ரோடு ஈரமா இருக்கும் போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! நிறைய பேரு அசால்ட்டா தவிர்க்கும் விஷயம்!
வருட இறுதி மாதங்களில் இந்தியா முழுவதும் மழை பரவலாக பெய்யும் என்பது நமக்கு தெரிந்த விஷயமே. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் துவங்கிய பருவ மழை பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வருகிறது. தற்சமயம், தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை வெளுந்து வாங்குகிறது.
இதனால், இந்த பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் நீரில் அடித்து செல்லும் காட்சிகளை வீடியோக்களில் பார்க்க முடிகிறது. இந்தியாவில் மழைக்காலம் சாலைகளில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பல சவால்களை அளிக்கிறது. குறைந்த தெளிவான பார்வை, வழுக்கும் சாலைகள் முதல் வெள்ளம் சூழ்ந்த பாதைகள் வரை என மழை பெய்யும் போதும், அதற்குப் பிறகும் வாகனம் ஓட்டுவது ஒரு கடினமான அனுபவமாக இருக்கும்.

இத்தகைய சூழல்களில் எந்தவொரு செயலையும் முன்னெச்சரிக்கை இன்றி மேற்கொள்ள வேண்டாம். விழிப்புணர்வு இல்லாமை அல்லது தவறான முடிவெடுப்பது பேரழிவுகளுக்கு வழிவகுக்கும். இந்த கட்டுரை இந்தியாவில் ஈரமான சாலைகளில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்காட்டுகிறது மற்றும் இந்த சவால்களை கடந்து செல்ல சில பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
மழையானது சுற்றுச்சூழலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஈரமான சாலைகள் அதிகம் வழுக்கும் தன்மை கொண்டவை. இவை, வாகனத்தின் டயர்கள் மற்றும் சாலை மேற்பரப்புக்கு இடையே உள்ள உராய்வைக் குறைக்கும். இது குறிப்பாக, சடர்ன் பிரேக்கிங் அல்லது திருப்பும்போது, ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களைக் கட்டுப்படுத்துவதை கடினமாக்குகிறது. மேலும், மழையின் போது பார்வைத்திறன் வெகுவாகக் குறைகிறது.

கனமழையால் உருவாகும் குட்டைகள் சாலைகளில் உள்ள பள்ளங்களை மறைக்கலாம் அல்லது ஹைட்ரோபிளேனிங்கிற்கு வழிவகுக்கும். ஹைட்ரோபிளேனிங் சமயங்களில், வாகனம் டிராக்ஷன் கண்ட்ரோலை இழந்து கட்டுப்பாடு இல்லாமல் எங்கெங்கோ செல்லும். கவனமாக இல்லாவிட்டால், ஒரு ஓட்டுநர் மற்ற வாகனங்கள் அல்லது பொருள்களுடன் மோதலாம், இதன் விளைவாக அபாயகரமான விபத்துகள் ஏற்படலாம்.
ஈரமான சாலையில் வாகனம் ஓட்டுவது அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அபாயங்களைக் கணிசமாகக் குறைக்கும். முதலாவதாக, ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை சிறப்பாகக் கட்டுப்படுத்த தங்கள் வேகத்தைக் குறைக்க வேண்டும். சாலையில் திடீரென ஏற்படும் மாற்றங்களுக்கு எதிர்வினையாற்ற போதுமான நேரத்தை பெற, முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்க வேண்டும்.

பகலில் கூட ஹெட்லைட்களைப் பயன்படுத்துவது பார்வையை அதிகரிக்க உதவும். பெரிய குட்டைகள் அல்லது சாலையில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்ப்பது முக்கியம். ஏனெனில் அவை ஹைட்ரோபிளேனிங்கிற்கு வழிவகுக்கும். கூடுதலாக, ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதாவது, வாகனத்தின் டயர்கள் மற்றும் பிரேக்குகள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை மழையில் பயணத்தை துவங்குவதற்கு முன் சரிப்பார்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஈரமான சாலைகளில் வாகனம் ஓட்டுவது, குறிப்பாக இந்திய மழைக்காலங்களில், ஆபத்தானது. இருப்பினும், ஆபத்துக்களைப் பற்றி அறிந்திருப்பதுடன், சரியான திறன்கள் மற்றும் அறிவைப் பெற்றிருப்பது, இந்த சவாலான சூழ்நிலைகளில் பயணிக்க நம்பிக்கையை அளிக்கும். ஒருவரின் உயிரைப் பணயம் வைக்கும் எந்த இலக்கும் முக்கியமானது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். பயணத்தை கடைசி வரையில் முடிக்க முடியாமல் விபத்தில் சிக்குவதை விட, தாமதமாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது சிறந்தது.


Click it and Unblock the Notifications









