மழைக்காலத்தில் காரில் இதையெல்லாம் சரிப்பார்க்காம போய் மாட்டீக்காதீங்க!! சிம்பிளான விஷயங்கள் தான் எல்லாம்...
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சுட்டெரித்து வந்த கோடை வெயில் காலம் ஒருவழியாக முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது. இனி மழைக்காலம் ஆரம்பித்துவிடும். மழைக்காலங்களில் ஈரமான சாலையிலும், மழைநீர் தேங்கிய சாலைகளிலும் கார் ஓட்டும் முன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்...
டயர்கள் பராமரிப்பு: மழைக்காலங்களில் ஈரமான சாலைகள் பெரிய பிரச்சனை ஆகும். ஆதலால் அத்தகைய நேரங்களில் உங்களது காரின் டயர்கள் வழுக்கக்கூடியதாக இல்லாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக, டயர்களில் ஆழமான ட்ரெட் இருத்தல் அவசியமாகும். மழைக்காலம் துவங்கிவிட்டது என்றால் முடிந்தவரையில் புதிய டயர்களை காரில் பொருத்த முயலவும்.

விண்ட்ஷீல்ட் வைபர்களின் முறையான செயல்பாடுகள்: டயர்களுக்கு அடுத்து மழைக்காலத்தில் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக உழைக்கும் கார் பாகம் விண்ட்ஷீல்டு வைபர்கள் ஆகும். கண்ணில் தூசி உடன் எவ்வாறு வாகனத்தை ஓட்ட முடியாதோ அதேபோன்று, மழைக்காலத்தில் வைபர்கள் இல்லாமல் கார் ஓட்டுவது கடினமாகும். வைபர்கள் முறையாக செயல்பட்டாலும், வைபர்களின் பிளேட்கள் சேதமடையாமல், நல்ல நிலையில் உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளவும்.
விளக்குகள் அனைத்தும் ஒளிர வேண்டும்: பனி காலத்தை போல், மழைக்காலத்திலும் காரின் விளக்குகளின் ஒளி நீண்ட தொலைவிற்கு செல்ல முடியாமல் தடுக்கப்படலாம். இது எதிர்வரும் வாகனங்களுக்கு தெரியாமல் போகும் பட்சத்தில் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால், நன்கு பிரகாசமாக ஒளியை வெளியிடக்கூடிய பல்புகள் காரின் ஹெட்லைட்கள், டெயில்லைட்கள், பிரேக் லைட்கள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.

பிரேக்குகள்: டயர்கள் நல்ல நிலையில் இருந்தாலும், அவற்றின் இயக்கத்தை நிறுத்த காரின் பிரேக் சிஸ்டங்கள் முறையாக செயல்பட வேண்டியது கட்டாயம் ஆகும். மழைக்காலத்தில் நல்ல நிலையில் பிரேக் சிஸ்டங்கள் இருக்க வேண்டியது இன்னும் அவசியம். பிரேக் கொடுக்கும்போது இரைச்சல்கள் ஏற்படுவது மற்றும் மிகவும் இறுக்கமான/ தளர்வான பிரேக் பெடல்கள் காரின் பிரேக் சிஸ்டங்களில் பிரச்சனைகள் உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் ஆகும்.
பேட்டரியை பரிசோதிக்கவும்: மழைக்காலங்களில் காரின் பேட்டரி வழக்கத்தை விட அதிக சிரமத்திற்கு உள்ளாகலாம். குறிப்பாக, மழைநீர் படுவதால் கார் பேட்டரியில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படலாம். அதேபோன்று பேட்டரி உடன் இணைக்கப்பட்ட வயர்கள் கனெக்ஷன் விட்டு போவதற்கும் வாய்ப்புள்ளது. இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன்பாக, மழைக்காலம் துவங்கியதும் பேட்டரியின் நிலையை அறிந்து, அதனை புதியதாக மாற்ற வேண்டியிருந்தால் மாற்றிவிடுவது நல்லது.

திரவங்களின் அளவை சோதிக்கவும்: ஏற்கனவே கூறியதுபோல், மழைக்காலத்தில் காரின் என்ஜின் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். இதனால் என்ஜினை குளிர்விக்கும் அமைப்பும் அதிகம் உழைக்கும். இதனால் காரில் என்ஜின் ஆயில், கூலண்ட் & பிரேக் ஆயில்கள் போதுமான அளவு உள்ளதா என்பதை அவ்வப்போது சரி பார்த்து கொள்ளவும். அதேபோன்று, ஜன்னல்களில் நீர் படுவதை தடுக்கும் ஆயில்களையும் உபயோகிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மழைக்காலத்தில் கார் ஓட்டுவது நீங்கள் நினைப்பதை காட்டிலும் சவாலானது. குறிப்பாக, மழைநீரின் தாக்கத்தை காரின் அடிப்பாகங்கள் அனைத்தும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆகையால், மேற்கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவது மட்டுமில்லாமல், ஃப்ளாஷ் லைட், கூடுதல் பேட்டரிகள், முதலுதவி பெட்டி, ரெயின்கோட் மற்றும் போன் சார்ஜர் உள்ளிட்டவற்றையும் கார் பயணத்தின் போது உடன் எடுத்து செல்வது சிறந்தது.


Click it and Unblock the Notifications









