அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது புதிய ஸ்கோடா ஃபேபியா
அடுத்த ஆண்டு பிற்பாதியில் புதிய ஃபேபியா காரை ஸ்கோடா ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. கார் நிறுவனங்களின் விற்பனையில் ஹேட்ச்பேக் கார்கள் முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகின்றன. ஆனால், ஸ்கோடா ஆட்டோ விஷயத்தில் ஃபேபியா அந்தளவுக்கு பங்களிப்பை வழங்கவில்லை.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், டிசைனில் பல மாற்றங்களுடன் புதிய ஃபேபியா காரை ஸ்கோடா அறிமுகம் செய்ய உள்ளது. அந்த நிறுவனத்தின் தாயகமான செக் குடியரசு நாட்டில் புதிய ஃபேபயா முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து, சர்வதேச அளவில் புதிய ஃபேபியாவை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது ஸ்கோடா ஆட்டோ. இப்போது விற்பனையில் இருக்கும் ஃபேபியாவை விட கூடுதல் அகலம் கொண்டதாக புதிய ஃபேபியா இருக்கும்.
வீல் பேஸும் அதிகரிக்கப்பட உள்ளது. இதனால், உட்புறத்தில் தாராள இடவசதியை அளிக்கும் என்பதோடு, பொருட்கள் வைப்பதற்கான இடவசதி தற்போதைய 315 லிட்டரிலிருந்து 350 லிட்டராக அதிகரிக்கும்.
3 சிலிண்டர் டிடிஐ டீசல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களுடன் புதிய ஃபேபியா வர இருக்கிறது. தற்போதைய மாடலைவிட அதிக ஏரோடைனமிக்குடன் டிசைன் செய்யப்படுவதால் மைலேஜ் அதிகரிக்கும்.
மேலும், டிரைவருக்கு கூடுதல் வசதிகளை தரும் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் புதிய ஃபேபியா வர இருக்கிறது. புதிய ஃபேபியாவில் சாட் நேவ் நேவிகேஷன் சிஸ்டம் கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும்.
இதனிடையே, ஃபேபியாவின் எஸ்டேட் வேகன் வெர்ஷனையும் அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








