ரூ.1,500 கோடியில் ஆந்திராவில் புதிய ஆலை அமைக்கும் இசூஸு
எஸ்யூவி தயாரிப்புக்காக ரூ.1,500 கோடி முதலீட்டில் ஆந்திராவில் புதிய ஆலையை அமைக்கிறது இசூஸு. ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான இசூஸு வர்த்தக வாகனங்கள் மற்றும் சொகுசு எஸ்யூவி தயாரிப்பில் பிரபலமாக உள்ளது. சமீபத்தில் இந்தியாவில் எம்யூ7 எஸ்யூவி மற்றும் டிமேக்ஸ் பிக்கப் டிரக்கை அறிமுகம் செய்தது.
இரண்டிற்குமான முன்பதிவு துவங்கி உள்ள நிலையில், இந்த இரண்டு மாடல்களும் தாய்லாந்தில் உள்ள இசூஸு ஆலையில் இருந்து இறக்குமதி செய்து டெலிவிரி கொடுக்கப்பட உள்ளன. இந்த நிலையில், இறக்குமதி கார்களுக்கான வரி மத்திய பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டதால் இசூஸுவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தியாவில் புதிய கார் ஆலையை அமைக்கிறது. ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள, ஸ்ரீ என்ற இடத்தில் புதிய ஆலையை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ரூ.1,500 கோடியில் அமைக்கப்படும் இந்த ஆலையில் வரும் 2016ம் ஆண்டு முதல் கார் உற்பத்தி துவங்கும். இதன்மூலம், ஏராளமானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதனிடையே, மத்திய பட்ஜெட்டால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் எம்யூ7 மற்றும் டிமேக்ஸ் பிக்கப் டிரக்கை அசெம்பிள் செய்ய இசூஸு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, இரு நிறுவனங்களும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டொயோட்டோ ஃபார்ச்சூனர், ஃபோர்டு என்டெவர் போன்ற சொகுசு எஸ்யூவிகளுக்கு இசூஸு எம்யூ7 போட்டியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








