ஹெல்மெட் இல்லா பயணம்: நொடியில் மரணம்

ஹெல்மெட் அணியாமல் செல்வதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக வியர்வையால் பொடுகு பிரச்னை வந்து தலைமுடி கொட்டி விடும், ஜலதோஷம் பிடித்துவிடும் என்ற கருத்துக்கள் நிலவுகின்றன. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்," தலையில் சூழப்பட்டிருக்கும் தோல் தண்ணீர் புகாதவாறு மிக பாதுகாப்பான அமைப்பை கொண்டது.
தலையிலிருந்து வியர்வை தோலுக்குள் இறங்கி ஜலதோஷம் பிடிக்கும் என்பது தவறான நம்பிக்கை. அதேவேளை, ஹெல்மெட் அணிவதன் மூலம் அதிக வியர்வை வெளியேறும்.
நல்ல பருத்தி துணியை தலையில் கட்டிக் கொண்டு ஹெல்மெட் அணிவதன் மூலம் பொடுகு பிரச்னையை தவிர்க்கலாம். மேலும், சரியான அளவு கொண்ட ஹெல்மெட்டுகளை வாங்கி அணிவதும் மிக முக்கியம். காற்றோட்டம் சீராக இருக்கும் பட்சத்தில் தலையிலிருந்து வெளியேறும் வியர்வையின் அளவை ஓரளவு குறையும்.
தவிர, நல்ல ஷாம்பூ பயன்படுத்தி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலை குளித்தாலும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்," என்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும், தரமற்ற ஹெல்மெட்டுகளை வாங்கி அணிவதையும் தவிர்க்க வேண்டும். சில சமயம் தரமற்ற ஹெல்மெட்டுகள் விபத்துக்களின்போது உடைந்து தலையில் காயத்தை ஏற்படுத்தும். அவையே உயிருக்கும் உலை வைக்கும் ஆபத்தும் இருக்கிறது.
எனவே, நல்ல பிராண்டு ஹெல்மெட்டுகள்ை வாங்குவதும் அவசியம். ரூ.850 முதல் ரூ.2,500 விலையிலேயே தரமான ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. ஹெல்மெட் வாங்கும்போதே தாடையை முழுவதுமாக மூடும் வடிவமைப்பு கொண்ட ஹெல்மெட்டுகளை வாங்கி அணிவதும் கட்டாயம் என்கின்றனர் நிபுணர்கள்.
உயிரா, முடியா... நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் ..!!


Click it and Unblock the Notifications








