மனிதாபிமானம்.. தேவை இக்கணம்

புற்றீசல் போல பெருகி வரும் வாகனங்களுக்கு தக்கவாறு விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலை விபத்து செய்தி இல்லாத நாளிதழ்களே என்று கூறும் அளவுக்கு மோசமான நிலை உருவாகியுள்ளது.
சாலை விபத்தில் சிக்கி ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பாதிப்படைவர்களை உரிய நேரத்தில் உதவி கிடைக்காததும் முக்கிய காரணம்.
துடிதுடிப்பவர்களை ஒரு சில நொடிகள் நின்று வேடிக்கை பார்த்து விட்டு கண்டும் காணாமல் செல்லும் மனப்போக்கு அதிகரித்துள்ளது. இதுவே பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது. விபத்துக்கள் எதிர்பார்த்து நடப்பது இல்லை.
எனவே, சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து விபத்தில், பாதிக்கப்படுவர்களுக்கு அலட்சியம் காட்டாமல் உதவி செய்யுங்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்தவுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல உதவுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதும் அவசியம். உரிய நேரத்தில் நீங்கள் செய்யும் உதவி ஒரு உயிரை காப்பாற்றப் போகிறது என்பதை மனதில் வைத்து யோசிக்காமல் களத்தில் இறங்குங்கள்.
மேலும், அவசர வேலை, முக்கிய வேலை என்று யோசிக்காதீர். ஒரு உயிரை காப்பாற்றுவதை விட இந்த உலகில் வேறு அவசர வேலை எதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என்று அலைய வேண்டியிருக்கும் என்று அச்சப்பட வேண்டாம். தற்போது விபத்தில் சிக்குபவர்களை மருத்துவமனையில் உடனே அனுமதிக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சட்டத்தில் பல தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் உதவி செய்ய முன்வரும்போது அடுத்தவர் யோசிக்காமல் முன் வருவார். எனவே, விபத்தில் சிக்கி துடிதுடிப்பவர்களின் உயிரை மட்டுமல்ல, மறந்துபோன மனிதாபிமானத்தையும் சேர்த்து காக்க முன் வாருங்கள்.


Click it and Unblock the Notifications








