இன்னும் ஓர் ஆண்டில் எலக்ட்ரிக் வெரிட்டோ அறிமுகப்படுத்தப்படும்: மஹிந்திரா

எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவதற்கு மஹிந்திரா மிகுந்த முன்னுரிமை கொடுத்து வருகிறது.
சமீபத்தில்தான் இ2ஓ எலக்ட்ரிக் காரை அந்த நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த நிலையில், அடுத்து புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்த திட்டங்களை மஹிந்திரா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா தலைவர் பவன் கோயங்கோ கூறுகையில்," இ2ஓ வை அடுத்து பேட்டரியில் இயங்கும் மேக்ஸிமோவை அறிமுகம் செய்ய உள்ளோம்.
ஆனால், இ2ஓவுக்கு கிடைக்கும் வரவேற்பை மதிப்பீடு செய்த பின்னரே மேக்ஸிமோவை வணிக ரீதியில் அறிமுகம் செய்வோம். ஏனெனில், டெல்லியில் மட்டுமே இ2ஓ., காருக்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது.
பிற நகரங்களில் இ2ஓ வரிச்சலுகை இல்லாததால் சவால்கள் நிறைந்துள்ளன. மாதத்திற்கு 400 இ2ஓ கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம். இருப்பினும், தற்போது 50 எலக்ட்ரிக் மேக்ஸிமோ வேன்கள் தயாராக உள்ளன.
இன்னும் ஓர் ஆண்டில் எலக்ட்ரிக் வெரிட்டோ காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். புரோட்டோ டைப் கூட தயாராகிவிட்டது. இ2ஓ காரைவிட எலக்ட்ரிக் வெரிட்டோ அதிக எடை கொண்ட காராக இருக்கும்.
இதுதவிர, பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்களையும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டம் வைத்துள்ளோம்.


Click it and Unblock the Notifications








