பயணங்களை எளிதாக்கும் ஜிபிஎஸ் சாதனம் செயல்படும் விதம்!
காருக்கு அவசியமான தொழில்நுட்ப வசதிகளில் இன்றைக்கு தவிர்க்க முடியாத ஒரு தொழில்நுட்பமாக ஜிபிஎஸ் கருதப்படுகிறது. திக்கு தெரியாத இடங்களுக்கு சுலபமாக செல்வதற்கும், திருடு போகும் வாகனங்களை எளிதாக கண்டுபிடிக்கவும் தற்போது ஜிபிஎஸ் எனப்படும் புவியிடங்காட்டி கருவிகள் பயன்படுகின்றன. வாகனங்களில் தொலைதூரம் செல்வோர், சாகசப் பயணங்கள் செல்வோருக்கு இந்த கருவி வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வழிகாட்டும் தகவல்களோடு, சீதோஷ்ண நிலை குறித்த எச்சரிக்கை, போக்குவரத்து நெரிசல், வழியில் இருக்கும் ஓட்டல்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட தகவல்களை பயணங்களின்போது பெற இந்த சாதனம் வழிவகுக்கிறது. வாய்மொழியாக இந்த சாதனத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதால், ஓட்டுனரின் கவனச் சிதறல்களையும் தவிர்க்க முடிகறது. இந்த நிலையில், இந்த கருவி செயல்படும் விதம் குறித்த தகவல்களுடன் கூடிய படங்களை ஸ்லைடரில் காணலாம்.

கூடுதல் தகவல்கள்
அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

செயற்கைகோள் இணைப்பு
கார் அல்லது வாகனத்தில் இருக்கும் ஜிபிஎஸ் கருவி செயற்கைகோள் உதவியுடன் இருக்கும் இடத்தை துல்லியமாக கணக்கிட்டு, அதற்கு தக்கவாறு தகவல்களை வழங்குகிறது.

புவியிடங்காட்டி
விண்வெளியில் 6 கோணங்களிலான சுற்று வட்டப்பாதையில் புவியிடங்காட்டி வசதியை தரும் 24 செயற்கைகோள்களை மையமாக கொண்டு இந்த ஜிபிஎஸ் செயல்படுகிறது. பூமியின் எந்தவொரு இடத்திலிருந்தும் குறைந்தபட்சம் 4 செயற்கைகோள்களை தொடர்பு படுத்தும் வகையில், இந்த 24 செயற்கைகோள்களும் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பூமியின் எந்தவொரு இடத்திலிருந்தும், செயற்கைகோள்களுடன் ஜிபிஎஸ் சாதனங்கள் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்.

முக்கிய அம்சம்
எந்தவொரு மோசமான சீதோஷ்ண நிலையிலும், ஜிபிஎஸ் சாதனம் தங்கு தடையின்றி செயற்கைகோள்களிலிருந்து ரேடியோ சிக்னலை பெறும் சிறப்பு வாய்ந்தது. கண்ணாடி உள்ளிட்ட பொருட்களின் ஊடாகவும் இந்த சிக்னல் கடந்து துல்லியமான தகவல்களை தரும். அதேவேளை, பெரிய கட்டடங்கள் போன்ற இடங்களில் ஜிபிஎஸ் சாதனம் சிக்னலை பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

துல்லியம்
செயற்கைகோள்கள் வெளியிடும் சிக்னல்களை ஜிபிஎஸ் சாதனத்தில் இருக்கும் ரிசீவர் ஈர்த்துக் கொண்டு, கன்ட்ரோலர் மோடம் மூலமாக இருக்கும் இடத்தை துல்லியமாக கணித்து சர்வர் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. கட்டுப்பாட்டு மையங்களில் இருக்கும் சர்வர் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டிருக்கும் புவி வரைபட தகவல்களின் அடிப்படையில், கார் இருக்கும் இடத்தை ஒப்பிட்டு, கூடுதல் தகவல்களை வழங்குகிறது. இது ஒரு தொடர்நிகழ்வின் மூலம் காரின் இடம் மாறிக்கொண்டே இருந்தாலும் அதற்கு தகுந்தவாறு துல்லியமான தகவல்களை பெற முடிகிறது.

பிரத்யேக எண்
ஒவ்வொரு ஜிபிஎஸ் சாதனத்திற்கும் ஒரு பிரத்யேக குறியீட்டு எண்ணை பெற்றிருக்கும். இதன்மூலம், கார் திருடு போனாலும், அது எங்கு இருக்கிறது என்பதை சர்வர் மூலம் இருந்த இடத்திலிருந்தே எளிதாக கண்டுபிடித்து விடலாம். எனவே, தற்போது கார், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் ஜிபிஎஸ் அல்லது டிராக்கிங் கருவி பொருத்துவது பாதுகாப்பானது.


Click it and Unblock the Notifications








