தள்ளுபடியுடன் புதிய கார் வாங்க இதுவே சரியான தருணம்!
ஆண்டு கடைசியில் புதிய கார் வாங்கும் திட்டத்தை பலர் தள்ளி வைப்பது வழக்கமானதுதான். எனவே, நவம்பர் மத்தியிலிருந்து டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கார் நிறுவனங்கள் ஏராளமான சலுகைகள் மற்றும் தள்ளுபடியை அறிவித்து வலைவிரிக்கின்றன.
ஆனால், ஆண்டு கடைசியில் வாங்கப்படும் புதிய கார் மாடலுக்கு எதிர்காலத்தில் ஓர் ஆண்டுக்கான மதிப்பு குறையும் என்று கருதி பலர் தவிர்க்கின்றனர். ஆனால், ஆண்டு இறுதியில் இருப்பை தீர்த்துக்கட்டவும், விற்பனை இலக்கை எட்டிவிடும் முனைப்பில் கார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகளை வாரி வழங்கும். இதனை பயன்படுத்தி கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இதுவரை சரியான தருணமாக அமையும்.
ஆண்டுக் கடைசியில் தள்ளுபடி விலையில் புதிய கார் வாங்க முடிவு செய்தவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.

முதல் விஷயம்
கார் மாடல், பட்ஜெட், பயன்பாட்டை பொறுத்து டீசலா பெட்ரோலோ போன்ற விஷயங்களை முடிவு செய்த பின்னர், நீங்கள் தேர்வு செய்திருக்கும் காரின் புதிய மாடல் அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதா என்பதை தெரிந்துகொள்வது அவசியம். அப்படி அறிமுகம் செய்யப்படுவது தெரிந்தால், தற்போதுள்ள மாடலுக்கும், புதிய மாடலுக்கும் என்னென்ன கூடுதல் சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பதை அலசி பார்த்துக்கொள்ளுங்கள். முற்றிலும் புதிய டிசைன் மற்றும் ஏராளமான வசதிகள் சேர்க்கப்பட்டு வந்தால், அதிக வேறுபாடுகளுடன் வந்தால் புதிய மாடலுக்காக காத்திருக்கலாம். அப்படி இல்லாத பட்சத்தில் உங்கள் முயற்சியை தொடரலாம்.

விளம்பரம்
செய்தித்தாள், தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் கார்களுக்கு ஆண்டு இறுதியில் அறிவிக்கப்படும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை கவனித்து வாருங்கள். அதன் அடிப்படையில் உங்களது கார் வாங்கும் திட்டத்தை துவங்கலாம்.

பேரம் பேசுங்கள்
டீலர்களில் காருக்கான தள்ளுபடி விபரங்களை தெரிந்துகொண்டு, பின்னர் கூடுதல் சலுகைகள் ஏதாவது வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். மேலும், அதிகபட்ச சலுகைகளை பெறுவதற்கு பேரம் பேசினால்தான் காரியத்தை சாதிக்க முடியும்.

கடன் திட்டம்
கார் நிறுவனங்கள் போலவே கடனுதவி வழங்கும் வங்கிகள் மற்றும் நிறுவனங்களும் சிறப்பு சலுகைகளை அறிவிக்கும். அதில், குறைந்த வட்டி வீதத்தில் கார் கடன் தரும் வங்கியை தேர்வு செய்துகொள்வதும் அவசியம். மேலும், சில வங்கிகள் நேரடியாக கார் கடனை சிறப்புச் சலுகைகளுடன் வழங்குகின்றன. எனவே, உங்களது சம்பள கணக்கு உள்ள வங்கியை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்து கொள்ளவும்.

கார் எக்ஸ்சேஞ்ச்
கார் எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது அதிகபட்ச மதிப்பை பெறும் வாய்ப்பும் உள்ளது. இதிலும், விட்டுக் கொடுக்கமால் சந்தை மதிப்புக்கு ஏற்றபடி பேரம் பேசி கூடுதல் தொகையை முன்பணமாக்கிக் கொள்வதும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

அவசரம் வேண்டாம்
டீலரில் பேரம் பேசும்போது ஏதாவது சமாளிப்புகளை கூறி, சமாதானப்படுத்த முயல்வார்கள். இல்லையெனில், ஆகாது என்பதுபோல் கூறுவார்கள். உடனே இறங்கி விடாமல், ஷோரூமை விட்டு வெளியேறிவிடுங்கள். ஓரிரு நாளில் அங்கிருந்து உங்களது பேச்சுக்கு ஒப்புக் கொண்டு அழைப்பு வரும். அப்படி இல்லையெனில், வேறொரு ஷோரூமுக்கு செல்லலாம்.

விலை வேறுபாடு
மெயின் டீலராக தேர்வு செய்து காரை வாங்குவது உத்தமம். அனைத்து ஷோரூம்களிலும் ஆன்லைன் மூலமாக விலை விபரம் தரப்பட்டாலும், சப்- டீலர்களில் ஹேண்ட்லிங் சார்ஜ், கூடுதல் ஆக்சஸெரீகளை சேர்த்து விலையாக கூறுவர். மேலும், நகரில் இருக்கும் ஷோரூம்களில் அந்த டீலரால் வழங்கப்படும் விசேஷ சலுகைகளையும் தெரிந்துகொள்வது அவசியம். சப்- டீலர்களில் சிறப்பான சர்வீஸ் வசதி மற்றும் மனித வளமும் அங்கு இருக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








