மழைக்காலத்தில் கொஞ்சம் மிஸ் ஆகினாலும் எல்லாமே காலி... காரை எடுக்கும் முன் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கவும்!!
இந்தியாவில் மழைக்காலம் மெல்ல, மெல்ல துவங்கிவிட்டது. நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளை ஏற்கனவே கனமழை வெளுத்து வாங்கி வருவதை பார்க்க முடிகிறது. நம் தமிழ்நாட்டையும், தலைநகர் சென்னையையும் பொறுத்தவரையில், டிசம்பர் மாதம் தான் பயமுறுத்தக்கூடிய மாதமாக உள்ளது. அதற்கு முன்னதாக, மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை பெய்ய துவங்கிவிடும் என்பதால், அதற்கேற்ப முன்னெச்சரிக்கையாக தயாராகுவது அவசியமாகும். குறிப்பாக, கார்களை மழைக்காலத்திற்கு ஏற்ப எவ்வாறு தயார் செய்வது என்பதை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
டயர்கள்: சாலை உடன் நேரடியாக தொடர்புப்படுவது காரின் டயர்கள் ஆகும். மழைக்காலங்களில் சாலைகள் ஈரமாக இருக்கும் என்பதால், காரின் டயர்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். போதுமான பிடிமானத்தை வழங்க டயர்களின் டிரெட் ஆழமானது குறைந்தது 1.6மிமீ இருக்க வேண்டியது அவசியம். நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்ட பழைய டயர்கள் ஈரமான சாலைகளில் போதுமான டிராக்ஷனை ஏற்படுத்தாது. இது விபத்துகளுக்கு வழிவகுக்கும்.

வைபர்கள் & வாஷர்கள்: மழைக்காலங்களில் காருக்குள் இருந்து சாலையை தெளிவாக காண்பது கடினமாகும். இதனை மேலும் சிரமமாக்கிக் கொள்ளாமல் இருக்க, வைபர்களின் பிளேடுகள் மற்றும் வாஷர்களை நல்ல நிலையில் செயல்படக்கூடியதாக வைத்திருத்தல் அவசியமாகும். அதேபோல், விண்ட்ஸ்க்ரீனில் தூசி மற்றும் துகள்கள் படியாமல் இருக்க வாஷர் திரவத்தை முழுமையாக நிரப்பிக் கொள்ளவும்.
எலக்ட்ரிக்கல் சிஸ்டம்ஸ்: மழைநீர் உங்களது காரின் எலக்ட்ரிக்கல் சிஸ்டத்தை பாதிப்பதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, பேட்டரி நல்ல நிலையில் உள்ளதா என்பதை அவ்வப்போது செக் செய்துக் கொள்ளவும். இல்லையேல் தேவையான நேரத்தில் காரின் விளக்குகள் அணைந்துவிடுவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல், பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளில் நீர்-விலகல் படலம் உள்ளதா என்பதையும் உறுதிச் செய்துக் கொள்ளவும்.
பிரேக்குகள்: ஈரமான சாலைகளில் டயர்களை போல, காரின் பிரேக் சிஸ்டமும் முக்கியமான ஒன்றாகும். ஆதலால், பிரேக் பேட்கள் மற்றும் டிஸ்க்குகளை அவ்வப்போது செக் செய்யவும். பிரேக் சிஸ்டத்தில் இருந்து ஏதேனும் சத்தங்கள் அல்லது பிரேக் திறனில் ஏதேனும் குறைப்பாடு தெரிந்தால், உடனடியாக அதுகுறித்து அருகில் உள்ள மெக்கானிக்கிடம் விசாரித்து பார்க்கவும்.
காரின் வெளிப்புறத்தை பாதுகாத்தல்: பலமாக பெய்யும் கனமழை உங்களது காரின் வெளிப்புற பெயிண்ட்டை பாதிப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில், மழைநீர் உடன் சகதியும் காரின் மேற்பரப்பின் மீது படும். இதனை தடுக்க மெழுகு படத்தை பெயிண்ட்டின் மீது கொடுக்கலாம். அல்லது குறைந்தப்பட்சம், அவ்வப்போது காரை கழுவி சுத்தம் செய்யலாம்.
காற்றோட்டமான கேபினை உறுதி செய்யவும்: மழைக்காலங்களில் பெரும்பாலான நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்துக் கொண்டு கார் ஓட்ட முடியாது என்பதால், ஜன்னல் கண்ணாடிகள் முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்துக் கொள்ளவும். அதேபோல், மழையில் நனைந்தப்படி காருக்குள் அமர வேண்டியிருக்கும் என்பதால், கார் ஏசி-இல் விசிறியை மட்டும் இயங்க வைக்க முடிகிறதா என்பதை சரிப்பார்த்துக் கொள்ளவும்.
அவசர கால உபகரணங்கள்: நீங்கள் என்ன தான் உங்களது காரை கவனமாக பார்த்துக் கொண்டாலும், சில சமயங்களில் அதனையும் தாண்டி பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால், மழைக்காலத்தில் டார்ச், முதலுதவி பெட்டி மற்றும் காரை கட்டி இழுத்து செல்ல கயிறு உள்ளிட்டவை எப்போதும் உங்களது காரில் இருக்கட்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழைக்காலத்தில் கார் ஓட்டுவது நீங்கள் நினைக்கும் அளவிற்கு ஒன்றும் கடினமானது அல்ல. மேற்கூறப்பட்டுள்ள அடிப்படையான டிப்ஸ்களை பின்பற்றினால் எந்தவொரு பிரச்சனையும் இன்றி மழையின் போது கார் பயணங்களை மேற்கொள்ளலாம். மழைக்காலத்தில் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது ஆகும். ஆதலால், அவசர கால உபகரணங்களை கட்டாயமாக காரில் வைத்திருக்கவும்.


Click it and Unblock the Notifications








