புத்திசாலித்தனமான பைக் உரிமையாளர்கள் மழைக்காலத்தில் இதை எல்லாம் கண்டிப்பாக பண்ணுவாங்க! அப்ப நீங்க?
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை (Monsoon) பெய்து வருகிறது. சாதாரண சமயங்களிலேயே இந்திய சாலைகளில் பைக் ஓட்டுவது கடினம். அதுவும் மழைக்காலம் என்றால் சொல்லவே வேண்டாம். எனவே மழைக்காலத்தில் உங்கள் பைக் பயணம் பாதுகாப்பாக இருக்க என்னென்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
செக் பண்ணிக்கோங்க: மழைக்காலத்தில் வெளியே செல்லும் முன், உங்கள் பைக் டயர்களின் த்ரெட் ஆழத்தை சரி பார்த்து கொள்வது நல்லது. ஈரமான சாலைகளில் நிலைத்தன்மையை பராமரிக்க இது மிகவும் முக்கியமானது. அத்துடன் 2 டயர்களிலும் காற்றழுத்தம் சரியான அளவில் பராமரிக்கப்படுவதும் அவசியம்.

லைட் முக்கியம் பிகிலு: ஹெட்லைட், டெயில்லைட் மற்றும் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள் உட்பட உங்கள் பைக்கில் உள்ள அனைத்து லைட்களும் சரியாக செயல்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உங்களுக்கும், சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பார்வை திறனை மேம்படுத்த உதவும். இதன் மூலம் சாலை விபத்துக்களும் தவிர்க்கப்படும்.
கவனமா பிரேக் பிடிங்க: ஈரமான சாலைகளில், பொறுப்புடன் பிரேக் செய்வது முக்கியம். முடிந்தவரை சடன் பிரேக் பிடிப்பதை தவிர்க்கும் வகையில், மிதமான வேகத்தில் பயணம் செய்வது நல்லது. மெதுவாகவும். படிப்படியாகவும் பிரேக் பிடித்தால், பைக் சறுக்குவதையோ அல்லது கட்டுப்பாட்டை இழப்பதையோ தடுக்க உதவும்.

டிஸ்டன்ஸ் விட்டு டிராவல் பண்ணுங்க: மழைக்காலங்களில் மற்ற வாகனங்களுக்கும், உங்களுக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பார்வை திறன் மோசமாக இருக்கும் என்பதால், மற்ற வாகனங்கள் திடீரென பிரேக் பிடித்தாலோ அல்லது வளைந்தாலோ உங்களுக்கு சரியாக தெரியாமல் போகலாம். அப்போது போதுமான இடைவெளி இருந்தால் விபத்துக்களை தவிர்க்க ஏதுவாக இருக்கும்.
இதுல காச போடுங்க: மழைக்காலங்களில், நீர்ப்புகா ஜாக்கெட்டுகள், பேன்ட்கள் மற்றும் கையுறைகள் போன்ற பொருட்களில் உங்கள் பணத்தை கொஞ்சம் யோசிக்காமல் முதலீடு செய்யுங்கள். இந்த பொருட்கள் உங்களை உங்களை உலர்வாகவும், வசதியாகவும் வைத்திருக்கும். எனவே மழைக்காலங்களில் இவை மிகவும் அத்தியாவசியமானவையாக கருதப்படுகின்றன.

தண்ணி தேங்கியிருந்தா நோ: நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் இருந்து விலகி செல்ல முயற்சி செய்யவும். ஏனெனில் அவை பைக் ஓட்டுபவர்களுக்கு மிகவும் ஆபத்தானவை. ஆழமான குழிகள் அல்லது பிற தடைகள் ஏதேனும் இருந்தால், தேங்கியிருக்கும் நீர் மறைத்து விடும் என்பதுதான் இதற்கு காரணம். எனவே முடிந்தவரை மாற்றுப் பாதையில் செல்வது நல்லது.
வெயிட் பண்ணுங்க பாஸ்: முடிந்தால், கனமழையின்போது பைக் ஓட்டுவதை தவிர்க்கவும். ஏனெனில் இது பார்வை திறனை கணிசமாக குறைப்பதுடன், விபத்து அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே மழை நன்றாக குறையும் வரையோ அல்லது முற்றிலுமாக நிற்கும் வரையோ காத்திருக்கவும். அதன்பின் உங்கள் பயணத்தை தொடங்குவது/தொடர்வது நன்மை பயக்கும்.
சர்வீஸ் பண்ணுங்க: உங்கள் பைக் பாதுகாப்பான பயணத்தை வழங்க வேண்டுமென்றால், சீரான இடைவெளிகளில் சர்வீஸ் செய்ய வேண்டும். அதுவும் மழைக்காலத்தில் பைக் சர்வீசுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும். டயர்கள், பிரேக்குகள், டயர்கள் மற்றும் லைட்கள் போன்ற முக்கியமான பாகங்கள், சர்வீஸ் பணியின்போது சரி பார்க்கப்படுவது அவசியம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவற்றுடன், வானிலை அறிவிப்புகளில் அப்டேட் ஆக இருங்கள். இதன் மூலம் கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படும் நாட்களில் பயணத்தை தவிர்க்க முடியும். அத்துடன் வழுக்கும் தன்மையுடய சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கலாம் என்பதால், எப்போதும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








