வாகனங்களை கொள்ளையர்கள் திருடுவது இதற்குதான்.. பொல்லாதவன் படத்தை மிஞ்சும் விபரீதம்.. உஷார்
திருடு போகும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விபரங்களும், அந்த வாகனங்களை பயன்படுத்தி, பொல்லாதவன் திரைப்படத்தை மிஞ்சும் வகையில், குற்றச்செயல்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் திருடு போகும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில், கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் சுமார் 68 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இதில், வெறும் 21 கோடி ரூபாய் மதிப்பிலான கார்களை மட்டுமே மும்பை போலீசார் மீட்டுள்ளனர். இந்தியாவின் வர்த்தக தலைநகரம் கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வருவதை இந்த புள்ளி விபரங்கள் பறைசாற்றுகின்றன.

மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கருதப்பட்டு, தற்போது அந்த பெருமையை மெல்ல மெல்ல இழந்து வரும் தமிழகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தமிழகத்தில், குறிப்பாக தலைநகர் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

வாகன திருட்டு தொடர்பாக யாரேனும் புகார் அளிக்க சென்றால், வழக்கு பதிவு செய்ய போலீசார் மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், க்ரைம் ரேட் அதிகரித்து விடும் என்பதாலேயே போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் திருடுபோகும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்த அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும், 4க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொள்ளையடிக்கப்படுவது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

நடப்பாண்டில் கடந்த ஜூன் 30ம் தேதி வரை மட்டும், வாகனங்கள் திருடு போனது தொடர்பாக 21,298 புகார்கள் டெல்லியில் பதிவாகியுள்ளன. இதில், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை மட்டும் 12,689. அதாவது கொள்ளையடிக்கப்பட்ட மொத்த வாகனங்களில், சுமார் 60 சதவீதம் மோட்டார் சைக்கிள்கள்தான்.

இதே கால கட்டத்தில், 3,871 கார்கள் மற்றும் 3,237 ஸ்கூட்டர்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 7 சதவீதம், இதர வாகனங்கள் என போலீசார் வெளியிட்டுள்ள டேட்டா தெரிவிக்கிறது. மோட்டார் சைக்கிள்களைதான் கொள்ளையர்கள் அதிகம் குறி வைக்கின்றனர் என்பதும் இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது.

இவ்வாறு கொள்ளையடிக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் மூலம்தான் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களை கொள்ளையர்கள் அரங்கேற்றுகின்றனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர வழிப்பறி, கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களையும், திருட்டு மோட்டார் சைக்கிள்கள் மூலம்தான் கொள்ளையர்கள் அரங்கேற்றுகின்றனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் அந்த மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டை கண்டறிந்து, விசாரணை நடத்தினாலும் கொள்ளையர்களை பிடிக்க முடிவதில்லை.

மாறாக மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த, அதன் உண்மையான உரிமையாளருக்கே தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுகிறது. மோட்டார் சைக்கிள்ளை திருடுபவர்களும், செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களும் கூட்டணி அமைத்து செயல்படும் தகவல்களும் வெளியாகியுள்ளன.

சிசிடிவி கேமரா மூலம் நம்பர் பிளேட்டை கண்டறிந்து, போலீசார் டிரேஸ் செய்து விடுவார்கள் என்பதால், செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவது இல்லை.

அதற்கு பதிலாக, மோட்டார் சைக்கிள்களை திருடுபவர்களை தொடர்பு கொண்டு, ஏதேனும் மோட்டார் சைக்கிள்களை திருடி தருமாறு தெரிவிக்கின்றனர். இதன்பேரில் அவர்கள் திருடி கொண்டு வரும் மோட்டார் சைக்கிள்கள் மூலம் குற்ற செயல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இதன்மூலமாக அவர்களுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படுவது இல்லை. மாறாக அனைத்து பிரச்னைகளையும், மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த வாகன உரிமையாளரே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மோட்டார் சைக்கிள்கள் திருடு போவதற்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது.

டெல்லியில் கடந்த 2016ம் வருடம் 38,644 வாகனங்கள் திருடப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 2017ம் ஆண்டில், அங்கு திருடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 40,972ஆக அதிகரித்தது. நாடு முழுவதும் வாகன திருட்டு அதிகரித்து வரும் சூழலில், வாகன உரிமையாளர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது.

குடியிருப்புகள் நிறைந்த நெருக்கமான பகுதிகளில் வாகனங்களை பார்க்கிங் செய்ய தனியே இடம் இருக்காது. அத்தகைய இடங்களில் வசிப்பவர்கள், சாலை ஓரங்களில்தான் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்து வருகின்றனர்.

அப்படி பாதுகாப்பாற்ற சூழலில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களை குறி வைத்தும் கொள்ளையர்கள் செயல்பட்டு வருகின்றனர். எனவே வாகனங்களை முதலில் பாதுகாப்பான இடங்களில் பார்க்கிங் செய்வதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.

குறிப்பாக எக்காரணத்தை முன்னிட்டும் இருள் சூழ்ந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். அது கொள்ளையர்களுக்கு சாதகமான ஒன்றாக மாறிவிடும். வெளியில் எங்கேயாவது சென்றாலும் கூட, பாதுகாப்பான இடம்தானா? என்பதை உறுதி செய்த பின்னர், வாகனங்களை பார்க்கிங் செய்யுங்கள்.

பார்க்கிங் செய்த பின்பு, வாகனம் லாக் செய்யப்பட்டு விட்டதா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை உறுதி செய்து கொள்ளுங்கள். கார் என்றால், அனைத்து கதவுகளையும், சன் ரூப்பையும் க்ளோஸ் செய்து விட்டதையும் உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.

டூவீலர்களில் சிலர் சாவியை மறந்து வைத்து விட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். டூவீலர்களை பார்க்கிங் செய்த உடன், சாவியை கையோடு எடுத்து விடுங்கள். அதேபோல் கார்களில் ஸ்பேர் சாவிகளை வைப்பதையும் தவிர்த்து விடுவது நல்லது.

அனைத்து வாகனங்களிலும், குறிப்பாக விலை உயர்ந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியை கட்டாயமாக பொருத்தி கொள்ளலாம். இதன்மூலம் வாகனம் திருடுபோனால் கூட, கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








