இது நம்ம காலம்... நீங்க இறங்கி கலக்குங்க! மகளிர் தினம் கொண்டாட்டம் எல்லாம் இதுக்குதான்!
சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்தை மேம்படுத்தும் முயற்சியாகவும், அதன் மூலம் உலகின் வளர்ச்சியை பேணும் விதமாகவும் சர்வதேச மகளிர் தினம் உலக நாடுகளால் மார்ச் 8ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்களுக்கு இணையாக இன்றைய கால பெண்கள் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருப்பதற்கு சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட இவ்வாறான முயற்சிகள் தான் முக்கியமான காரணம் என சொன்னால், அது மிகையில்லை.
பல துறைகள் எனும்போது அதில் கார் டிரைவிங் துறையும் ஒன்றாக உள்ளது. ஒரு காலத்தில் கார்கள் என்றாலே ஆண்களால் மட்டுமே, அதிலிலும் ஸ்டேரிங்கை திருப்பும் மற்றும் கியர்களை மாற்றும் அளவிற்கு வலிமையான ஆண்கள் மட்டுமே ஓட்டக்கூடியதாக இருந்தன. இதனாலேயே, பல வல்லரசு நாடுகள் கூட பெண்களுக்கு ஓட்டுனர் உரிமங்களை வழங்க சில காலத்திற்கு தயங்கின.

ஆனால், இன்றைய கால மாடர்ன் கார்கள் வயதானவர்கள் கூட எளிதாக பயன்படுத்தும் அளவிற்கு எளிமையானதாக மாறிவிட்டன. டெஸ்லா போன்ற சில கார் நிறுவனங்கள் முழுவதுமாக தன்னிச்சையாக இயங்கக்கூடிய கார்களை உருவாக்கும் பணிகளில் கூட ஈடுப்பட ஆரம்பித்துவிட்டன. ஆதலால், தற்போதைய சூழலில் பெண் டிரைவர்கள் உருவாகுவதற்கு பெரியதாக எந்தவொரு இடையூறும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும், இதனாலேயே ஆட்டோ டிரைவர்களில் இருந்து கனரக லாரி, பேருந்து டிரைவர்கள் வரையில் பெண்கள் வந்துவிட்டனர். ஆண்களை சார்ந்தில்லாமல் பெண்கள் பலர் சொந்த காலில் நிற்பதற்கு டிரைவிங் மிக பெரிய உதவியாக இருப்பதை நம் அன்றாட வாழ்வில் பரவலாக பார்க்க முடிகிறது. இதன் மூலமாக, சமூகத்தில் பாலின சமத்துவமும் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இருப்பினும், நம் இந்தியா போன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் நடைபெறும் நாட்டில் பெண் டிரைவர்கள் எப்போதுமே முன்னெச்சரிக்கை உடன் இருக்க வேண்டியதாக உள்ளது. டிரைவிங் தொழிலை பொறுத்தவரையில், காலை 9 முதல் மாலை 6 மணி வரையில் மட்டுமே வேலை பார்ப்போம் என சொல்ல முடியாது. ஏனெனில், எந்த நேரத்தில் எங்கிருந்து வாடிக்கையாளர்கள்/ பயணிகள் வருவார்கள் என்றே சொல்ல முடியாது.
இதனால், இரவு நேரங்களில் கூட பெண் டிரைவர்கள் பயணிக்க வேண்டியிருக்கும் மற்றும் முன், பின் தெரியாதவர்களிடம் பழக வேண்டியிருக்கும். அதற்கு தகுந்த பாதுகாப்பான சூழலை பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருத்தருடைய கடமை ஆகும். அதனை வலியுறுத்தும் விதமாகவே சர்வதேச அளவில் மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது.

இருப்பினும், அதேநேரம் பெண்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அதாவது, டிரைவராக பணியில் சேர்ந்த சில மாதங்களுக்கு முடிந்தவரையில் தெரியாத/ தூரமான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். வாகனத்தை விரைவாகவும் நேர்த்தியாகவும் பார்க் செய்வதற்கு கற்று கொள்ளுங்கள். சாலை போக்குவரத்து விதிமுறைகளையும், அதில் பயன்படுத்தப்படும் குறியீடுகளையும் பற்றிய புரிதல் உடன் இருங்கள்.
மொபைல் போனின் ஆதிக்கம், இணைய பயன்பாடு அதிகரிப்பு, மொபைல் செயலிகளின் வருகை உள்ளிட்டவை எல்லாம் பெண் டிரைவர்கள் உருவாகுவதற்கான கதவை திறந்துள்ளன. டிரைவிங் லைசன்ஸ் (Driving Licence)-இல் இருந்து வாகனத்திற்கான இன்ஸ்சூரன்ஸ் (Insurance) வரையிலானவற்றை பெறுவதற்கு பாதி வேலை மொபைலிலும், கணினிகளிலும் முடிந்துவிடுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காலத்தை வெல்லும் சக்தி யாருக்கும் கிடையாது. ஆகையால், பாலின சமத்துவம் என்பது நிச்சயமாக ஒருநாள் ஏற்படும். அதனை முடிந்தவரையில் விரைவாக கொண்டுவரவே மனிதர்களாகிய நாம் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். பெண்கள் வெளியே வர ஆரம்பித்துவிட்டார்கள், அவர்களுக்கான சூழலை வழங்க நாம் தயாரா? என்பதுதான் இங்கு கேள்வியே.


Click it and Unblock the Notifications









