யாரும் சொல்ல மாட்டாங்க... 2-வீலர் ஓட்டும்போது இந்த தவறுகளை மட்டும் பண்ணாதீங்க!! சட்டம் என்ன சொல்லுது?
2-வீலர் ஓட்டுவதற்கு பெட்ரோல் எந்த அளவிற்கு தேவையோ அதே அளவிற்கு ஆவணங்களும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில், சாலை என்பது பொது இடமாகும். அத்தகைய இடத்திற்கு நீங்கள் உங்களது சொந்த வாகனத்தை கொண்டு செல்கிறீர்கள் எனில் அதற்கான அனுமதி ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், அவை என்னென்ன என்பதே பலருக்கு தெரியவில்லை என்பதுதான் இதில் வருத்தமளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. சிலர் அவற்றை பற்றி தெரிந்திருந்தும் எளிதாக உதாசீனப்படுத்தி விட்டு செல்கின்றனர். இதற்கு, போலீசார் கண்டிப்பாக இல்லாததும் ஒரு காரணம் எனலாம்.
இந்தியா போன்ற ஒரு பரந்து விரிந்த நாட்டில் 2-வீலர்களை பயன்படுத்தும் கோடிக் கணக்கிலானோர் அனைவரிடமும் முறையான ஆவணங்கள் அனைத்தும் உள்ளதா என்பதை சரிப்பார்ப்பது கடினமாகும். அதுமட்டுமின்றி, 2-வீலர் பயன்படுத்தும் பெரும்பாலானோர் ஏழை, எளியவர்களாவர். ஆதலால், அதற்கேற்ப சட்டமும் கொஞ்சம் வளைந்து கொடுக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சட்டங்களை கடுமையாக்கினால் 2-வீலர் ஓட்டிகளிடம் இருக்க வேண்டிய ஆவணங்கள் என்ன? என்னென்ன விஷயங்களை அவர்கள் செய்ய கூடாது? என்பனவற்றை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆவணங்கள்: வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளை சாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் உங்களிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளதா என்பதை ஒருமுறைக்கு, இருமுறை சோதித்துக் கொள்வது நல்லது. மோட்டார் வாகன சட்டம் 1988இன் படி, பைக்கின் பதிவு சான்றிதழ், ஓட்டுனரின் 2-வீலர் ஓட்டுனர் உரிமம், 2-வீலர் இன்ஸ்சூரன்ஸ் பாலிசி மற்றும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC) உள்ளிட்டவை உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.
இவையாவும் 18 வயதில் இருந்து 50 வயதிற்குள் இருப்பவர்களிடம் இருக்க வேண்டியவை. 50 வயதிற்கு மேல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களிடம் கூடுதலாக மருத்துவ சான்றிதழும் இருக்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான், மோட்டார்சைக்கிள் ஓட்டுவதற்கு அந்த நபர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தகுதியுடையவர் என்பதை போலீசாரால் அறிய முடியும்.

இன்ஸ்சூரன்ஸ் பாலிசி: மோட்டார் வாகன சட்டம் 1988இன் படி, இந்திய சாலைகளில் இயக்கப்படும் 2-வீலர்கள் அனைத்தும் குறைந்தது 3ஆம் தரப்பினர் இன்ஸ்சூரன்ஸை ஆவது வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான், உங்களது இரு சக்கர வாகனத்தால் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க முடியும். இன்ஸ்சூரன்ஸ் பாலிசி இல்லாத மோட்டார்சைக்கிள்களுக்கு அபராதம் விதிக்கவும், 2-வீலரை பறிமுதல் செய்வதற்கும் போலீசாருக்கு அதிகாரம் உள்ளது.
எக்ஸ்பிரஸ்வே கூடாது: விரைவுச்சாலைகளுக்கும், நெடுஞ்சாலைகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. விரைவுச்சாலைகள் 4-சக்கர வாகனங்களுக்கும், கனரக வாகனங்களுக்கும் மட்டுமே ஆகும். 2-சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் விரைவுச்சாலைகள் இந்தியாவில் மூன்றே மூன்று மட்டுமே உள்ளன. அந்த மூன்றும் வட இந்தியாவில் உள்ளன. ஆகையால், விரைவுச்சாலைகளில் பைக் ஓட்டி சிக்கிக் கொள்ளாதீர்கள். சமீப காலமாக போடப்படும் விரைவுச்சாலைகளுக்கு அருகில் 2-வீலர் & 3-வீலருக்கான சாலைகளும் அமைக்கப்படுகின்றன.

PUC-ஐ அவ்வப்போது அப்டேட் செய்யவும்: புது 2-வீலரின் PUC ஆனது 1 வருடத்திற்கு மட்டுமே செல்லப்படி ஆகும். அதன்பின், அந்த வாகனத்தில் இருந்து எந்த அளவிற்கு கார்பன் மாசு உமிழப்படுகிறது என்பதை சோதனை செய்து PUC-ஐ அப்டேட் செய்ய வேண்டும். இதனை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சி மூலமாக ஒவ்வொரு 6 மாத காலத்திற்கும் ஒருமுறை மேற்கொள்ள வேண்டும்.
மாடிஃபிகேஷன்ஸ் கூடாது: கார்களை போன்று, 2-வீலர்களை மாடிஃபிகேஷன்ஸ் செய்வதற்கும் இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அதிக சத்தம் தரும் வகையில் எக்ஸாஸ்ட் குழாயை மாற்றுவது, 2-வீலரின் வடிவத்தை மாற்றுவது, பிரகாசமான ஒளியை தரக்கூடிய விளக்குகளை பொருத்துவது, வாகனத்துடன் பொருந்தாத டயரை பொருத்துவது உள்ளிட்டவை மோட்டார் வாகன சட்டம் 1988-க்கு புறம்பானது ஆகும். 2-வீலரின் நிறத்தை மாற்றுவதாக இருந்தால் கூட அது குறித்து ஆர்டிஓ-வில் முறையாக தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொரு 2-வீலரையும் அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல்வேறு ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகே விற்பனைக்கு கொண்டுவருகின்றன. அப்படியிருக்கையில், 2-வீலர்களை உங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதும், அவற்றை பயன்படுத்துவதற்கு முறையான அனுமதி ஆவணங்களை வைத்தில்லாததும் எந்த விதத்தில் நியாயமானதாக இருக்கும்? ஆனால், இப்போதும் இந்தியாவின் பல கிராமங்களிலும், நகரங்களிலும் முறையான ஆவணங்கள் இன்றி, மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட 2-வீலர்கள் பயன்படுத்தப்படுவதை பரவலாக பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications









