நீண்ட கால கார் கடன் திட்டங்கள்... 'விட்டில் பூச்சி' ஆகிவிடாதீர் மக்களே!
கொரோனா பாதிப்பை கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்டு வரும் சிறப்பு கார் கடன் திட்டங்கள் கார் வாங்க திட்டமிட்டிருப்போரின் ஆசையை உந்தி வருகிறது. ஆனால், இந்த சிறப்பு கார் கடன் திட்டங்கள் குறித்து நிதானமாக முடிவு எடுப்பது அவசியமாகிறது. இதன் சாதக, பாதகங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு காரணமாக, தொழில்கள் முடங்கி இருப்பதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலை பறிப்பு, சம்பள குறைப்பு, தொழில் நசிவு காரணமாக நிலைமை சீராகும் வரை புதிய கார் வாங்கும் திட்டத்தை பலர் ஒத்திபோடும் வாய்ப்பு இருக்கிறது.

மறுபுறத்தில் கொரோனா அச்சம் காரணமாக, பொது போக்குவரத்தை தவிர்த்து சொந்த வாகனம் வாங்கும் திட்டத்திலும் பலர் உள்ளனர். இவற்றை மனதில் வைத்து கார் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளில் முன்னணி நிறுவனங்கள் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. கார்களுக்கான சேமிப்புச் சலுகைகள் தவிர்த்து, நீண்ட கால அடிப்படையிலான கார் கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

இதன்மூலமாக, கார் வாங்கும் திட்டத்தை ஒத்திப்போட நினைப்பவர்களுக்கு இந்த சிறப்பு கார் கடன் திட்டங்கள் ஓரளவு தீர்வை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மூன்று மாதங்களுக்கு மாதத் தவணை கட்டும் அவசியம் இல்லாத திட்டம், மாதத் தவணையை திருப்பிச் செலுத்துவதற்கு அதிக ஆண்டுகள் கால அவகாசம் தரும் திட்டங்களும் எல்லோரையும் ஈர்க்கும் வகையில் உள்ளன.

இந்த நிலையில், சிறப்பு கார் கடன் திட்டங்களை தேர்வு செய்யும்போது நிதானமாக முடிவு செய்வது அவசியம். பொதுவாக நீண்ட கால கடன் திட்டங்களை தேர்வு செய்யும்போது அதிக வட்டியை தலையில் சுமந்து கொண்டே காரை ஓட்டும் நிலை ஏற்படும்.

பொதுவாக, கார் கடன்களை 5 ஆண்டுகளுக்கு மிகாமல் போடுவதே சிறந்தது. தற்போது உள்ள நிலைமையை வைத்து தடாலடியாக முடிவு எடுத்து நீண்ட கால கடன் திட்டத்தில் விழுந்துவிட வேண்டாம்.

அதேநேரத்தில், நீண்ட கால கடன் திட்டத்தை தேர்வு செய்யும்போது மாதத் தவணை வெகுவாக குறைத்து கட்டும் வாய்ப்பை வழங்கும். சரி, இப்போது இந்த திட்டத்தை வைத்து கார் வாங்க முடிவு செய்தாலும், இந்த கார் கடனை 5 ஆண்டுகளில் முன்கூட்டியே முடித்து விடுவதற்கான திட்டத்துடன் உங்களது குடும்ப பொருளாதார நிலையை சீர்தூக்கி பார்த்து, தேர்வு செய்வதே நல்லதாக இருக்கும்.

அதேபோன்று, காரின் மதிப்பும் 5 ஆண்டுகளுக்கு மேல் வெகுவாக குறையும். இவற்றை மனதில் வைத்து நீண்ட கால கார் கடன் திட்டங்களை தேர்வு செய்வது அவசியம். மேலும், முன்கூட்டியே செலுத்துவதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவும்.

அதேபோன்று, ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் கடன் வழங்கும் திட்டங்களும் அதிக வட்டி கொண்டதாகவே இருக்கும். இப்போது என்னிடம் அதிக முன்பணம் செலுத்துவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், மாதத் தவணையை சரியாக செலுத்த முடியும் என்பவருக்கு இது சரியான திட்டமாக இருக்கும். ஆனால், இதிலும் அதிக வட்டியை செலுத்தும் நிலை உண்டு.

குறைந்தது 20 முதல் 30 சதவீத முன்பணம் கட்டி, மீதமுள்ள தொகையை கடனாக போட்டுக் கொண்டால் ஓரளவு கடன் சுமையை குறைத்துக் கொள்ள முடியும். சரியான கால அளவிலும் அந்த கார் கடனை முடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

ஸ்டெப் அப் கார் கடன் மற்றும் பலூன் கார் கடன் திட்டங்களும் கவர்ச்சிகரமாக இருந்தாலும், அதிலுள்ள கணக்கீடுகளை சரியாக தெரிந்து கொண்டு உங்களது பொருளாதார நிலையை ஒப்பிட்டு வாங்குவதே நல்லது.

அதேபோன்று, யூஸ்டு கார் வாங்க நினைப்பவர்கள் பொதுவாக கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அல்லது விலை உயர்ந்த காரை வாங்கும்போது கடன் தவிர்க்க முடியாது என்று எண்ணினால், 3 முதல் 4 ஆண்டுகளில் கடனை முடித்துவிடும் வகையில் கடனை தேர்வு செய்யவும். இல்லையெனில், விட்டில் பூச்சி கதையாகிவிடும்.


Click it and Unblock the Notifications








