகளையும் கடந்த காலங்களில் இருந்து சந்தித்துள்ளன. ஆரம்ப காலக்கட்டத்தில், வேறு வழியில்லாமல் கார்கள் அளவில் நன்கு பெரியதாக உருவாக்கப்பட்டன. அதன்பின் காலம் போக, போக கார்களின் அளவு குறைந்தது.

கார்களை வேகமாக இயங்க வைக்கவும், சாலையில் அதிகளவில் இடத்தை ஆக்கிரமிக்க கூடாது என்பதற்காகவும் மிகவும் காம்பெக்ட்டாக கார்களை வடிவமைக்க கார் நிறுவனங்கள் விரும்பின. இதன் விளைவாக, செடான் ரக கார்களின் பயன்பாடு மக்களிடத்தில் அதிகரித்தது. துப்பாக்கி புல்லட் போன்றதான டிசைனில், தாழ்வாக வடிவமைக்கப்பட்ட செடான் கார்களும், கூபே ரக கார்களும் அதிகளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்தன.
ஆனால், எந்தவொரு டிரெண்டும் குறிப்பிட்ட காலத்திற்கு தானே. அவ்வாறு, செடான் கார்களும் ஒரு கட்டத்திற்கு மேல் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படவில்லை. மக்களின் இரசனை மாறியது. செடான், ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு பதிலாக உயரமான, கம்பீரமான மற்றும் அளவில் பெரியதான எஸ்யூவி ரக கார்கள் அதிகளவில் விற்பனைக்குவர ஆரம்பித்தன.

தற்சமயம் எஸ்யூவி ரக கார்கள் தான் நம் இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றில் மக்களால் விரும்பித் தேர்வு செய்யக்கூடிய காராக உள்ளது. ஆனால், தாழ்வான உடலமைப்பை கொண்ட கார்களை காட்டிலும் உயரமான எஸ்யூவி ரக கார்கள் பாதசாரிகளுக்கு ஆபத்தாக விளங்குகின்றன என்றும், எஸ்யூவி வாகனங்களினாலேயே அதிக பாதசாரி உயிரிழப்புகள் நடைபெறுவதாகவும் ஓர் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் உள்ள நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான காப்பீட்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 40 இன்ச் (3.33 அடி)-க்கு மேல் உயரம் கொண்ட எஸ்யூவி வாகனங்கள் விபத்துகளின்போது பாதசாரிகளுக்கு மேலும் ஆபத்தாக விளங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 18,000 வாகன விபத்துகள் ஆராயப்பட்டன.

அதேபோல், சிறிய அளவிலான எஸ்யூவி கார்களை விட, பெரிய அளவிலான எஸ்யூவி கார்களும், சதுர வடிவில் முன்பக்கத்தை கொண்ட பிக்-அப் டிரக் வாகனங்களும் விபத்தின்போது சாலையில் நடந்து செல்பவர்களுக்கு ஆபத்தாக விளங்குவதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதுவே, வளைவான முன்பக்கத்தை கொண்ட கார்கள் பாதசாரிகளுக்கு பெரியதாக பிரச்சனையாக இல்லை எனவும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
வாகனம் அளவில் பெரியதாக இருப்பதால், அதற்கேற்ப சேதாரங்களையும் அதிகம் ஏற்படுத்துகிறது. அதேபோல், அளவில் பெரியதான எஸ்யூவி கார்களின் வெளிப்பக்கத்தில் பயன்படுத்தப்படும் மிகவும் வலிமையான கார் பாகங்களும் விபத்தின்போது கடுமையான பாதிப்புகளை பாதசாரிகளுக்கு ஏற்படுத்துவதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனத்தின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். இருப்பினும், தனது வாழ்க்கை சூழலை மற்றவர்களுக்கு காட்டுவதற்காக முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களை நிறைய பேர் வாங்குகின்றனர். ஆனால், அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம் பெரிய அளவிலான எஸ்யூவி வாகனங்கள் சாலையில் செல்வோருக்கு ஆபத்தானவை என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகி உள்ளது.
Source: Reuters


Click it and Unblock the Notifications









