காரில் சின்ன சின்ன விஷயம் மாதிரி தான் தெரியும்... மழைக்காலத்திற்கு முன்பே தயாரா உள்ளீர்களா என்பதுதான் கேள்வியே
தமிழ்நாட்டில் ஆடி காற்று பல இடங்களில் சூறைக்காற்றாய் வீசி வருகிறது. இன்னும் சில வாரங்களில் பலத்த காற்று வீசுவது குறைந்த பின் மாநிலத்தில் பல இடங்களில் பலத்த கனமழை பெய்ய துவங்கும். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஏற்கனவே கனமழை வெளுத்து வாங்க ஆரம்பித்துவிட்டது. இது வரும் மாதங்களில் படிப்படியாக அதிகரிக்கும் என்பதால், மழையின்போது ஓட்டுவதற்கு ஏற்ப கார்களை முன்கூட்டியே தயார்படுத்துவது அவசியமாகிறது. அவ்வாறு காரின் எந்த பாகங்களை மழைக்காலத்தின் போது நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டயர்கள் (Tires): மழைக்காலத்தின் போது கார்களின் டயர்கள் தான் பாதுகாப்பு விஷயத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இதனால், மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே காரின் டயர்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை சரிப்பார்ப்பது அவசியமாகும். டயர்களில் காற்றழுத்தம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை அவ்வப்போது சரிப்பார்ப்பதுடன், டயர்களில் டிரெட் (Tread)-இன் ஆழம் எந்த அளவிற்கு உள்ளது என்பதையும் நாணயத்தை வைத்து சரிப்பார்க்கலாம்.

பிரேக்குகள் (Brakes): மழைக்காலத்தில் காரின் டயர்களுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்தது சக்கரங்களை நிறுத்தும் பிரேக்குகள் ஆகும். ஏனெனில், ஈரமான சாலையில் டயர்கள் வழுக்கிக் கொண்டு போகும்போது அவற்றை உடனே நிறுத்துவதற்கு பிரேக்குகள் சிறந்த நிலையில் இருப்பது அவசியமாகும். இதனால், பிரேக் பேட்கள் (Pads) தேய்மானம் அடைந்துள்ளதா, பிரேக் திரவங்கள் போதுமான அளவிற்கு உள்ளனவா என்பதையும் சரிப்பார்ப்பது அவசியமாகும்.
வைபர்கள் (Wipers): மற்ற நேரங்களை காட்டிலும் மழைக்காலத்தின் போதுதான் காரில் வைபர்களின் தேவை அதிகமாக இருக்கும் என்பதை சொல்ல வேண்டியது இல்லை. இதனால், நீண்ட நேரத்திற்கு செயல்படுவதற்கு ஏற்ப காரில் வைபர்கள் மற்றும் அவற்றின் பிளேட்கள் (Blades) நல்ல நிலையில் உள்ளனவா என்பதையும் மழைக்காலத்திற்கு முன்பே சரிப்பார்ப்பதும் அவசியம் ஆகும்.

விளக்குகள் (Lights): மழைக்காலத்தில் விரைவாக இருட்டிவிடும். சில மலைப்பகுதிகளில் பகல் நேரத்திலேயே இருள் சூழ்ந்து போதிய வெளிச்சம் இல்லாமல் போகக்கூடும் என்பதால், காரை சுற்றிலும் வழங்கப்படும் விளக்குகள் அனைத்தும் முறையாக ஒளிர்கின்றனவா என்பதை பயணத்திற்கு முன்பே சரிப்பார்ப்பது அவசியமாகும். ஏனெனில், உங்களது காரின் விளக்குகள் உங்களுக்கு மட்டுமின்றி, மற்ற வாகன ஓட்டிகளுக்கும் உங்களை அடையாளம் காண அவசியமான ஒன்றாகும்.
டீஃபாகர் & ஏசி (Defogger & AC): மழைக்காலத்தில் ஏசி பெரியதாக தேவைப்படாது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், காருக்கு வெளியே குளிர்ச்சியாக இருக்கும்போது காருக்கு உள்ளே வெப்பமான சூழல் நிலவினால் காரின் ஜன்னல் கண்ணாடிகளில் மூடுபனிகள் தானாக உருவாகும். இதனை தடுக்க இன்றைய கால மாடர்ன் கார்களில் டீஃபாகர் என்கிற வசதி வழங்கப்படுகிறது. இது ஜன்னல் கண்ணாடிகளில் பனி படிவதை தடுத்து, காருக்குள் இருந்து பார்ப்பவர்களுக்கு நல்ல பார்வையை வழங்கும் என்பதால், ஏசி நல்ல கண்டிஷனில் இருப்பதுடன், டீஃபாகரும் நல்ல நிலையில் இருப்பது அவசியமாகிறது.

திரவங்களின் நிலைகள்: கோடைக்காலத்தை போன்று, மழைக்காலத்திலும் என்ஜினின் வேலை அதிகமாக இருக்கும் என்பதால், என்ஜினின் சிறந்த செயல்பாடுகளுக்கு முக்கியமானதாக விளங்கும் எண்ணெய் திரவங்களை போதிய அளவிற்கு காரில் வைத்திருத்தல் அவசியமாகும். என்ஜின் ஆயில் மட்டுமின்றி, பிரேக் ஆயில் மற்றும் விண்ட்ஷீல்டு (Windshield) திரவம் உள்ளிட்டவற்றையும் போதுமான அளவிற்கு வைத்திருப்பது மட்டுமில்லாமல், அசுத்தம் இல்லாமல் வைத்திருப்பது அவசியமாகும்.
பேட்டரி (Battery): இன்றைய கால கார்கள் நன்கு வலிமையான மற்றும் துருப்பிடிக்காத உலோகங்களினால் உருவாக்கப்பட்டாலும் மழைக்காலத்தின்போது காரின் சில பார்ட்ஸ் துருப்பிடித்தலுக்கு உள்ளாகுவதை தவிர்க்க முடிவதில்லை. அத்தகைய பாகங்களுள் ஒன்று, காரின் பேட்டரி உடன் வயர்களை இணைக்கும் பகுதி ஆகும். பேட்டரியின் முனைகள் அதிக துருப்பிடித்தலுக்கு உள்ளாகும் போது காருக்கான மின்சாரம் கிடைப்பது தடைப்பட்டு, கார் பிரேக்டவுன் (Breakdown) ஆக நேரிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழைக்காலத்தில் கார் ஓட்டும்போது வழக்கத்தை காட்டிலும் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். சில சமயங்களில் நாம் எவ்வளவு தான் கவனத்துடன் செயல்பட்டாலும், காரில் பழுதாகும் பாகங்களினால் விபத்துகள் நடப்பது உண்டு. அவற்றை தடுக்கும் முயற்சியாகவே, மேலே கூறப்பட்ட கார் பாகங்களை நல்ல நிலையில் வைத்திருப்பது அவசியம் ஆகும்.


Click it and Unblock the Notifications









