எஸ்யூவி மீது கூடுதல் வரி: திரும்ப பெற சியாம் வலியுறுத்தல்!

கடந்த 28ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எஸ்யூவி கார்கள் மீதான 27 சதவீத கலால் வரி 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இதனால், மஹிந்திரா எக்ஸ்யூவி, டொயோட்டா இன்னோவா உள்ளிட்ட கார்களின் விலை ரூ.60,000 வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
பட்ஜெட் அறிவிப்பு காரணமாக பன்முக பயன்பாட்டு வாகனங்களின் விற்பனையில் பாதிப்பை என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், பட்ஜெட் குறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பின்(சியாம்) சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பட்ஜெட்டில் கார் மற்றும் ஆடம்பர பைக்குகள் மீது அதிகரிக்கப்பட்ட வரி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்திரா விவசாயக் கருவிகள் உற்பத்தி பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கூறுகையில்," பட்ஜெட்டை சியாம் வரவேற்கிறது. அதேவேளை, எஸ்யூவி கார்கள் மீதான வரி உயர்வு அதிருப்தி அளக்கிறது.
கார் விற்பனையில் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லாத நிலையில், எஸ்யூவி, எம்பிவி கார்களின் விற்பனை ஓரளவு வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில், எஸ்யூவி கார்கள் மீதான வரி உயர்த்தப்பட்டிருப்பது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, எஸ்யூவி கார்கள் மீதான வரி உயர்வை முழுவதுமாக திரும்ப பெறுவதற்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் வலியுறுத்த முடிவு செய்துள்ளோம்," என்றார்.
இதனிடையே, மத்திய அரசு அறிவித்துள்ள வரையறைகளின்படி, எஸ்யூவி கார்கள் மட்டுமல்ல மாருதி எஸ்எக்ஸ்4, டொயோட்டா கரொல்லா உள்ளிட்ட செடான் கார்களுக்கும் வரி உயர்த்தப்படும். எனவே,இந்த கார்களின் விலையும் ரூ.40,000 வரை அதிகரிக்கும்.
மேலும், இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர கார்களின் மீதான வரி 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் முழுவதுமாக கட்டப்பட்டு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு இது பொருந்தும். இதனால், ரேஞ்ச்ரோவர் எவோக் விலை ரூ.15 லட்சம் வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








