மழை காலத்தில் காரில் இப்படி எல்லாம் பிரச்னைகள் வருமா! இதை தடுப்பதற்கு என்ன பண்ணணும் தெரியுமா?
இந்தியாவில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டுள்ளது. இந்த பருவமழை காலம், உங்கள் காரின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உண்மைதான்.
பருவமழை காலங்களில், கனமழை பெய்யும். அத்துடன் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து கொள்ளும். இது போன்ற விஷயங்கள் எல்லாம் உங்கள் காரை எவ்வாறு பாதிக்கிறது? என்பதை நீங்கள் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான் உங்களால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

பருவமழை காலங்களில் சாலைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியிருக்கும் என்பதால், உங்கள் காருக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த மழை நீர், இன்ஜின் பகுதிக்குள் ஊடுருவி, மின் அமைப்புகளை பாதித்து, அரிப்பை ஏற்படுத்தலாம். அத்துடன் மழை காலங்களில் உங்கள் கார் பிரேக்குகளின் செயல்திறனும் குறைந்து விடும்.
எனவே உங்களால் காரை உடனடியாக நிறுத்த முடியாது. நீங்கள் பிரேக் பிடித்தால் கார் வழக்கமாக நிற்பதற்கு ஆகும் நேரத்தை விட, மழை காலங்களில் அதிக நேரம் ஆகலாம். ஒரு வினாடி அதிகமானால் கூட பிரச்னைதான். அத்துடன் சாலைகளும் வேறு வழுக்கும் தன்மையுடன் இருக்கும். எனவே மழை காலங்களில் காரை மெதுவாக ஓட்டுங்கள்.

இதற்கு அடுத்த பிரச்னை ஹைட்ரோபிளானிங். டயர் திரெட் மற்றும் சாலை மேற்பரப்புக்கு இடையே உள்ள நீர் அடுக்கு காரணமாக, காரின் டயர்கள் சாலை உடனான தொடர்பை இழக்கும்போது ஏற்படுவதுதான் ஹைட்ரோபிளானிங். இது ஸ்டியரிங் மற்றும் பிரேக்கிங் மீதான கட்டுப்பாட்டை இழக்க வழிவகுக்கும்.
கனமழையில் வாகனம் ஓட்டும்போது இந்த ஹைட்ரோபிளானிங் மிக கடுமையான ஆபத்துக்களை ஏற்படுத்தும். இவை எல்லாம் தவிர, மழை காலங்களில் பார்வை திறன் குறையும் பிரச்னையையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கடுமையான மழை அல்லது மூடுபனி சூழல்களின்போது, பார்வை திறன் கணிசமாகக் குறைந்து விடும்.
இதனால் கார் ஓட்டும்போது உங்களால் முன் பக்கத்தை தெளிவாக பார்க்க முடியாமல் போகலாம். இது நிகழும்பட்சத்தில், விபத்துகள் ஏற்படலாம். எனவே மழை காலங்களில் உங்கள் காரின் வைப்பர்கள் மற்றும் டிஃபோகர்கள் சரியான முறையில் இயங்குவது அவசியம். இவை உங்கள் பார்வை திறனை அதிகரிக்கும். எனவே வைப்பர்கள் மற்றும் டிஃபோகர்கள் சரியான முறையில் செயல்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மழை காலங்களில் ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், நீங்கள் இன்னும் ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன்படி உங்கள் கார் டயர்களின் திரெட் ஆழத்தை சீரான இடைவெளிகளில் பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன் டயர்களில் காற்றழுத்தத்தை முறையான அளவில் பராமரிக்க வேண்டும்.
இதன் மூலம் ஈரமான சாலைகளில் செல்லும்போது உங்களுக்கு சிறப்பான க்ரிப் கிடைக்கும். அத்துடன் உங்கள் காரின் முன் மற்றும் பின் பக்க விண்டுஷீல்டுகளை சுத்தமாக வைத்திருங்கள். வைப்பர்கள் மற்றும் டிஃபோகர்களில் பிரச்னை இருந்தால், செலவை பற்றி யோசிக்காமல், உடனடியாக அவற்றை மாற்றி விடுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தகவல்கள் உங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுப்பதுடன், மிதமான வேகத்தில் பயணம் செய்வதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். அத்துடன் முடிந்த வரையில் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள். சற்று சுற்றி செல்வதாக இருந்தாலும் கூட பரவாயில்லை.


Click it and Unblock the Notifications








