சீரியல் கில்லரான சீன மாஞ்சா நூல்... கண்ணாடி கூரை கார் உரிமையாளர்களே உஷார்!
டெல்லியில், காற்றாடி பறக்கவிட பயன்படும் மாஞ்சா நூல் வாகனத்தில் செல்வோர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு காரின் கண்ணாடி கூரை வழியாக வேடிக்கை பார்த்து சென்று கொண்டிருந்த 3 வயது சிறுமியும், 4 வயது சிறுவனும் மாஞ்சா நூல் கழுத்தை இறுக்கியதில் பரிபாபமாக உயிரிழந்தனர்.
அதுமட்டுமில்லாமல், நேற்று ஒரே நாளில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பறவைகள் மாஞ்சா நூலால் காயமடைந்துள்ளன. கண்ணாடி கூரை கொண்ட காரில் தாயின் மடியில் நின்றபடி வேடிக்கை பார்த்தபடி சென்ற, சாஞ்சி கோயல் என்ற 3 வயது சிறுமியின் கழுத்தில் எங்கிருந்தோ எமன் போல வந்த மாஞ்சா நூல் கழுத்தை இறுக்கியது.

இதில், அந்த சிறுமி பேச்சு மூச்சு இல்லாமல் மயக்கமடைந்து தாயின் மடியிலேயே விழுந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், அருகிலிருந்து மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதேபோன்று, கண்ணாடி கூரை வழியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஹாரி என்ற 4 வயது சிறுவனும், மற்றொருவரும் மாஞ்சா நூலால் உயிரை இழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் டெல்லியில் வாகனங்களில் செல்வோர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. காற்றாடி பறக்கவிட பயன்படும் மாஞ்சா நூல் சீனாவில் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாஞ்சா நூலில் கண்ணாடி தூள் தோய்க்கப்பட்டு வருவதால், இது கழுத்தில் பட்டவுடன் பிளேடு போன்று அறுத்துவிடுவதாக கூறப்படுகிறது. இது விலை மலிவாக இருப்பதும், இளைஞர்கள் இதனை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதனிடையே, சீன மாஞ்சா நூலை காற்றாடிகளில் பயன்படுத்த டெல்லி அரசு நேற்று அதிரடி தடை விதித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் சென்னையிலும் பல உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. . ஆண்டுதோறும் மார்ச் மாத துவக்கத்திலிருந்து வட சென்னையிலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதும், உயிர்கள் பறிபோவதும் வாடிக்கையாக உள்ளது.
சென்னையில், மாஞ்சா நூல் காற்றாடிகளுக்கு மாநகர போலீசார் தடை விதித்துள்ளனர். இருப்பினும், அதனை பலரும் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில், மாஞ்சா நூல் எமனிடம் இருந்து தப்பிப்பதற்கு, கண்ணாடி கூரை கார்களில் செல்வோர், தங்களது குழந்தைகளை வேடிக்கை பார்க்க அனுமதிப்பதை முடிந்தவரை தவிர்ப்பதே நலமாக அமையும்.


Click it and Unblock the Notifications








