பட்ஜெட் பலனில்லை... எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்கள் ஏமாற்றம்!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்க எலக்ட்ரிக் கார்களின் விற்பனையை ஊக்குவிக்க நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எலக்ட்ரிக் கார்களின் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் மானியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த மானியம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு காலாவதியானது. இதனால், பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகன விற்பனை அடியோடு முடங்கியது.
அத்தோடு, நம் நாட்டின் ஒரே ஒரு எலக்ட்ரிக் கார் மாடலான மஹிந்திரா ரேவா ஐ காரின் விற்பனையும் ஒன்றுமில்லை என்ற நிலைமைக்கு சென்றுவிட்டது.
இந்தநிலையில், எலக்ட்ரிக் கார்களின் விற்பனை மற்றும் தயாரிப்பை அதிகரிக்கும் பொருட்டு புதிய தொலைநோக்கு திட்டத்தை மத்திய அரசு வகுத்தது. இந்த திட்டத்தை அடுத்த மாதம் முதலான நிதியாண்டில் அமல்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், இதுகுறித்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இதுகுறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், பட்ஜெட்டில் மானிய அறிவிப்பு வெளியாகும் என்பதை கருத்தில்கொண்டு மஹிந்திரா ரேவா நிறுவனம் புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகத்தை தள்ளிப்போட்டு வந்தது.
பட்ஜெட்டில் மானிய அறிவிப்பு வெளியாகதாதல் வேறுவழியின்றி தனது இ2ஓ காரை உடனடியாக அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








