மழைக்காலத்தில் கார் பராமரிப்பு டிப்ஸ்

மழைக்காலத்திற்கென கார் நிறுவனங்களே தற்போது சிறப்பு பரிசோதனை முகாம்களை நடத்தி வருகின்றன. இருந்தாலும், பெரும்பாலானோர் அங்கு காரை விட்டால் ஒருசில தினங்கள் காத்துக்கிடக்க வேண்டும் என்ற பீதியில் செல்வதில்லை. அவ்வாறு செல்ல முடியாதவர்கள் மழைக்காலத்தில் சில எளிய பராமரிப்பு முறைகளை பின்பற்றுவது அவசியம்.
கார் பராமரிப்பு:
மழைக்காலம் துவங்குவதற்கு முன் காரின் வைப்பர், பிரேக்குகள் சரியாக இருக்கிறதா என்று சோதிப்பது அவசியம். பழுது இருந்தால் நீக்கவும். இல்லையென்றால் அவற்றை புதிதாக மாற்றிவிடவும்.
டயரில் போதுமான ட்ரெட் இல்லையெனில் புது டயர் மாற்றுங்கள். மழைக்காலங்களில் செல்லும்போது ஈரப்பதத்தால் டயரின் கடினத்தன்மை குறைந்து விரைவில் பஞ்சராக வாய்ப்பு இருக்கிறது.
ஹெட்லைட்டுகள் சரியான அளவில் ஃபோகஸ் செய்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளவும். இல்லையெனில் அதை சரியான தூரத்திலும், இடத்திலும் ஃபோகஸ் செய்யும் வகையில் சரிசெய்வது அவசியம்.
பிரேக் மற்றும் ஆக்சிலேட்டர் மேல் பொருத்தப்படும் புட் கவர்கள் தேய்ந்து இருந்தால் மாற்றிவிடுவது அவசியம்.
கார் சர்வீஸ் செய்யும்போது தண்ணீரை வெளியேற்றுவதற்காக இருக்கும் ட்ரெயின் துளைகளில் பிளாஸ்டிக் பிளக்குகள் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். தண்ணீர் தேங்கிய சாலைகளில் செல்லும்போது பிளாஸ்டிக் பிளக்குகள் இல்லையெனில், காருக்குள் தண்ணீர் புகுந்துவிடும்.
மழைக்காலங்களில் கார்களை மரங்களுக்கு அடியில் பார்க்கிங் செய்யவேண்டாம். இரவு நேரங்களில் காரை வெட்டவெளியில் நிறுத்தும் சூழ்நிலை வந்தால், கண்டிப்பாக கவர் போட்டு மூடவும்.
இருக்கைகளில் போர்த்தப்பட்டிருக்கும் துணி கவர்களை அடிக்கடி துவைத்து மாட்டுவது நலம். மிதியடிகளை வீட்டிற்கு வந்தவுடன் தவறாமல் எடுத்து உலர்ந்த இடங்களில் காயவைக்கவும். இல்லையென்றால், காருக்குள் துர்நாற்றம் வீசத்துவங்கும்.
இந்த வழிமுறைகளை கடைப்பிடித்தால் உங்களது கார் புதுமை மாறாமல் இருப்பதோடு எந்த காலத்திலும் இனிமையான பயண அனுபவத்தை பெறலாம்.
மழைக்காலங்களில் கார் ஓட்டுவது எப்படி? நாளை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








