டிசையரை வீழ்த்தும் விலையில் அமேஸ்: ஹோண்டா சூசகம்

இந்தியாவில் தனது முதல் டீசல் காரான அமேஸ் செடானை விரைவில் ஹோண்டா அறிமுகம் செய்ய உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கும் அமேஸ் குறித்து நம் நாட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், விலை விஷயத்தில் சொதப்பாமல் இருந்தால் அமேஸ் காருக்கு நிச்சயம் ஸ்திரமான எதிர்காலம் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்ட ஹோண்டா மார்க்கெட் லீடராக இருக்கும் டிசையரை வீழ்த்தும் வகையில் விலையை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.
ஹோண்டாவின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"அமேஸ் காரின் விலையை நிர்ணயிக்கும் முடிவை மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் எடுத்து வருகிறோம்.
புோட்டியாளர்கள் மற்றும் பெட்ரோல் கார்களின் விற்பனை அதிகரிப்பு உள்ளிட்ட விஷயங்களும் கருத்தில் கொண்டு பரிசீலித்து வருகிறோம். இதுபற்றி தற்போது எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள முடியாது," என்றார்.
ஐஎச்எஸ் ஆட்டோமோட்டிவ் நிர்வாக இயக்குனர் தீபேஷ் ரத்தோர் கூறுகையில்," அமேஸ் மூலம் ஹோண்டா இழந்த இடத்தை ஒரே ஷாட்டில் பிடித்துவிடும்," என்று கூறினார்.
புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியை சமீபத்தில் ஹோண்டா அறிமுகம் செய்தது. முந்தைய மாடலைவிட புதிய மாடலை ரூ.3.0 லட்சம் குறைவான விலையில் ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வந்து போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்திருக்கிறது ஹோண்டா.
இதேபோன்று, அமேஸ் விலையையும் ஹோண்டா நிர்ணயித்து போட்டியாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்த இருப்பதாக ஆட்டோமொபைல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








