காரில் புது பிரேக் மாற்றிய பிறகுதான் சத்தம் வரும்! மெக்கானிக்கிடம் முன்கூட்டியே கேட்க வேண்டிய 3 கேள்விகள்!
எந்தவொரு காரிலும் முதலாவதாக சேதமடையும் பாகங்களுள் ஒன்று பிரேக் பேட் ஆகும். இதனாலேயே அதனை அடிக்கடி மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. புதியதாக பிரேக் பேட் மாற்றுவதால் பணம் செலவாகும் என்பதை விட, அதனால் ஏற்படும் இரைச்சல் தான் பெரும் தலைவலியாகும். பிரேக் பேடை தான் மாற்றிவிடுகிறோமே, பின்னர் ஏன் இரைச்சல் வருகிறது என உங்களில் சிலருக்கு கேள்வி எழலாம்.
இதே கேள்வி தான் நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் வாசகர் ஒருவருக்கும் எழுந்துள்ளது. இதனை அவர் தனது மெக்கானிக்கிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த மெக்கானிக், கொஞ்சம் நாளுக்கு இவ்வாறுதான் இரைச்சல் வரும், பின்னர் அது தானாக சரியாகிவிடும் என்று சொல்லி இருக்கார். இதை நம்பலாமா? நம்ப வேண்டாமா? என்கிற குழப்பத்தில் இருந்த அந்த வாசகர், அதுகுறித்து நம்மிடம் வினாவி உள்ளார்.

வாசகரிடம் அவரது மெக்கானிக் கூறுவது உண்மைதான். பொதுவாகவே புதிய பிரேக் பேட்கள் ஆரம்பத்தில் 100- 300கிமீ-க்கு இரைச்சலை ஏற்படுத்தும். அதன் பிறகும் இரைச்சல் தொடர்ந்தால் தான் பிரச்சனையே. 200கிமீ-ஐ தாண்டிய பிறகு இரைச்சல் பெரிய அளவிற்கு குறைந்துவிடும். அதை வைத்தே இந்த இரைச்சல் அதன்பின் தொடருமா, இல்லையா என்பதை கணித்துவிடலாம். புதிய பிரேக் பேட்களினால் இரைச்சல் ஏற்படுவதற்கு நான்கு முக்கியமான காரணிகள் உள்ளன. அவையாவன,
லூப்ரிகேஷன் (உயவுத்தன்மை) இல்லாதது
புதிய பிரேக் பேட்களின் பின்பக்க உலோகப் பகுதி, பிரேக் காலிப்பருடன் மிக வேகமாக மோதி அதிர்வுகளை உருவாக்குகிறது. இந்த உராய்வுதான் காதை கிழிக்கும் அளவிற்கு அதிகப்படியான சத்தத்தை ஏற்படுத்துகிறது. இதற்கான தீர்வு என்னவென்றால், பிரேக் பேட்களை கழற்றி, உலோகத்துடன் அது இணைக்கப்பட்ட புள்ளிகளில் பிரத்யேக பிரேக் கிரீஸ் அல்லது ஆன்டி-சீஸ் பேஸ்ட்டை தடவினால் போதும், சத்தம் நொடியில் மாயமாய் மறைந்துவிடும்.

பிரேக் கிளேசிங்
புதிய பிரேக் பேட்கள் நன்றாக செட் ஆவதற்கு முன்பே, நாம் திடீரென கடுமையான பிரேக் பிடிக்கும்போது அங்கு உருவாகும் வெப்பம், பிரேக் பேடின் மேற்பரப்பை கண்ணாடி போல் பளபளப்பாகவும், வழுவழுப்பாகவும் மாற்றிவிடும். இதைத்தான் 'பிரேக் கிளேசிங்' என்கிறார்கள். இந்த வழுவழுப்பான பரப்பை எமரி பேப்பர் அல்லது மணல் காகிதம் கொண்டு மெதுவாகத் தேய்த்து சொரசொரப்பாக்கினால், பிரேக் மீண்டும் பழையபடி கச்சிதமாகச் செயல்படத் தொடங்கும்.
பழைய பிரேக் ரோட்டர்கள்
புத்தம் புதிய பிரேக் பேட்களை, தேய்ந்துபோன அல்லது கரடுமுரடான பழைய பிரேக் ரோட்டர்களில் (வட்டுகளில்) பொருத்தினால், சமமற்ற அந்தத் தொடர்பு, புதிய பேட்களை அதிர்வடையச் செய்து சத்தத்தை உருவாக்கும். இதற்கு தீர்வு என்னவென்றால், லேத் (Lathe) இயந்திரம் மூலம் பழைய ரோட்டர்களை சீரமைத்து சமமாக்க வேண்டும். ஒருவேளை அவை மிகவும் மெலிதாகி இருந்தால், புதிய ரோட்டர்களை மாற்றுவதே சிறந்தது.
விடுபட்ட சில சிறிய உதிரிபாகங்கள்
கவனக்குறைவாக புதிய பிரேக் பேட்களை மாற்றும்போது, பெரும்பாலும் பழைய ஆன்டி-ஸ்கீல் ஷிம்கள் (Anti-squeal shims) (பிரேக் பேடின் பின்னால் இருக்கும் மெல்லிய உலோகத் தகடுகள்) அல்லது டென்ஷன் ஸ்பிரிங்குகளைப் பொருத்த மறந்து விடுகிறார்கள். இந்தச் சிறிய பாகங்கள் இல்லாததால் பிரேக்கிங் அமைப்பில் அதிக சத்தம் எழுகிறது. விடுபட்ட அசல் ஷிம்களை மீண்டும் பொருத்துவது அல்லது புதிய ஹார்ட்வேர் கிட்டை வாங்கிப் பயன்படுத்துவது இந்தச் சத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரேக் பேட்களில் இரைச்சல்கள் காருக்கு வெளியே, கார் இயங்கும்போது மட்டும் தானே ஏற்பட போகிறது, இதனால் உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு என்ன பிரச்சனை வந்துவிட போகிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இவ்வாறான பிரச்சனையை எதிர்கொண்ட கார் ஓட்டிகளிடம் சென்று கேட்டுப் பாருங்கள், இது எவ்வளவு தலைவலி பிடித்த விஷயம் என்று.
ஏனெனில், பிரேக் பேட்களில் உருவாகும் இரைச்சல்கள் ஜன்னல் கண்ணாடிகளை முழுமையாக மூடியிருந்தாலும் எப்படியோ காரின் கேபினுக்குள் நுழைந்து விடுகின்றன. மெக்கானிக் கூறுவதை போல சில 100கிமீ தொலைவிற்கு இந்த இரைச்சல்களை சகித்துக் கொண்டு பயணம் செய்யலாம். அல்லது, மேற்கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி இந்த இரைச்சல்களை தவிர்க்கலாம்.
வாசகர் கேட்ட கேள்வியின் ஸ்க்ரீன்ஷாட் படம் சேர்க்கப்பட்டது.


Click it and Unblock the Notifications