குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி!
நகர்ப்புற எல்லைக்குள் மட்டும் இயக்குவதற்கான குவாட்ரிசைக்கிள் எனப்படும் புதிய நான்கு சக்கர வாகனப் பிரிவுக்கு மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது.
நகர்ப்புற போக்குவரத்துக்கு ஏற்ற குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பஜாஜ் உள்ளிட்ட பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தன. இதுகுறித்து ஆய்வு செய்து, புதிய ரக வாகனத்துக்கான பாதுகாப்பு அம்சங்கள் விதிமுறைகளை வகுப்பதற்காக குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.

டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குவாட்ரிசைக்கிளுக்கு அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. குவாட்ரிசைக்கிளுக்கு அனுமதி வழங்கினால், சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் கருத்து தெரிவித்தன.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று மத்திய சாலை போக்குவரத்து செயலர் விஜய் சிப்பெர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குவாட்ரிசைக்கிள்களுக்கு அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பஜாஜ் ஆட்டோ வரவேற்பு தெரிவித்துள்ளது. இது இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கியமான நாள் என்றும் தெரிவித்துள்ளது. குவாட்ரிசைக்கிள் பிரிவில் முதலாவதாக பஜாஜ் ஆட்டோவின் ஆர்இ60 விற்பனைக்கு வர இருக்கிறது. இதற்காக, பஜாஜ் ஆட்டோ ரூ.550 கோடியை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








