ஏப்ரலிலும் கார் விற்பனையில் கடும் சரிவு: கவலையில் கார் நிறுவனங்கள்

பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையற்ற நிலை, கடனுக்கான வட்டி வீதங்கள் உயர்வு, எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றின் எதிரொலியால் கார் விற்பனையில் மந்தநிலை நீடிக்கிறது.
கடந்த மாதம் 1,50,789 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1,68,354 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது இது 10.43 சதவீதம் குறைந்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது.
மேலும், 1997-98ம் ஆண்டு முதல் சியாம் கார் விற்பனை புள்ளிவிபரங்களை வெளியிட்டு வருகிறது. அதில், தொடர்ந்து 6 மாதங்களாக கார் விற்பனையில் சரிவு ஏற்பட்டிருப்பது இதுவே முதல் தடவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கார் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மாருதி நிறுவனம் கடந்த மாதம் 90,523 கார்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் விற்பனை வெறும் 0.3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
இவைதவிர, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ் உள்பட பெரும்பாலான நிறுவனங்களின் கார் விற்பனை சரிவு கண்டுள்ளது. இது ஆட்டோமொபைல் துறையினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








