இதை செய்ய மறந்துடீங்கன்னா ஃபாஸ்ட்டேக் கார்டுல இருக்குற காசு எல்லாம் காணாம போயிடும்!
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க வேண்டும் என்றால் ஃபாஸ்ட்டேக் கட்டாயம் தேவை, ஃபாஸ்ட்டேக் இல்லாத வாகனங்கள் அதிகமான பணத்தை டோல்கேட்களில் செலுத்த வேண்டும்.
இன்று இந்தியாவில் பயன்பாட்டில் இருகு்கும் 96 சதவீதமான வாகனங்களுக்கு மேல் ஃபாஸ்ட்டேக் கார்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதனால் மக்கள் சுங்கசாவடிகளில் பணம் செலுத்த அதிக நேரம் நிற்க வேண்டிய தேவை இருக்காது. மிஷின் உடனடியாக ஃபாஸ்ட் டேக் கார்டை ஸ்கேன் செய்து அதில் இணைக்கப்பட்டுள்ள கணக்கிலிருந்து கட்டணத்தை கழித்துக்கொள்ளும். இதனால் சில நொடிகளில் சுங்கசாவடியை நாம் கடந்து விட முடியும்.

இந்த ஃபாஸ்ட்டேக் கார் ஒரு ஆர்எஃப்ஐடி தொழிற்நுட்பத்தில் இயங்குகிறது. இந்த கார்டை காரின் முன்பக்க விண்ட் ஸ்கிரீனில் நாம் பொருத்திக்கொண்டால் போதும், சுங்கசாவடிகளில் வைக்கப்பட்டுள்ள கார்டு ரீடர்கள் இந்த கார்டை வேகமாக ஸ்கேன் செய்துவிடும். இந்த கார்டை சுங்கசாவடியில் உள்ள கார்டு ரீடரை தவிர வேறு எந்த கார்டு ரீடர் ஸ்கேன் செய்தாலும் பணத்தை கழிக்க முடியாது.
சுங்கசாவடியில் உள்ள கார்டு ரீடர் மட்டுமே ஃபாஸ்ட் டேக் தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் மற்ற கார்டு ரீடரை வைத்து உங்கள் ஃபாஸ்ட்டேக் கார்டை மற்றவர்கள் ஸ்கேன் செய்தாலும் கவலைபடாதீர்கள். அதன் மூலம் உங்கள் கணக்கில் உள்ள பணத்தை திருட முடியாது. ஆனால் இந்த ஃபாஸ்ட்டேக் விஷயத்தில் நீங்கள் உஷாராக இருக்க வேண்டிய இடம் ஒன்று இருக்கிறது.

பலர் இந்த இடத்தில் முக்கியமான விஷயத்தை மறந்து போய் ஏகப்பட்ட பணத்தை இழந்துவிடுகின்றனர். அது தான் உங்கள் வாகனத்தை விற்பனை செய்யும் தருணம். பலர் காரை விற்பனை செய்யும் போது காரின் உரிமையை வாங்குபவரின் பெயருக்கு மாற்றிவிடுகின்றனர். ஆனால் காரில் உள்ள ஃபாஸ்ட்டேக் கார்டை டிஆக்டிவேட் செய்ய மறந்துவிடுகின்றனர்.
இதனால் அந்த காரை வாங்கியவர் சுங்க சாவடியை கடந்து செல்லும் போது முந்தைய கார் ஓனரின் கணக்கிலிருந்து பணம் தானாக கழிந்து விடும். இதனால் முந்தைய ஓனருக்கு நஷ்டம் ஏற்படும். கார் விற்பனை செய்த பலர் பணம் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட பின்னர் தான் தனது பாஸ்ட்டேக் கார்டு காரிலேயே இருப்பதை உணர்கின்றனர். இப்படியாக கழிக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புகளே இல்லை, காரை வாங்கியவர் கொடுத்தால் மட்டுமே உண்டு. இதை தடுக்க காரை விற்பனை செய்யும் போது ஃபாஸ்ட்டேக் கார்டை டிஆக்டிவேட் செய்ய வேண்டும்.

எப்படி டிஆக்டிவேட் செய்வது: நீங்கள் விற்பனை செய்த காரில் உள்ள ஃபாஸ்ட்டேக் கார்டை செயல் இழக்க வைக்க முதலில் உங்களுக்கு ஃபாஸ்ட்டேக் வழங்கிய நிறுவனத்தின் வாடிக்கையளார் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களிடம் உங்கள் காரை விற்பனை செய்ததை கூறி ஃபாஸ்ட்டேக்கை கேன்சல் செய்யலாம். அல்லது தேசிய நெடுஞ்சாலையின் உதவி எண்ணான 1033 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மறதி என்பது தேசிய வியாதியாகிவிட்டது. காரை விற்பனை செய்யும் பலர் இதன் ஃபாஸ்டேக்கை டிஆக்டிவேட் செய்ய மறந்துவிடுகின்றனர். இதனால் பலர் பணத்தையும் இழுந்துள்ளனர். நீங்கள் இனி உங்கள் காரை விற்பனை செய்கிறீர்கள் என்றால் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். காரில் உள்ள ஃபாஸ்ட்டேக் கார்டை டிஆக்டிவேட் செய்துவிடுங்கள்.


Click it and Unblock the Notifications









