டோல் பூத் எல்லாம் காணாமல் போக போகுது! இனிமே பணம் செலுத்துவது எப்படி? முழு விளக்கம்!
எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் மேம்பட்ட தரத்திலான சாலைகள் அவசியமாகும். இதனை நன்கு புரிந்துக் கொண்டதினாலேயே நாடு முழுவதும் விரைவுச்சாலைகளை மத்திய அரசு தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. ஆனால், புதியது, புதியதாக விரைவுச்சாலைகளை அமைப்பதற்கும், அவற்றை தொடர்ந்து பராமரிப்பதற்கும் பெரிய தொகையில் நிதி தேவைப்படுகிறது. அது மொத்தத்தையும் அரசாங்கத்தால் தயார் செய்ய முடியாது என்பதால், விரைவுச் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் இருந்தும் வசூல் செய்யப்படுகிறது.
இதற்காகவே, நாடு முழுவதும் விரைவுச்சாலைகளில் சுங்க கட்டணங்களை வசூலிப்பதற்கான சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், அவ்வாறு அமைக்கப்படும் சாவடிகளினாலேயே பல நேரங்களில் தாமதம் ஏற்படுகிறது. ஒரு சில சமயங்களில் மணிக்கணக்கில் கூட சுங்கச்சாவடியில் கட்டணத்தை செலுத்த நிற்க வேண்டியுள்ளது. இதனை சரிச்செய்யும் விதமாக, வாகனத்தை நிறுத்தாமலேயே சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்தும் வசதியை கொண்டுவர கடந்த பல மாதங்களாகவே மத்திய அரசு தயாராகி வருகிறது.

அதன் முதற்கட்டமாக, குஜராத்தின் சூரத்தில் பருச் பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண்:48 வழித்தடத்தில், வாகனத்தை நிறுத்தாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது எவ்வாறு செயல்படும் என்பதில் உங்களில் சிலருக்கு இன்னமும் சந்தேகங்கள் இருக்கலாம். அவற்றை தீர்க்கும் விதமாக, இந்த தொகுப்பில் இந்த புதிய டோல் பூத் (Toll Booth) சிஸ்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்க போகிறோம்.
செயல்பாடுகளை பொறுத்தவரையில், வழக்கமான டோல்-பூத் போன்று தான் இந்த சிஸ்டமும் செயல்படும். அதாவது, அந்த வழியாக செல்லும் வாகனங்களை சரிப்பார்த்து, அவை சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்தால் அதை வசூல் செய்யும். ஆனால், இவை அனைத்தும் இணையம் வாயிலாக நடைபெறும் என்பதால், வாகனத்தை நிறுத்த வேண்டியதில்லை.

வாகனத்தை பற்றிய சரிப்பார்ப்பு பணிகள் அனைத்தும் எங்கோ அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் பணியாளர்களால் மேற்கொள்ளப்படும். வழக்கமான டோல் பூத்களிலும் இதே பணிகள் தான் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அவை அந்தந்த நேரங்களில் மேற்கொள்ளப்படுவதினால் தான் தாமதங்கள் ஏற்பட்டு, வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்க வேண்டியதாக உள்ளது. இந்த பணிகள் இணையம் வாயிலாக மேற்கொள்ளப்படும் போது, வாகன ஓட்டிகள் தொடர்ந்து பயணம் செய்யலாம்.
சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், அந்த தொகை நேரடியாகவும், ஆட்டோமேட்டிக் ஆகவும் உங்களது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். அதாவது, சாலையில் செல்லும் வாகனங்களை எவ்வாறு எங்கோ ஒரு கட்டிடத்திற்குள் அமர்ந்திருப்பவர்களால் அடையாளம் காண முடிகிறது... இதற்காக தான் சாலைக்கு மேலே கம்பிகள் கட்டப்பட்டு இருப்பதை காணலாம்.
இந்த கம்பிகளில் அதேவேக ஃபாஸ்டேக் RFID ரீடர்ஸ், தன்னிச்சையாக வாகனங்களின் நம்பர் பிளேட்டை அடையாளம் காணும் வசதி (ANPR) கொண்ட கேமராக்கள், அட்வான்ஸான சென்சார்கள் மற்றும் சாலையில் எந்த பாதையில் வாகனம் செல்கிறது என்பதை அடையாளம் காணும் இண்டிகேட்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக, வாகனங்கள் மணிக்கு 150கிமீ வேகத்தில் சென்றாலும் அதன் வாகன பதிவு எண்ணை அடையாளம் காண முடியும் என கூறப்படுகிறது.
மேலும் இதன் மூலமாக, வாகனம் ஃபாஸ்டேக் (FASTag) கொண்டுள்ளதா என்பதையும் கூட அடையாளம் காண முடியும். ஒருவேளை ஃபாஸ்டேக் RFID-ஆல் வாகனத்தின் ஃபாஸ்டேக்கை அடையாளம் காண முடியவில்லை எனில், ANPR கேமராக்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டின் தெளிவான புகைப்படத்தை காட்சிப்படுத்தும். அதன்பின், அந்த விபரங்கள் VAHAN தளத்திற்கு அனுப்பப்பட்டு வாகனம் மற்றும் அதன் உரிமையாளரின் விபரங்கள் சரிப்பார்க்கப்பட்டு சுங்கச்சாவடி கட்டணம் விதிக்கப்படும்.
ஒருவேளை வாகனத்திற்கு ஃபாஸ்டேக் இல்லையென்றாலோ அல்லது வாகனத்தின் பதிவெண் சரியாக பொருந்தவில்லை என்றாலோ அல்லது உரிமையாளரின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லையென்றாலோ ஆட்டோமேட்டிக்காக எச்சரிக்கை உடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையின் வழிக்காட்டுதலின்படி, சுங்கச்சாவடி கட்டணத்துடன் அபராதங்கள் விதிக்கப்படும். அத்துடன், இதுகுறித்த விபரங்கள் நேரடியாக தேசிய வாகன பதிவு துறையில் பதிவேற்றம் செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபாஸ்டேக் அனைத்து 4-சக்கர வாகனங்களுக்கும் (தனிப்பட்ட மற்றும் கமர்ஷியல்) கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும் முறையை எளிதாக்கவும், விரைவாக்கவும் ஃபாஸ்டேக் முறை கொண்டுவரப்பட்ட நிலையில், வாகனத்தை நிறுத்தாமல் கட்டணம் செலுத்தும் இந்த புதிய முறையானது இன்னும் எளிமையான செயல்பாடுகளுக்காக கொண்டுவரப்படுகிறது.
தற்போதைக்கு குஜராத்தின் சூரத் உள்பட மிகவும் சில நெடுஞ்சாலைகளில் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய முறையானது வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகளிலும் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதனால், 4-சக்கர வாகனங்களில் பயணிப்போர் தங்களது வாகனங்களில் போதிய பணம் இருப்பு இருப்பதை எப்போதும் உறுதிச் செய்துக் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications








