காரில் கூடுதல் எரிபொருள் நிரப்ப முடியுமா? - சந்தேகத்திற்கான பதில்!
காஞ்சிபுரத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்பியது அளவு தொடர்பாக நேற்று ஒரு பிரச்னை வெடித்து போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. அதாவது, கார் தயாரிப்பாளர் கொடுத்த நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பெட்ரோல் டேங்க்கில் உள்ள ஊழியர் கூடுதலாக எரிபொருள் நிரப்பிவிட்டதாகவும், அது எவ்வாறு சாத்தியம் என்று கூறி வாடிக்கையாளருக்கும், பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கும் பெரும் பிரச்னையாகிவிட்டது.

பொதுவாக பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவது தொடர்பாக பிரச்னைகள் ஏற்படுவது வழக்கமான செயலாகத்தான் உள்ளது. இருப்பினும், சில தவறான புரிதல்கள் காரணமாக, பெட்ரோல் நிலையத்தில் தேவையற்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

அந்த வகையில், காஞ்சிபுரம் பெட்ரோல் நிலைய பிரச்னையும் தவறான புரிதல் காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக, இரு தரப்பும் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

அதாவது, வாடிக்கையாளர் வைத்திருந்த ஃபோர்டு ஐகான் காரின் பெட்ரோல் டேங்க் 45 லிட்டர் கொள்திறன் கொண்டதாக தயாரிப்பாளர் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் நிலையத்தில் 48 லிட்டர் பெட்ரோல் நிரப்பியதாக கூறியதால், பிரச்னை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எரிபொருள் நிரப்புவதற்கான வசதியுடன்தான் எரிபொருள் கலன் வடிவமைக்கப்படுகிறது. தவிரவும், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 600 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்படுகின்றன. இதில், பாதுகாப்பு விஷயங்களும் சம்பந்தப்பட்டுள்ளது.

இதனால், பெரும்பாலான கார்களின் எரிபொருள் கலன் சில லிட்டர்கள் வரை கூடுதலாக நிரப்பும் வசதியை பெற்றிருக்கின்றன. மேலும், பெட்ரோல் வழங்கும் எந்திரத்தின் கன் எனப்படும் குழாய் முனையில் சென்சார் இருப்பதால், பெட்ரோல் கலனில் வைத்து நிரப்பும்போது தானாகவே பெட்ரோல் வழங்கும் முறை ரத்து செய்யப்படும் வசதியும் உள்ளது.

ஆனால், சில நேரங்களில் டாப்-அப் முறையில் எரிபொருள் வழங்கும் குழாயை வெளியில் எடுத்து எரிபொருள் கலனில் கூடுதலாக எரிபொருள் நிரப்பும்போது அளவு கூடுதலாகிவிடுகிறது.

தயாரிப்பாளர் கையேட்டில் தெரிவித்துள்ள எரிபொருள் கலனின் கொள்திறன் அளவு என்பது பரிந்துரைக்கப்பட்ட அளவாகவே எடுத்துக் கொள்ளலாம். அது எரிபொருள் கலனின் முழுமையான கொள்திறன் அளவாக கருத முடியாது. பெரும்பாலான கார்களில் இவ்வாறே எரிபொருள் கலன் கூடுதல் கொள்திறன் கொண்டதாக இருக்கின்றன.

கூடுதல் கொள்திறன் இருந்தாலும், தயாரிப்பாளர் பரிந்துரைக்கப்பட்ட அளவிலேயே நிரப்புவது அவசியம். டாப்-அப் செய்து நிரப்புவது உள்ளே இருக்கும் அளவீட்டு சென்சார் உள்ளிட்ட கருவிகளின் கணக்கீடுகளில் கோளாறை ஏற்படுத்தும் என்பதுடன், அது செயலிழக்க செய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும், எரிபொருள் வெப்பநிலைக்கு தக்கவாறு விரிவடையும் வாய்ப்பு இருப்பதால், எரிபொருள் கலனில் சற்று இடைவெளி இருப்பதும் அவசியம். இதற்காக, கூடுதல் அளவுடன் கொள்திறன் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது.

ஆனால், இதில் தவறு நடக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்றாலும், சில நேரங்களில் தவறுகள் தவிர்க்க முடியாத விஷயமாக உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, எரிபொருள் நிரப்பும்போது வாகன ஓட்டிகள் விழிப்புடன் செயல்படுவதே சாலச்சிறந்த வழியாக இருக்கும். பெட்ரோல் நிரப்பும்போது அதிக கவனத்துடன் செயல்படுவதே இந்த பிரச்னைகளை தவிர்க்க ஒரே சிறந்த வழி.


Click it and Unblock the Notifications








