திறந்தவெளி மற்றும் சாலை ஓரத்தில் காரை பார்க்கிங் செய்வோர் மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!
இப்போது கார் வாங்கும் பெரும்பாலானோரது வீட்டில் காரை நிறுத்துவதற்கான இடவசதி இருப்பதில்லை. இதனால், தெரு ஓரத்திலேயே பலர் காரை நிறுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது.
இதுபோன்று காரை நிறுத்தி வைக்கும்போது, பல லட்சம் போட்டு வாங்கிய கார் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில், சாலை ஓரத்தில் காரை நிறுத்தி வைப்பவர்கள், காரை பாதுகாப்பதற்கும், கவனத்தில் வைக்க வேண்டிய விஷயங்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

முதலுக்கே மோசம்...
வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள், சூரிய ஒளி, மழை மற்றும் பனிப் பொழிவு என அனைத்து கால நிலைகளின் உக்கிரத்தால் பெயிண்ட் பாதிக்கப்படும். இதனால், புதிய கார்கள் ஓரிரு ஆண்டுகளிலேயே பொலிவு இழந்துவிடும். இதன் காரணமாக, காரின் ரீசேல் மதிப்பு வெகுவாக குறையும். மேலும், வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் கார் என்றாலே இளக்காரமாக பாரக்கப்படும்.

உபாயம்
வெளியில் காரை நிறுத்துபவர்கள், தரமான கவர்களை வாங்கி மூடி வைக்கவும். தரமற்ற கவர்களை கண்டிப்பாக தவிர்க்கவும். இதன்மூலமாக, ஓரளவு கால நிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க முடியும்.

ஆபத்து
வீட்டிற்கு அருகிலேயே என்று நினைத்துக் கொண்டு மரம் இருக்கும் பகுதிகளில் காரை நிறுத்த வேண்டாம். குறிப்பாக, தென்னை மரத்திற்கு கீழே நிறுத்துவதை அறவே தவிர்க்கவும். மரக் கிளைகள், மட்டை அல்லது தேங்காய் விழுந்து காரில் பெரிய பாதிப்புகளையும், செலவுகளையும் இழுத்துவிட்டு விடும். எனவே, மரம் இல்லாத இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தவும்.

துரு பிடிக்கும்...
மழைக்காலத்தில் தெருவில் நிறுத்தப்படும் கார்கள் எளிதாக துருப் பிடிக்கும். எனவே, வெயில் காலம், மழைக் காலம் என இரண்டும் துவங்குவதற்கு முன்னதாகவே அண்டர் பாடி கோட்டிங் மற்றும் கார் பாடியை காவந்து செய்வதற்கு வேக்ஸ் கோட்டிங் செய்து விடுவது நல்லது. சில ஆயிரங்களை பார்த்தால், பல லட்சம் மதிப்புடைய கார் மதிப்பிழந்து போகும். கடற்கரை ஓரங்களில் கார் வைத்திருப்பவர்கள் டீலரில் சொன்னால், அண்டர் பாடி கோட்டிங்குடன் சேர்த்து ஆயில் கோட்டிங் செய்து கொடுப்பர். இதனால், துருப் பிடிக்கும் வாய்ப்பு குறையும்.

மழை நேரத்தில்...
மழை நேரத்தில் கழிவுநீர் கால்வாய் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகள் மற்றும் தண்ணீர் ஓடும் பகுதிகளில் காரை நிறுத்தி வைக்காதீர். கவனித்து பாதுகாப்பு இடங்களில் நிறுத்தி வையுங்கள்.

கவனம்
பள்ளிக்கூடம் அல்லது சிறுவர்கள் விளையாடும் பகுதியில் நிறுத்தினால் சற்று கூடுதல் கவனம் தேவை. சிறுவர்கள் விளையாட்டுத் தனமாக காரில் ஆணி போன்றவற்றால் கீறல்களை போட்டுவிடுவர். எனவே, அந்த பகுதியில் கவர் போட்டு மூடி வைப்பது மிக அவசியம்.

சன் ஃபிலிம்
சூரிய ஒளியில் நேரடியாக நிறுத்தியிருக்கும் கார்களின் உட்புறத்தில் டேஷ்போர்டு பிளாஸ்டிக் மற்றும் இதர பாகங்கள் வெளுத்து போவதுடன் பாதிப்பை சந்திக்கும். இதற்கு, அரசு அனுமதித்துள்ள அளவுக்கு இணையான பார்வை திறன் கொண்ட சன் ஃபிலிம் ஒட்டுவதும் வெப்பத்தின் தாக்கத்தை ஓரளவு குறைக்கும். அதேபோன்று, இரண்டு பக்க விண்ட் ஷீல்டு கண்ணாடிகளிலும் அதற்கான திரையை வாங்கி பொருத்தி வைப்பதுடன், மிருதுவான துணிகளை போட்டு போர்த்தி வைப்பதும் பலன் தரும்.

பாதுகாப்பு கருவி
வெளியில் நிறுத்தியிருக்கும் கார்கள் எளிதாக திருடு போகும் வாய்ப்பு உள்ளது. எனவே, கண்டிப்பாக, அலாரம் பொருத்துவதும் அவசியம்.

அலுவலக பார்க்கிங்
அலுவலகத்தில் பார்க்கிங் வசதி இருப்பவர்கள் அதனை பயன்படுத்தலாம். குறைந்த தூரமே இருந்தாலும், காரை கொண்டு சென்று பார்க்கிங் நிறுத்திவிட்டால், காருக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். இதனால், சூரிய ஒளி பாதிப்புகளிலிருந்து சற்று விடுதலை பெறும் வாய்ப்புள்ளது.

மற்றொரு உபாயம்
தற்போது பல இடங்களில் கார் பார்க்கிங் இடம் மாத வாடகைக்கு கிடைக்கிறது. அதனை பயன்படுத்துவதும் சிறந்தது. திறந்தவெளி கார் பார்க்கிங் பகுதிகளுக்கு மாதம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரையிலும், மூடப்பட்ட கார் பார்க்கிங் இடங்கள் மாதம் ரூ.2,500 வரை வாடகைக்கு கிடைக்கிறது. அதனை பயன்படுத்துவது உத்தம். எனவே, கார் வாங்கும்போதே இந்த இடத்தை தேர்வு செய்து கொள்வது சிறந்தது.

ரிஸ்க் எடுக்காதீர்
போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில் பலர் காரை பார்க்கிங் செய்துவிடுகின்றனர். இதனால், அந்த வழியாக இரு வாகனங்கள் கடக்கும்போது உங்கள் வாகனத்திலும் சேதமடையும் ஆபத்து உள்ளது. குறிப்பாக, சைடு மிரர்களை மடக்கி வைப்பது அவசியம். மிக நெருக்கடியான தெருக்களில் பார்க்கிங் செய்வதை தவிர்ப்பதும் நலம்.

அடுத்தவர் இடத்தில்...
பக்கத்து வீட்டின் கேட்டை மறைத்துக் கொண்டோ அல்லது வழக்கமாக வேறு ஒருவர் நிறுத்தும் இடத்திலோ நிறுத்திவிட்டு வந்து வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்.

சிசிடிவி கேமரா
வாசலில் காரை நிறுத்துவோர் சிசிடிவி கேமராவையும் பொருத்தி வைப்பதும் சிறந்த உபாயமாக இருக்கும். திருட்டு மற்றும் காரை சேதப்படுத்துவோரை அடையாளம் காண்பதற்கு இது ஏதுவாக அமையும். புகார் தருவதற்கும் ஆதாரமாக அமையும்.


Click it and Unblock the Notifications








