தயவு செய்து காரை கவர் போட்டு மூடாதீங்க.. ஒரு நாளோ, ரெண்டு நாளோ பத்திரமா நிறுத்திட்டு போங்க!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி நிறுவனங்கள் பல தங்களின் ஊழியர்களுக்கு போனஸ் உடன் சேர்த்து நான்கு நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரை விடுமுறையை அறிவித்திருக்கின்றன. ஆகையால், மக்கள் பலர் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக சொந்த ஊருக்கும், லாங் டூர் செல்லவும் பிளான் போட்டு, புறப்பட தயாராக இருக்கின்றனர். என்ஜாய் பண்ண போறதுலாம் ஒரு பக்கம் இருக்கட்டும், நீங்கள் உங்கள் காரையும் கையோடு எடுத்துப் போக போறீங்களா அல்லது வீட்டுக்கு வெளியவே நிறுத்திவிட்டு போகப் போறீங்களா என்பதை இப்போதே முடிவு செஞ்சுங்க.
ஒருவேளை நீங்கள் சொந்த வாகனத்தை விட்டு பொது போக்குவரத்தில் ஊர் போக போகிறீர்கள் என்றால் உங்களுடைய வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு செல்வது மிகவும் அவசியமானது. தீபாவளியின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் நம்முடைய வாகனம் மிகப் பெரிய ஆபத்துகளில் சிக்க நேரிடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

இதனால்தான், தீபாவளி பண்டிகையின்போது நீண்ட நாட்களுக்கு வாகனங்களை விட்டு போகபோறீர்கள் என்றால் அதை பாதுகாப்பான சூழலில் நிறுத்தி விட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. இதற்கான எந்த ஐடியாவும் இல்லையா?, சரி கவலையை விடுங்க எப்படியெல்லாம் இந்த பண்டிகையின்போது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு போகலாம் என்பதை இங்கே பார்க்கலாம், வாங்க.
பாதுகாப்பான பார்க்கிங்: காரை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு போவதற்கான பார்க்கிங் இடம் இருக்கும் எனில் தயவு செய்து அங்கு காரை நிறுத்திவிட்டு போங்க. இங்கு எதுவும் ஆகாது என அஜாக்ரதையாக வாகனங்களை வெளியே விட்டு செல்ல வேண்டாம். ஏனெனில், ஆண்டுக்கு ஆண்டு வான வேடிக்கை பட்டாசுகளுக்கு மவுசு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த வெடியை வைப்பதில் ஏதேனும் சின்ன சொதப்பல் ஏற்பட்டாலும் அது ஆபத்தான சூழலை ஏற்படுத்துவிடும். மேலும், அதில் இருந்து வெளியேறும் சிறு நெருப்பே போதும் நம்முடைய வாகனத்தை பதம் பார்த்துவிடும். ஆகையால், நீங்கள் சொந்த ஊரிலேயே இருந்தாலும் அந்த வாகனத்தை பாதுகாப்பான, அதாவது, முழுமையாக அடைக்கப்பட்ட பார்க்கிங் நிறுத்திவிட்டு செல்வது மிகவும் நல்லது.
ஆபத்தான இடங்களை தவிர்க்கவும்: நீங்கள் வழக்கமாக வாகனத்தை நிறுத்தும் இடத்தில் பட்டாசு அதிகம் வெடிக்கப்படும் எனில் அந்த இடத்தை ஆபத்தான இடமாக கருதி, அங்கு வாகனத்தை நிறுத்துவதை தவிர்க்கவும். மேலும், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய காய்ந்த மர பட்டைகள், இளைகள் மற்றும் புல் தரைக்கு அருகில் வாகனங்களை நிறுத்துவதையும் தவிர்க்கவும். ஏனெனில் அதில் பிடிக்கக் கூடிய தீயும் வாகனங்களை பதம் பார்க்க நேரிடலாம்.
கார்களுக்கு கவர்களை அணிவதை தவிர்க்கவும்: தீபாவளி பண்டிகையின்போது கார்களுக்கு கவர் அணிவதைக் கட்டாயம் தவிர்ப்பதே நல்லது. ஏனெனில் காய்ந்த சரகுகளை போலவே, கார்கள் மீது போர்த்தப்படும் பாலித்தீன் அல்லது துணி போர்வைகளும் எளிதில் தீப்பிடிக்கும். வெடிகளில் இருந்து குட்டி நெருப்பு துளியும் அதை எளிதில் தீப் பிடிக்கச் செய்துவிடும். அதுதவிர, வாகனத்தையும் அது பதம் பார்க்க தொடங்கிவிடும். ஆகையால், காரை பாதுகாப்பாகக் கூறி கவர்களால் மூடிவிட வேண்டாம்.
காரை புகைப்படம் எடுத்துக் கொள்ளவும்: இவ்வாறு செய்வதனால் இன்சூரன்ஸ் கிளைமிங்கிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். நாம் காரை பாதுகாப்பான இடத்திலேயே நிறுத்திவிட்டு சென்றோம், ஆனால், ஏதோ விபத்தாக அந்த வாகனம் பாதிப்பிற்கு ஆளாகி விட்டது என்பதை இந்த படங்களின் வாயிலாக நம்மால் உறுதிப்படுத்திவிட முடியும். எனவே தடையில்லாமல் இன்சூரன்ஸ் கிளைமையும் பெற்றுக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிகவும் ஆபத்தான பண்டிகையாக தீபாவளி உள்ளது. பட்டாசு வெடிப்பதாலேயே இது மிகவும் ஆபத்தான பண்டிகையாகப் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, வாகனங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக அது காட்சியளிக்கின்றது. ஆகையால், பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்த இடம் இல்லை என்றாலும், அந்த ஓரிரு நாட்களுக்கு மட்டுமாவது பாதுகாப்பான கட்டண பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தவாது முயற்சியுங்கள். இது சில நூறு ரூபாய் செலவை வழங்கினாலும், உங்கள் வாகனத்திற்கு அதீத பாதுகாப்பை வழங்கும். அதிகம் பட்டாசுகளை வெடிக்கும் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளவர்கள் இதைத் தாராளமாக கடைபிடிக்கலாம்.


Click it and Unblock the Notifications








