மஹிந்திரா ரேவாவின் புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகம்: தமிழகத்தில் விற்பனை இல்லை
ரூ.5.96 லட்சத்தில் மஹிந்திரா ரேவாவின் புதிய எலக்ட்ரிக் கார் டெல்லியில் நடந்த விழாவில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது. முதல்கட்டமாக, நாடுமுழுவதும் 8 நகரங்களில் உள்ள 26 டீலர்ஷிப்புகளில் இந்த கார் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மின் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தில் இந்த காரை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வரவில்லை. ஒருவேளை மின்சாரத்திற்கே கஷ்ட ஜீவனம் நடத்தி வரும் தமிழகத்தில் இந்த கார் போனியாகாது என்று தெரிந்தே மஹிந்திரா விற்பனை கொண்டு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த புதிய எலக்ட்ரிக் காரில் 4 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். 39.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்ட மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை செல்லலாம் என மஹிந்திரா ரேவா தெரிவித்துள்ளது.
இந்த எலக்ட்ரிக் காரில் ஒரு கிலோமீட்டர் செல்வதற்கு 50 பைசா மட்டுமே செலவாகும் என்பது கூடுதல் சிறப்பாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது எலக்ட்ரிக் கார்களுக்கு மத்திய அரசின் மானிய திட்டம் அமலில் இல்லை என்பது மிகப்பெரிய பாதகமாக இருக்கிறது.
ஒருவேளை, எலக்ட்ரிக் கார்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்தால் இந்த கார் நிச்சயம் மாநகரங்களில் நல்ல வரவேற்பை பெறும்.
விரைவில்... மஹிந்திரா ரேவா இ2ஓ.,வில் இருக்கும் சிறப்பம்சங்கள்!


Click it and Unblock the Notifications








