ஆரம்பத்தில் கொஞ்சம் செலவு செய்தால் போதும்! எலக்ட்ரிக் கார் வாங்குவதில் தயக்கம் தேவையில்லை!!
எலக்ட்ரிக் கார் (Electric Car), இந்தியா உள்பட உலகின் எதிர்கால போக்குவரத்து இதை நம்பி தான் உள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இருப்பினும், எலக்ட்ரிக் கார்களை விரைவாக சார்ஜ் செய்யும் வசதிகள் இன்னும் பல நாடுகளில் அதிகமாக வரவில்லை. இதன் காரணமாகவே, எலக்ட்ரிக் கார்கள் விற்பனை சற்று மெதுவாகி உள்ளது. அதனை பற்றி பின்னர் பார்ப்போம். இந்த தொகுப்பில் முக்கியமாக நாம் பார்க்க போவது என்னவென்றால், எலக்ட்ரிக் கார் பேட்டரிகளை சோலார் பேனல்களை கொண்டு சார்ஜ் செய்ய முடியுமா என்பது ஆகும்.
சோலார் பேனல்களை நிறைய பேரது வீடுகளிலும், அலுவலகங்களிலும் பார்த்திருப்பீர்கள். இதன் இயந்திர நுட்பம் மிகவும் சிம்பிளானது, சூரிய ஒளியை மின்னாற்றலாக மாற்றிக் கொடுப்பது. பொருத்துவதற்கு சற்று அதிக தொகை செலவாகினாலும், சோலார் பேனல்களினால் தடையற்ற மின் விநியோகம் கிடைக்கிறது. அதைவிட முக்கியம், சோலார் பேனல்கள் மூலமாக மின்சாரம் பெறுவதினால் கரண்ட் பில் அதிகமாக வருவதில்லை.

ஆனால், சோலார் எனர்ஜி மூலம் மின்சாரம் தற்போதைக்கு வீடுகளிலும், அலுவலங்கள் & கடைகளிலும் தான் பயன்படுத்தப்படுகின்றன. கார் போன்ற நகரும் பொருட்களில் பயன்படுத்தப்படுவது இல்லை. ஒருவேளை எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்களிலும் சோலார் சார்ஜிங் வசதி வந்துவிட்டால், காரின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு கொஞ்சம் கூட நேரத்தை வீணடிக்க தேவையில்லை. ஏனெனில், கார் இயங்கும்போதே பேட்டரி ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் ஆகிக் கொள்ளும்.
அளவு கடந்த சார்ஜை பேட்டரிக்கு தொடர்ந்து வழங்காத வண்ணம் சார்ஜிங் கண்ட்ரோலர் கருவிகளை பயன்படுத்தலாம். இது எப்போதும் காரின் பேட்டரியின் மீது ஒரு கண் வைத்திருப்பது போல வடிவமைக்கப்பட வேண்டும். அதேபோல், சூரிய ஒளி கிடைக்காத இரவு நேரங்களிலும் தடையில்லாமல் எலக்ட்ரிக் காரை பயன்படுத்த காலையில் கிடைத்த சார்ஜை ஓரிடத்தில் சேமித்து வைத்து, பின்னர் வழங்கும் வகையில் கேபசிட்டர் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், இந்த கேபசிட்டரை காரின் பேட்டரியின் திறனை காட்டிலும் குறைந்த திறனில் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, காரில் 50kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது என்றால், சோலார் பேனல்களில் இருந்துவரும் சார்ஜை சேமித்து வைக்கும் சேமிப்பானின் திறன் ஆனது 15kWh- 20kWh அளவில் இருக்க வேண்டும். ஏனெனில், அப்போதுதான் காரின் பேட்டரி கேபசிட்டரில் இருந்து போதுமான அளவிற்கு மட்டும் சார்ஜை எடுத்துக் கொள்ளும்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், உலகின் சில பகுதிகளில் இவ்வாறு சோலார் பேனல்கள் மூலமாக எலக்ட்ரிக் காரை பயன்படுத்த மக்கள் ஆரம்பித்துவிட்டனர். சிலர், அவர்களது வீட்டில் ஏற்கனவே இருந்த சோலார் பேனல்களை காரின் மேற்கூரையில் பொருத்தி பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர், சோலார் பேனல்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை நேரடியாக வீட்டின் கார் சார்ஜிங் பாயிண்ட் உடன் இணைத்துக் கொண்டுள்ளனர்.
பகல் நேரங்களில் அதிகமாக காரை பயன்படுத்தாதவர்களுக்கு மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்தி சார்ஜ் ஏற்றிக் கொள்வது சிறந்ததாக இருக்காது. 8இல் இருந்து 12 சோலார் பேனல்களை பொருத்தினாலே 1இல் இருந்து 4 கிலோவாட்ஸ் பவர் வரையில் ஆற்றலை பெறலாம். காரின் பேட்டரியின் திறனையும், சோலார் பேனல்களை சார்ஜ் செய்யும் நேரத்தையும் பொருத்து எலக்ட்ரிக் காரை சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
4 கிலோவாட்ஸ் பவரில் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள பிஒய்டி அட்டோ 3 எலக்ட்ரிக் காரின் 60.5kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 15 மணிநேரம் தேவைப்படும். அதிக திறன்மிக்க பெரிய அளவிலான பேட்டரி என்றால், அதிக சோலார் பேனல்களை காரில் பொருத்த வேண்டியிருக்கும். அல்லது எலக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வதற்காக என்று மட்டும் சோலார் பேனல்களை வீட்டில் பொருத்தி மின்சாரத்தை பெற்றுக் கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சூரிய ஒளி ஆற்றல் மூலம் மின்சாரத்தை கொடுக்கும் சோலார் பேனல்களின் முக்கியமான சிறப்பம்சமே பூஜ்ஜிய மின்கட்டண செலவாகும். ஆரம்பத்தில் கொஞ்சம் செலவு செய்தால், அதன்பின் இலவச மின்சாரத்தை புயல், மழை காலங்களிலும் பெறலாம். மேற்கூரையில் சோலார் பேனல்கள் மூலமாக தானாக சார்ஜ் செய்துக் கொள்ளும் எலக்ட்ரிக் கார்கள் எதிர்காலத்தில் வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications








