இதுகெல்லாம் கூட இன்ஸ்சூரன்ஸ் க்ளைம் பண்ண முடியுமா? நிறைய பேருக்கு இது தெரிவதில்லை!!
தீபாவளி வந்துவிட்டாலே கூடவே கொண்டாட்டங்களும் வந்துவிடும். நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதால், சில நாட்களுக்கு மொத்த நாடும் விழாக் கோலம் பூண்டது போன்று மாறிவிடுகிறது. இருப்பினும் அதேநேரம், தீபாவளியின்போதுதான் வழக்கத்தை காட்டிலும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், தீபாவளி பண்டிகை நாட்கள் முழுவதும் ஏதேனும் ஒரு வடிவில் நெருப்பு நம்மை சுற்றியே இருக்கும். இதனால், கொண்டாட்டங்களுடன் தீ விபத்துகளுக்கும் தீபாவளி சமயத்தில் நிறைய வாய்ப்புள்ளது. ஆதலால், இந்த பண்டிகை காலக்கட்டத்தில் எல்லாவற்றிற்கும் தயாராக இருத்தல் அவசியமாகும்.
இதனை கருத்தில் கொண்டே இந்தியாவின் முன்னணி யுபிஐ பேமண்ட் செயலியான போன்பே (Phonepe) தீபாவளியை முன்னிட்டு வெறும் ரூ.9இல் இருந்து இன்ஸ்சூரன்ஸ் திட்டங்களை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. போன்பேவின் இந்த இன்ஸ்சூரன்ஸ் திட்டங்கள் தீபாவளி சமயத்தில் நிகழ வாய்ப்புள்ள அனைத்து அசம்பாவித சம்பவங்களையும் கவர் செய்கிறது.

இதில் பைக் & கார்களுக்கும் இன்ஸ்சூரன்ஸை பெற முடியும். அதேநேரம், பட்டாசு நெருப்பினால் உங்களது பைக் & கார்கள் தீ விபத்துக்கு உள்ளாகினாலோ அல்லது வேறு ஏதேனும் விபத்தில் சிக்கினாலோ நீங்கள் ஏற்கனவே போட்டு வைத்துள்ள இன்ஸ்சூரன்ஸ் மூலமாகவே அவற்றை சரி செய்வதற்கான இன்ஸ்சூரன்ஸ் தொகையை பெறலாம். அது எப்படி என்பதை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
கார் இன்ஸ்சூரன்ஸ் பல விதங்களில் உள்ளன. 3ஆம் தரப்பினருக்கான கார் இன்ஸ்சூரன்ஸ், ஸ்டேண்ட்-அலோன் பாலிசி மற்றும் விரிவான கார் இன்ஸ்சூரன்ஸ் என்பன அவற்றுள் முக்கியமான கார் இன்ஸ்சூரன்ஸ் பாலிசிகள் ஆகும். இதில், 3ஆம் தரப்பு கார் இன்ஸ்சூரன்ஸில் பட்டாசு தீயினால் ஏற்படும் விபத்துகளுக்கு இன்ஸ்சூரன்ஸ் தொகையை பெற முடியாது. ஆனால், மற்ற இரண்டில் இந்த தீ விபத்து கவர் ஆகிறது.

ஆனால், இதற்கு சில விஷயங்களை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். தீபாவளி வெடியால் உங்களது கார் அல்லது பைக் தீப்பிடிப்பிற்கு உள்ளாகினால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உடனடியாக இதுகுறித்து இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிப்பதாகும். இது இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தை உங்களுக்காக உடனடியாக செயல்பட வைக்கும்.
இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்கும்போது இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவியுங்கள் என கூறுவார்கள். அதன்படி, தீ விபத்து குறித்து காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு போலீசார் உங்களிடம் விபத்து குறித்து முழு விபரங்களை கேட்பர். அவர்களிடம் எந்தவொரு ஒளிவு மறைவின்றி அனைத்தையும் தெரிவிக்க வேண்டும்.

வாகனத்தில் மிகவும் சிறிய பாதிப்பு ஏற்பட்டு இருப்பினும், இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தினர் போலீஸ் எஃப்.ஐ.ஆர் கேட்பர். ஏனெனில், எஃப்.ஐ.ஆர் மூலமாகவே விபத்து நடந்த இடம், தேதி, நேரம் உள்ளிட்ட விபரங்களை இன்ஸ்சூரன்ஸ் நிறுவன அதிகாரி தெரிந்துக் கொள்வர். இன்னும் ஓப்பனாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் சொல்வதை காட்டிலும், போலீஸ் எஃப்.ஐ.ஆர் சொல்வதை தான் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி நம்பும்.
விபரங்களை ஆராய்ந்த பின், விபத்திற்குள்ளான வாகனத்தை இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி சார்பில் நேரில் ஒருவர் வந்து ஆய்வு செய்வார். அதன்பின், பைக் மற்றும் கார் தொடர்பான ஆவணங்களை சரிப்பார்க்கும் வேலைகள் நடைபெறும். அதன்பின்னரே, வாகனத்தை சரி செய்வதற்கான இன்ஸ்சூரன்ஸ் தொகை ஒதுக்கப்பட்டு, சில நாட்களில் வழங்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு வாகனத்திற்கும் 3ஆம் தரப்பு இன்ஸ்சூரன்ஸ் கட்டாயம் ஆகும். ஆனால், அதில் தீபாவளி வெடியினால் ஏற்படும் விபத்துகள் கவர் ஆகாது என்பதால், மற்ற இரு பாலிசிகளுள் ஒன்றை கூடுதல் கட்டணம் செலுத்தி வாங்கியிருக்க வேண்டும். சில நேரங்களில் உங்களது இன்ஸ்சூரன்ஸ் க்ளைம் புறக்கணிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எந்தெந்த காரணங்களினால் க்ளைம் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை மற்றொரு தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









