கேடிஎம் பைக்குகளில் கொடுக்கப்படும் Ride By Wire தொழில்நுட்பம் செயல்படும் விதம்!
கேடிஎம் பைக்குகளில் கொடுக்கப்படும் ரைடு பை ஒயர் தொழில்நுட்பம் செயல்படும் விதம், நன்மைகள் குறித்து இந்த செய்தி விளக்குகிறது.
இருசக்கர வாகனங்களில் நவீன தொழில்நுட்ப அம்சங்களை புகுத்துவதில் கேடிஎம் நிறுவனம் முன்னோடியாக விளங்குகிறது. விலை உயர்ந்த பைக் மாடல்களில் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த Ride By Wire என்ற தொழில்நுட்பத்தை கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆர்சி390 ஸ்போர்ட்ஸ் பைக்கில் கொடுத்து அசத்தியது கேடிஎம்.
இதைத்தொடர்ந்து, தற்போது 2017 மாடலாக வரும் புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கிலும் இந்த புதிய தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளது. அதாவது, ரூ.2 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட பைக் மார்க்கெட்டில் இது மிக அசத்தலான தொழில்நுட்பமாகவே கருத முடியும். சரி, இந்த ரைடு பை ஒயர் தொழில்நுட்பத்தின் சாதக அம்சங்கள் மற்றும் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரைடு பை ஒயர் நுட்பம்
சாதாரண பைக்குகளில் கைப்பிடியிலிருந்து எஞ்சினுக்கு எரிபொருள் மற்றும் காற்று செலுத்தும் அமைப்பை கட்டுப்படுத்தும் கார்புரேட்டரை இணைப்பதற்கு ஆக்சிலரேட்டர் கேபிள் பயன்படுத்தப்படுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால், இந்த ரைடு பை ஒயர் தொழில்நுட்பம் கொண்ட பைக்குகளில் சென்சார்கள் மற்றும் இசியூ கம்ப்யூட்டர் உதவியுடன் எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தும் அமைப்பு கட்டுப்படுத்தப்படும்.

ஆக்சிலரேட்டர் கேபிள்
அதாவது, ஆக்சிலரேட்டர் கைப்பிடியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆக்சுவேட்டர் கருவி பைக்கின் இசியூ கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தில் இருக்கும் சென்சார் கருவியும் ஒயர்கள் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும்.

கம்ப்யூட்டர் கட்டுப்பாடு
ஆக்சிலரேட்டர் கைப்பிடி நகர்வை துல்லியமாக கணித்து, ஆக்சுவேட்டர்கள் இசியூ கருவிக்கு சமிக்ஞைகளை அனுப்பும். அங்கு, எவ்வளவு பெட்ரோல் மற்றும் காற்று எஞ்சினுக்கு செலுத்த வேண்டும் என்பதை இசியூ கம்ப்யூட்டர் நிர்ணயம் செய்து கட்டளை பிறபிக்கும். இது தொடர் நிகழ்வாக அமையும்.

சரியான அளவு எரிபொருள்
எரிபொருள் மற்றும் காற்று அளவை இசியூ கட்டளைபடி எஞ்சினுக்குள் சரியான அளவில் செலுத்தும் பணியை சென்சார்கள் செய்யும். ஓட்டுனர் ஆக்சிலரேட்டர் கைப்பிடியை கூட்டி குறைப்பதை பொறுத்து சென்சார்கள் சமிக்ஞைகள் மூலமாக பெட்ரோல் மற்றும் காற்றின் அளவு சரியான விகிதத்தில் எஞ்சினுக்குள் செலுத்தப்படும்.

மாசு உமிழ்வு
பொதுவாக அதிக சக்திவாய்ந்த பைக்குகளில் இருக்கும் எஞ்சின்கள் அதிக புகையை வெளியேற்றும். ஆனால், மாசு விதிகளின்படி எஞ்சினின் புகை வெளியேற்றும் அளவை குறைப்பதற்கு இந்த ரைடு பை ஒயர் தொழில்நுட்பம் வரப்பிரசாதமாக அமைந்தது.

அசத்தும் கேடிஎம்
அதாவது, இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக மாசு உமிழ்வு குறைவாக இருக்கும். இந்த தொழில்நுட்பத்தை புகுத்துவதால் அதிக விலை நிர்ணயிக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த தொழில்நுட்பத்தை ரூ.2 லட்சம் பட்ஜெட் மார்க்கெட்டில் கொடுத்து அசத்தியிருக்கிறது கேடிஎம்.

முன்னோடி யார்?
கடந்த 2000ம் ஆண்டு யமஹா நிறுவனம்தான் இந்த தொழில்நுட்பத்தை YSF-R6 பைக்கில் அறிமுகம் செய்தது. அதன்பிறகு இந்த தொழில்நுட்பத்தை பல நிறுவனங்களும் கையிலெடுத்தன. ஆனால், ரேஸ் டிராக்குகளிலும், விலை உயர்ந்த பைக்குகளில் மட்டுமே காணக் கிடைக்கும் இந்த தொழில்நுட்பத்தை சாதாரண பைக் மாடல்களிலும் அறிமுகப்படுத்திய பெருமை கேடிஎம் நிறுவனத்திற்கு உண்டு.

எஞ்சின் இயக்கம்
அதிக மைலேஜ், குறைவான புகை என்பது மட்டுமல்ல, எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தும் அளவை நிர்ணயிக்க முடிவதால், எஞ்சின் இயக்கத்தை ஸ்போர்ட், டூரர், ரெயின் என சாலை நிலைகளுக்கு ஏற்ப நிர்ணயித்து ஓட்டுவதற்கான டிரைவிங் மோடுகளை கொடுக்க முடியும்.

க்ரூஸ் கன்ட்ரோல்
மோட்டார்சைக்கிள்களில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை சேர்ப்பதற்கும் இந்த தொழில்நுட்பம் அடிப்படை தத்துவமாக அமைகிறது. நிச்சயம் கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் வரும் இந்த நவீன தொழில்நுட்பம் இளைஞர்களை கவரும் என்பதோடு, கூடுதல் மதிப்பையும் சேர்க்கும்.


Click it and Unblock the Notifications








