பெட்ரோல் கார்கள் கூட பரவாயில்லை, ஆனால் டீசல் கார்கள்... மத்திய அரசு இந்த விஷயத்தில் தெளிவா இருக்கு!!
இந்தியா போன்ற வளரும் நாடுகளில், டீசல் கார்களின் புகழ் எகிறி வருகிறது. ஏனெனில் டீசல் கார்களில் மைலேஜ் சற்று கூடுதலாக கிடைக்கும். அத்துடன், டீசல் கார்கள் ஓட்டுவதற்கும் மென்மையானதாக இருக்கின்றன. இதனாலேயே பலர், பெட்ரோல் கார்களை வாங்குவதை காட்டிலும், டீசல் கார்களை வாங்க விருப்பப்படுகின்றனர். இத்தனைக்கும், பெட்ரோல் கார்களை காட்டிலும் டீசல் கார்களின் விலைகள் அதிகமாகவே நிர்ணயிக்கப்படுகின்றன.
இருப்பினும், டீசல் கார்களை மக்கள் அதிகளவில் தேர்வு செய்வதற்கு முக்கிய காரணம், இந்திய அரசாங்கத்தால் மானியம் வழங்கப்படுவதால், டீசல் எரிபொருளின் விலை பெட்ரோலை விட குறைவு. ஆனால், டீசல் வாகனங்களை பயன்படுத்துவது நாட்டின் காற்றின் தரத்தில் தீங்கு விளைவிக்கக்கூடியது என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில், எரிக்கப்படும் டீசல் அச்சுறுத்தும் வகையில் கருப்பு நிறமாக மாறி, மக்களுக்கு கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் காற்றின் தரம் குறைவதற்கான முதன்மைக் காரணம், சாலைகளில் டீசல் கார்களின் எண்ணிக்கை அதிவேக அதிகரிப்பது ஆகும். தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை நோக்கிய உலகளாவிய இயக்கம் இருந்தபோதிலும், டீசல் வாகனங்களுக்கான வரவேற்பும் சந்தையும் இந்தியாவில் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் வலுவாக உள்ளதை கூறியே ஆக வேண்டும்.
டீசல் எரிபொருள்கள் பெட்ரோலை விட அதிக மாசுவை ஏற்படுத்தும் என முன்னரே கூறிவிட்டோம். சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய துகள்கள் டீசல் எரிபொருளை எரிப்பதன் மூலம் உருவாகும் மாசு உமிழ்வுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. அவை ஏற்படுத்தும் உடல்ரீதியான சேதங்களுக்கும் மேல், இந்த உமிழ்வுகள் உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன, மன அழுத்தம் அதிகரிப்பது மற்றும் யோசிக்கும் திறன் குறைவது ஆகியவை மாசுபட்ட சூழலில் வாழும்போது காலப்போக்கில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஆகும்.

டீசல் உமிழ்வுகளினால் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுவது மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை உணர்ந்து, இதுதொடர்பாக இந்திய அரசாங்கம் பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. தூய்மையான எரிபொருள்கள், மின்சார வாகனங்கள் (EVகள்) மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பிரச்சாரங்களும் கொள்கைகளும் இதில் அடங்கும். எவ்வாறாயினும், இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், டீசல் கார்களுக்கான விருப்பம் இன்னும் இந்தியர்களின் மனதில் நிலைத்திருப்பதால், செயல்படுத்துவது ஒரு சவாலாகவே உள்ளது.
ஒரு கூட்டாக, இந்தியா தனது போக்குவரத்து விருப்பங்களை மறு மதிப்பீடு செய்ய வேண்டும். டீசல் மற்றும் பெட்ரோல் கார்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்கள் போன்ற தூய்மையான ஆற்றல் மாற்றுகளுக்கு மாறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மாசுபாட்டின் தீங்கான விளைவுகள் குறித்த பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களுடன், டீசல் உமிழ்வு மீதான வலுவான கட்டுப்பாட்டு விதிமுறைகளும் தேவை.

இந்திய மோட்டார் தொழில்துறையில் டீசல் கார்கள் மீதான காதல் பொருளாதார நிலைப்பாட்டில் இருந்து புரிந்துக் கொள்ளக்கூடியதாக இருந்தாலும், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார செலவுகள் புறக்கணிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. அரசும், தொழில்துறையும், நுகர்வோரும் இணைந்து பொறுப்பேற்றால்தான் உண்மையான மாற்றம் ஏற்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் போக்குவரத்து விருப்பத்தேர்வுகளை மறுமதிப்பீடு செய்து தூய்மையான மாற்று எரிபொருள்களை பின்பற்ற வேண்டிய அவசரத் தேவையை இந்தக் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. மத்திய அரசாங்கமும் டீசல் வாகனங்களை விற்பனை செய்வதற்கு விதிக்கப்படும் வரியை அதிரடியாக 10% உயர்த்த திட்டமிட்டு வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானதையும் மறந்துவிட வேண்டாம்.


Click it and Unblock the Notifications









