இது தெரியாமல் ஜாலியா பைக் ஓட்டுகிறோம்... எந்தெந்த வழிகளில் பிரச்சனை வரும்? மழைக்கால டிப்ஸ்!!
இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பருவ மழை துவங்கிவிட்டது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இது, ஒவ்வொரு வருடத்திலும் ஜூலை மாதத்திற்கு பிறகு வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்றே. இதற்கு நாம் எந்த அளவிற்கு தயாராக இருக்கிறோம் என்பதுதான் இங்கு கேள்வியே. கனமழையால் இப்போதே நிறைய பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி கிடப்பதை பார்க்க முடிகிறது.
ஒரு சில பகுதிகளில் சில மணிநேர மழைக்கே கால் முட்டி அளவிற்கு மழைநீர் தேங்கி விடுகிறது. அத்தகைய சாலைகளில் வாகனங்களை ஓட்டி செல்லும்போது அவை பாதிப்படைக்கின்றன. வாகனங்களில் ஒரு சில பாதிப்புகள் அந்த சமயத்தில் பிரச்சனையை தராமல், சில நாட்கள் கழித்து தன் வேலையை காட்டும். குறிப்பாக, 2-வீலர்கள் அதிக பாதிப்பை சந்திக்கின்றன. மழைநீரால் 2-வீலர் வாகனங்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கின்றன என்பதை இனி பார்க்கலாம்.

என்ஜின் & எக்ஸாஸ்ட் குழாய்: மழைநீர் தேங்கிய சாலைகளில் செல்லும்போது 2-வீலர்களில் பெரிய பாதிப்பை சந்திப்பை என்ஜினும், அதில் இருந்து புகையை வெளியிடும் எக்ஸாஸ்ட் குழாயும் ஆகும். ஏனெனில், இவை இரண்டிலும் நிறைய துளைகள் உள்ளன. குறிப்பாக, எக்ஸாஸ்ட் குழாய் ஆனது முழுக்கவே துளைகள் நிரம்பியது என்பதை நான் கூற வேண்டியது இல்லை. அதேபோல், என்ஜின் சிஸ்டத்திலும் காற்று உள்ளே நுழைவதற்காக துளைகள் கொடுக்கப்படுகின்றன.
இவற்றின் வழியாக மழைநீர் உள்ளே நுழையும்போது, அது துருப்பிடித்தல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. முக்கியமாக, ஸ்பார்க் பிளக்கில் ஏற்படும் பாதிப்பினால் உங்களால் 2-வீலரை ஸ்டார்ட் செய்ய முடியாமல் போகலாம். 2-வீலரின் என்ஜின் சிஸ்டத்தில் ஹைட்ரோலாக் பிரச்சனை ஏற்பட்டால், பெரிய செலவை இழுத்துவிட்டு விடும். என்ஜின் சிலிண்டரினுள் நீர் இருக்கும்போது, 2-வீலரை ஸ்டார்ட் செய்தால் அழுத்தத்தை உண்டாக்கி என்ஜினின் செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்திவிடும்.

எலக்ட்ரிக்கல் பாகங்கள்: மழைநீர் தேங்கிய பகுதியில் 2-வீலரை நீண்ட நேரத்திற்கு நிறுத்தி வைக்கும்போது நீர் எலக்ட்ரிக்கல் பாகங்கள் வரையில் செல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, இன்றைய கால மாடர்ன் 2-வீலர்களில் வழங்கப்படும் சென்சார்கள் நீரில் விரைவாக சேதமடையக் கூடியவைகளாக உள்ளன. 2-வீலரில் வழங்கப்படும் வயர்களுக்குள் இருக்கும் உலோகமும் மழைநீரால் அரிக்கப்படக் கூடியவை என்பதை மறக்க வேண்டாம்.
இன்றைய கால 2-வீலர்களில் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன. இவற்றை உருவாக்கும் போது நீரை கொண்டு சோதனை செய்கின்றனர் என்றாலும், நீண்ட நேரத்திற்கு 2-வீலர் மழைநீரில் நிற்கும்போது இந்த டெக்னிக்கல் பாகங்களும் சேதமடைகின்றன. டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற சில தொழிற்நுட்பங்கள் சேதமாகினால், பெரிய விபத்தை சந்திப்பதற்கு கூட வாய்ப்புள்ளது.

இயந்திர பாகங்கள்: 2-வீலர்களின் பிரேக்குகள் மழைநீரால் நேரடியாக பாதிப்பை சந்திக்கின்றன. 2-வீலரின் பிரேக் சிஸ்டத்தில் இருக்கும் காலிபர்கள், டிஸ்க்குகள் அல்லது வீல் பேரிங்ஸ் சேதமடையும் பட்சத்தில் அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். மழைநீர் தேங்கிய இடத்தில் இருந்து வெளியே வந்த பின்பும் பிரேக் சிஸ்டத்தில் இருந்து நீர் கசிவதை கண்டால் உடனடியாக அதனை மெக்கானிக் ஷாப்பிற்கு சென்று சரி செய்யவும்.
ஏனெனில், பிரேக் பேட்களில் நீண்ட நாட்களுக்கு நீர் இருந்தால் அவை அரிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இது ஒரு கட்டத்திற்கு மேல் பிரேக் பேட்கள் உடைவதற்கு வழிவகுக்கும். அதேபோல், 2-வீலரின் செயின் & ஸ்பிராக்கெட் போன்றவையும் மழைநீரில் சேதமடையக்கூடியவை ஆகும். குறிப்பாக, செயினில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பை மழைநீர் அகற்றிவிட்டால், செயினின் ஆயுட்காலம் குறைந்து விரைவில் அறுப்படலாம். மேலும், சஸ்பென்ஷன் ஃபோர்க் சீல்கள், ஷாக் அப்சார்பர்கள் போன்றவற்றையும் மழைக்காலத்தில் அவ்வப்போது கவனிக்கவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழைக் காலம் துவங்கிவிட்டாலே வாகனங்களுக்கு கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக, 2-வீலர்கள் மழைநீரால் அதிகப் பாதிப்பை சந்திக்கின்றன. ஆதலால், முடிந்தவரையில் மழைநீர் அதிகம் தேங்கிய சாலைகளுக்கு 2-வீலர்களை கொண்டு செல்லாதீர்கள். அதேபோல், நீண்ட நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது எனில், முன்னதாகவே 2-வீலரை மழைநீர் படாத அளவிற்கு பாதுக்காப்பான இடத்தில் பத்திரப்படுத்தவும்.


Click it and Unblock the Notifications









