ஓவர்டேக் செய்யும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!
ஓவர்டேக் செய்யும்போது செய்யும் தவறுகளால் பலரின் வாழ்க்கையை முடிந்துபோய்விடுகிறது. சில ஓட்டுனர்களின் அசட்டுத் துணிச்சல் அவர்களது வாழ்க்கையை மட்டுமின்றி, அவர்களுடன் பயணிப்பவர்கள் மற்றும் சாலையில் செல்லும் பிறரின் வாழ்க்கையையும் புரட்டி போட்டு விடுகிறது. சில நாட்களுக்கு முன் கன்னியாகுமரி அருகே நடந்த வேன் விபத்தில் கல்லூரி மாணவிகள் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் வேன் ஓட்டுனர் அதிவேகத்திலும், அஜாக்கிரதையாகவும் கார் ஒன்றை கடந்து செல்ல முற்பட்டபோது எதிரில் வந்த லாரி மீது வேன் உரசியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பதற்கு சில எளிய வழிமுறைகளை மனதில் கொள்வது அவசியம்.

01. எதிரில் வாகனங்கள் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு ஓவர்டேக் செய்வது அவசியம். அப்படி வந்தாலும், முந்துவதற்கு போதிய அவகாசமும், தூரமும் இருப்பதை உறுதி செய்து கொண்டு முயற்சிக்கவும்.

02. ஓவர்டேக் செய்யும்போது முன்னால் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு ஹாரன் அல்லது ஹெட்லைட் ஒளி மூலமாக நீங்கள் முந்துவது குறித்த எச்சரிக்கையை வழங்குவது அவசியம்.

03. ஓவர்டேக் செய்யும்போது ரியர் வியூ மிரர்களில் வேறு வாகனம் உங்களது வாகனத்தை முந்துவதற்கு முயற்சிக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

04. வளைவுகளில் ஓவர்டேக் செய்வதை அறவே தவிர்க்கவும். வளைவுகளில் ஓவர்டேக் செய்யும்போது விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும்போது தப்பிப்பது மிக மிக கடினம். மலைச்சாலை வளைவுகளில் அறவே ஓவர்டேக் செய்யக்கூடாது.

05. ஓவர்டேக் செய்வதற்கு சரியான கியரில் வாகனத்தை செலுத்துவது அவசியம். முன்னால் செல்லும் வாகனத்தின் வேகத்தையும் கணித்துக் கொண்டு அதற்கு தக்கபடி, உங்களது வாகனத்தில் வேகத்தை அதிகரித்து பாதுகாப்பாக கடக்க முயற்சி செய்யுங்கள்.

06. ஓவர்டேக் செய்து கொண்டிருக்கும்போது எதிரில் வரும் வாகனம் மிக வேகமாக நெருங்கிவிட்டால் ஹெட்லைட்டை ஒளிர செய்து எச்சரிக்கை செய்யவும். அப்படி முந்துவதற்கு முடியாத நிலை ஏற்படும்போது, வாகனத்தின் வேகத்தை குறைத்து, எதிரில் வரும் வாகனம் கடப்பதற்கு வழிவிட்டுவிடுங்கள். இதுபோன்ற சமயத்தில்தான் பல வாகனங்கள் விபத்தில் சிக்கி அபாயத்தை தேடிக் கொள்கின்றன.

07. காரில் இருக்கும் பயணிகள் மற்றும் பொருட்களின் எடை ஆகியவற்றை பொறுத்து காரின் பிக்கப் மாறுபடும். எனவே, பாரத்தை பொறுத்து காரின் வேகத்தை மனதில் வைத்து ஓவர்டேக் செய்வதற்கு முயற்சிக்கவும்.

08. இருவழிச் சாலையின் நடுவில் இரண்டு மஞ்சள் அல்லது வெள்ளைக் கோடுகள் போடப்பட்டிருப்பதால், சாலையை தாண்டிச் சென்று ஓவர்டேக் செய்யக்கூடாது. அதுவே, விடுபட்ட கோடுகள் போடப்பட்டிருந்தால் சாலையை தாண்டிச் சென்று ஓவர்டேக் செய்யலாம். அதேநேரத்தில், எதிரில் வாகனங்கள் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு ஓவர்டேக் செய்யவும்.

09. நெடுஞ்சாலைகளில் பெரிய வாகனங்களுக்கான இரண்டு தடங்கள் கொண்ட சாலைகளில் இடது சாலையில் பயணிக்க வேண்டும். ஓவர்டேக் செய்வதற்கு மட்டும் வலது தடத்தை பயன்படுத்த வேண்டும். மூன்று வழித்தடங்கள், நான்கு வழித்தடங்கள் கொண்ட நெடுஞ்சாலைகளிலும் வலது ஓரத்தில் இருக்கும் தடத்தை ஓவர்டேக் செய்ய பயன்படுத்த வேண்டும்.

10. இரவு நேரத்தில் ஓவர்டேக் செய்வது அபாயம் நிறைந்தது. எனவே, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எதிரில் வரும் வாகனத்தின் முகப்பு ஒளி தூரத்தில் தெரிந்தாலும், ஓவர்டேக் செய்வதை தவிர்ப்பது நலம். இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனத்தின் வேகத்தை கணிப்பது கடினம்.


Click it and Unblock the Notifications








