ஊரடங்கால் உங்க கார் ஒரே இடத்துல நிற்கிறதா? - இதெல்லாம் செய்யணும்ங்க!
கொரோனா வைரஸ் பிரச்னையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காரை நீண்ட நாட்கள் நிறுத்தி வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் காரை எவ்வாறு பிரச்னை இல்லாமல் வைத்துக் கொள்வது என்பதற்கான சில எளிய வழிமுறைகளை இந்த செய்தியில் காணலாம்.

கார் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தாமல் அப்படியே நிறுத்தி வைக்கும் பட்சத்தில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. குறிப்பாக, இப்போது கிட்டத்தட்ட ஒரு மாதம் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இவ்வாறு நிறுத்தி வைக்கும்போது சில எளிய விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வது அவசியம்.

அலுவலகம் உள்ளிட்ட தேவைகளுக்காக பலர் தினசரி காரை பயன்படுத்தும்போது வீட்டு வாசலில் அல்லது தெரு ஓரமாக நிறுத்தி வைப்பது வழக்கம். ஆனால், நீண்ட நாட்கள் பயன்படுத்தும் அவசியமில்லாத நிலையில், வீட்டு போர்டிகோவில் பாதுகாப்பாக நிறுத்தி விடுங்கள்.

காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை முழுமையாக சுத்தப்படுத்திவிடுங்கள். தண்ணீரை கொண்டு கழுவி சுத்தப்படுத்தி வைப்பது நல்லது. காருக்குள் தேவையற்ற பொருட்கள் ஏதேனும் இருந்தால் வெளியே எடுத்து வீட்டில் வைத்துவிடுவதும் அவசியம்.

கார் போர்டிகோ உள்ளேயோ அல்லது வெளியில் நிறுத்த வேண்டியிருந்தாலும், கவர் போட்டு மூடி வையுங்கள். வெளியில் நிறுத்தி இருக்கும் பகுதியில் எலித் தொல்லை இருந்தால் வேறு பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவது அவசியம்.

அப்படி வேறு எங்கேனும் இடமில்லை என்றால் புகையிலையே காரின் எஞ்சின் பகுதிகளிலும், வயரிங் உள்ள பகுதிகளிலும் போட்டு நிறுத்தி வையுங்கள். ஓரளவு பலன் கிடைக்கும். எலித்தொல்லை இருக்கும் பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் எஞ்சின் பகுதி, காரின் உட்புறத்தை திறந்து ஆய்வு செய்வது அவசியம்.

காரை ஒரு பக்கம் மேடான பகுதியிலும், ஒரு பக்கம் சாய்வாகவும் நிறுத்தி வைக்க வேண்டாம். சில கார்களில் எஞ்சினுக்கு எரிபொருள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு கார் ஸ்டார்ட் ஆகாத சூழல் ஏற்பட்டுவிடும்.

கார் நீண்ட காலம் நிறுத்தி வைக்கும்போது பேட்டரியில் சார்ஜ் இறங்கும். குறிப்பாக, ஐந்து ஆண்டுகளை கடந்த கார்களில் பேட்டரி வேகமாக சார்ஜ் இறங்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்து சிறிது நேரம் ஓடவிட்டு பின்னர் அணைத்துவிடுங்கள்.

அடுத்து மிக முக்கியமான விஷயம், காரை ஹேண்ட் பிரேக் அல்லது பார்க்கிங் மோடில் வைத்து நிறுத்த வேண்டாம். அதற்கு பதிலாக, கியரில் போட்டு வையுங்கள். இல்லையெனில், செங்கல் அல்லது மரத்துண்டை காரின் பின் டயர்களின் இருபுறமும் வைத்து நகராத அளவுக்கு முட்டுக் கொடுத்து வைத்துவிடுவது சிறந்த உபாயமாக இருக்கும். நீண்ட காலம் ஹேண்ட் பிரேக் போட்டு வைக்கும்போது, பிரேக் ஷூ ரிம்முடன் நீண்ட நாட்கள் ஒட்டியிருக்கும்போது துருப்பிடித்து சேதமடைய வாய்ப்புள்ளது.

கார் மிக நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் நிற்கும்போது எடையை தாங்கும் டயர்களின் பகுதியில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை தவிர்ப்பதற்காக, மூன்று நாட்களுக்கு ஒருமுறை கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும்போதே, காரை சற்று முன் பின் நகர்த்தி வைப்பது இந்த பாதிப்பை தவிர்க்க உதவும். காற்றழுத்தம் இறங்குவதையும் தவிர்க்கலாம்.

வெளியில் நிறுத்தி வைத்திருப்பவர்கள் நிழல் உள்ள பகுதியில் நிறுத்தி வைப்பது காரின் பெயிண்ட் மற்றும் உட்புற பாகங்கள் பாதிக்கப்படாமல் தவிர்க்க ஓரளவு உதவும். அதேநேரம், பாதுகாப்பான மக்கள் கண்களில் படும் பகுதியாக பார்த்து நிறுத்தி வையுங்கள். உங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருப்பது எப்போதும் நல்லது.


Click it and Unblock the Notifications








