தமிழகத்தில் உலவும் 'போலி' ஓட்டுனர்கள்- உஷார் ரிப்போர்ட்

மோட்டார் வாகனச் சட்டம் 55ன் படி, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், தற்போது கல்வித் தகுதி, வாகனம் ஓட்டுவதற்கான போதிய பயிற்சி இல்லாதவர்களுக்கு கண்ணை மூடிக் கொண்டு ஓட்டுனர் உரிமங்கள் வழங்கும் அவலங்கள் அரங்கேறி வருகின்றன.
இத்தனைக்கும் கணினி அமைப்பின் கட்டுப்பாட்டில்தான் ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தணிக்கைத் துறை நடத்திய ஆய்வில் தமிழகத்தில் 17 வட்டாரப் போக்குவரத்து அலுவலங்கள் மூலமாக கடந்த 2010-11ம் நிதி ஆண்டில் மட்டும் 29,365 ஓட்டுனர் உரிமங்கள் கல்வித் தகுதியை குறிப்பிடாமல் வழங்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இது ஓர் ஆண்டு நிலைமைதான். அதற்கு முன்னரும், பின்னரும் இதுபோன்று எத்தனை ஆயிரம் இதுபோன்ற போலி உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
அடிப்படை தகுதி இல்லாமல் வழங்கப்படும் உரிமங்களை பெறும் ஓட்டுனர்கள், சாலை விதிகளை பின்பற்றாமல் ஓட்டுவதால்தான் விபத்து நிகழ்வதற்கு முக்கிய காரணமாகின்றன. ஓட்டுனர் உரிமம் வழங்குவது கணினி முறையில் கட்டுப்படுத்தப்பட்டாலும் உரிய நடைமுறைகள் பின்பற்றாமல் உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், தமிழகத்தில் 90 சதவீத ஓட்டுனர் உரிமங்கள் பயிற்சி பள்ளிகள் மூலமாக பெறப்படுகின்றன. இதில், பெரும்பாலான பயிற்சி பள்ளிகள் போலி ஆவணங்களை சமர்பித்து அடிப்படை தகுதி இல்லாதவர்களுக்கு ஓட்டுனர் உரிமங்களை பெற்று தந்து விடுகின்றன.
இதுதவிர, பணபலம், அரசியல் பலம் மூலமும் இதுபோன்று தகுதி இல்லாதவர்கள் ஓட்டுனர் உரிமங்களை பெற்று விடுகின்றனர். எனவே, ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் அரசு தலையிட்டு கூடுதல் விதிமுறைகளை அமல்படுத்தி, போக்குவரத்து துறையை முறைப்படுத்தினால் மட்டுமே அப்பாவி உயிர்கள் காவு வாங்கப்படுவதை தடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications








