குழந்தை இருக்கும் காரில் எது இருக்கிறதோ இல்லையோ இது இருக்கணும் - நம்மில் நிறைய பேர் ஃபாலோ செய்வது இல்லை...
கேரளாவில் காரில் தாயின் மடியில் அமர்ந்திருந்த 2 வயது குழந்தை விபத்தின்போது உயிரிழந்த செய்தியை சமீபத்தில் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். கேரளாவின் மலப்புரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் கார் டேங்கர் லாரி மீது மோதியதில், காரினுள் ஏர்பேக் விரிவடைந்ததினால் அந்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த உயிரிழப்புக்கு காரணம் குழந்தையின் பெற்றோர்களே ஆவர். ஏனெனில், கார்களிலும், பைக்குகளிலும் குழந்தைகளை அழைத்து செல்லும்போது பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
காரில் பாதுகாப்புக்காக வழங்கப்படும் ஏர்பேக் மற்றும் சீட் பெல்ட் உள்ளிட்டவை வளர்ந்த பெரியவர்களுக்கும், குறிப்பிட்ட வயதை எட்டிய சிறுவர், சிறுமியர்களுக்கும் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முறையாக நடக்க கூட தெரியாத குழந்தைகளுக்கு காரில் இடம்பெறும் ஏர்பேக் மற்றும் சீட் பெல்ட் கூட விபத்து சமயங்களில் பெரிய பிரச்சனையாக இருக்கலாம்.

ஆதலால், சினிமா திரைப்படங்களை பார்த்து ஜாலியாக கார் ஓட்டும் கணவருடன் அருகில் அமர்ந்துக் கொண்டு, குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே பயணிக்கலாம் என்பதை எல்லாம் தவிர்க்க பாருங்கள். கார் மோதல்களில் சிக்கும் சமயத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடையும் ஏர்பேக் ஆனது 900 கிலோ விசையை ஏற்படுத்தக்கூடியது என்கின்றனர். திடீரென ஏற்படும் இந்த அதிக விசையை பெரிய மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியும்; ஆனால் குழந்தைகளால் இயலாது.
இது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக கூட முடிய கூடும். ஆதலால், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமியர்களை காரின் முன் இருக்கையில் அமர வைக்க வேண்டாம். எந்தவொரு காரிலும் பின் இருக்கை வரிசை தான் பாதுகாப்பானது. பின் இருக்கையிலும் 8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு சீட் பெல்ட் சரியாக பொருந்தாது. ஒரு சில சிறுவர், சிறுமியர்களுக்கு 12 வயது ஆகும் வரையில் கூட கார் சீட் பெல்ட் பொருந்துவதில்லை.

ஆதலால், அத்தகைய குழந்தைகளை பிரத்யேகமான குழந்தை இருக்கைகளில் அமர வைப்பது நல்லது. காரின் மாடலுக்கும், இருக்கை அளவுக்கும் ஏற்ப குழந்தை இருக்கைகள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை வாங்கி காரில் பொருத்திக் கொள்ளலாம். தேவையில்லாத சமயங்களில் அவற்றை நீக்குவதும் எளியது. ஒரு சிலர் குழந்தைக்கான இருக்கையை முன் இருக்கையில் பொருத்துவர்; அது தவறு ஆகும். பின் இருக்கை வரிசையை மட்டுமே குழந்தைகளை அமர வைக்க பயன்படுத்தவும்.
குழந்தை இருக்கையில் குழந்தையை அமர வைத்த பின்னர் சீட் பெல்ட் அவர்களுக்கு சரியாக இருக்கும். ஒரு சிலர் மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு தனக்கும் குழந்தைக்கும் சேர்த்து சீட் பெல்ட்டை அணிந்துக் கொள்வர். இதுவும் விபத்தின்போது ஆபத்தில் சென்று முடியலாம். இன்னும் சில பேர் ஒரே இருக்கையில் 2 குழந்தைகளை அமர வைத்து இருவருக்கும் சேர்த்து சீட் பெல்ட்டை அணிய வைப்பர். இதுவும் தவறு ஆகும்.

இவை எல்லாத்தையும் விட பெரிய தவறாக, ஒரு சிலர் குழந்தையை மடியில் அமர வைத்துக் கொண்டு கார் ஓட்டுவதை பார்த்திருப்பீர்கள். 2-வீலர் ரைடிங்கை பொறுத்தவரையில், 4 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் பைக்கில் பயணம் செய்யும்போது கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். 4 வயதிற்கு மேல் உள்ள குழந்தை ஒரு பயணியாக கருதப்படுவார். ஆதலால், 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தை உடன் சேர்த்து இன்னொரு பயணியையும் 2-வீலரில் அழைத்து செல்ல வேண்டாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மோட்டார் சட்டங்களை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தை காட்டிலும் உயிர் முக்கியமாகும். ஆதலால், அபராதத்திற்காக இல்லாமல், உயிருக்கு பயந்து இவ்வாறான செயல்களில் ஈடுப்படாதீர்கள். முக்கியமாக, காரில் முன் இருக்கையில் குழந்தைகளை அமர வைக்க வேண்டாம். பைக்கில் செல்லும்போது 4 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அணிவிக்க முயலுங்கள்.


Click it and Unblock the Notifications









