இதையெல்லாம் செய்யுங்க... மழைக்காலத்தில் காருக்குள் கெட்ட வாசனை இருக்கவே இருக்காது!! சிம்பிளான 5 டிப்ஸ்...
மழைக்காலம் இந்தியாவில் பல பகுதிகளில் துவங்கிவிட்டது. குறிப்பாக, அகமதாபாத் போன்ற வட இந்திய நகரங்களில் மழை பெய்து வருவதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள். ஆனால் நம் தமிழ்நாட்டில் இன்னுமும் கோடை வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இருப்பினும் கவலை வேண்டாம், எப்படியிருந்தாலும் இந்த ஜூன் மாத இறுதிக்குள் அல்லது அடுத்த ஜூலை மாத துவக்கத்தில் தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும்.
"மழை மட்டுமா அழகு, சுடும் வெயில் கூட ஒரு அழகு" என பாடலாசிரியர் நா முத்துக்குமார் கூறியுள்ளார். அதேபோல், வெயிலினால் மட்டும்தான் பிரச்சனையா? மழை காலத்திலும் சில பல பிரச்சனைகள் & அசவுகரியங்கள் உண்டு. குறிப்பாக, மழைக்காலத்தில் காருக்குள் ஏற்படும் கெட்ட வாசனை பெரிய பிரச்சனையாக இருக்கும். அத்தகைய வாசனை காரினுள் ஏற்படாமல் தடுக்க, எளிய 5 யோசனைகள்...

ரப்பர் மேட்: காருக்குள் எந்தவொரு பொருளும் அவ்வளவு எளிதாக நுழைய முடியாது. நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி அவை நாம் காருக்குள் எடுத்து வருபவையே ஆகும். குறிப்பாக, நம் கால்களிலும், செருப்பு/ ஷீ-களிலும் ஒட்டிக்கொண்டு வரும் அழுக்குகளும், மண்துகள்களும் காருக்குள் வழங்கப்படும் தரைப்பாய்களில் படிந்துக்கொண்டு, சில நாட்களில் கெட்ட வாசனையாக மாறிவிடும். இதனை தடுக்க எளிமையாக வெளியே எடுத்து, உதறினாலே மண்துகள்களை உதிர்த்துவிடக்கூடிய பிளாஸ்டிக் (அ) ரப்பர் பாய்களை வாங்கி பயன்படுத்தலாம்.

சிலிக்கான் ஜெல்: எந்தவொரு பைக் ஆக்ஸஸரீஸ் கடையிலும் கிடைக்கக்கூடியது. சிலிக்கான் ஜெல்கள் பொதுவாகவே ஈரப்பதத்தையும், ஈரமான காற்றையும் உறிஞ்சக்கூடியவை. சிலிக்கான் ஜெல் பாக்கெட்களை காருக்குள் தொங்க விடுவதினால், கெட்ட வாசனைகளும் ஜெல்களால் உறிஞ்சி கொள்ளப்படும். அத்துடன் சிலிக்கான் ஜெல்களை கொண்டு, காருக்குள் சிந்திய திரவங்களையும் உறிஞ்ச முடியும்.

குடை: மழைக்காலத்தில் குடையின் தேவை அதிகமாக இருக்கும் என்பதை நான் கூற வேண்டியதில்லை. பயன்படுத்திய பின்னர் நீர் சொட்ட சொட்ட குடையை காருக்குள் எடுத்து வராமல், முறையாக ஓர் வாட்டர் ப்ரூஃப் பையில் குடையை வைத்து காருக்குள் கொண்டுவரவும். அதேபோன்று, காரில் இருந்து வெளியே சென்ற பின்னரே குடையை விரிக்கவும்.

மைக்ரோஃபைபர் துணி: மற்ற துணிகளை காட்டிலும் மைக்ரோஃபைபர் துணி நீரை அதிகமாக உறிஞ்சும். ஆதலால், முன்னெச்சரிக்கையாக காரில் எப்போதும் குறிப்பிட்ட அளவிலான மைக்ரோஃபைபர் துணி இருக்கட்டும். மைக்ரோஃபைபர் துணி காகிதங்களை ஒரே முறை பாக்கெட்டாக வாங்கினாலே அது நீண்ட காலத்திற்கு வரும்.

ஏர் பிரஷ்னர்: கோடை காலத்தில் ஏர் பிரஷ்னரை பயன்படுத்தாவிடினும் பெரியதாக பிரச்சனையாக தெரியாது. ஆனால் மழைக் காலத்தில் கேபினுள் காற்று நறுமணமூட்டும் பிரஷ்னர்கள் தேவையானவை. ஏர் பிரஷ்னர்களை உங்களது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் பல்வேறு வாசனைகளில் வாங்கலாம். இருப்பினும், சில ஏர் பிரஷ்னர்கள் சிலரது உடலுக்கு ஏற்றதாக அமைவதில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மேற்கூறப்பட்ட ஆக்ஸஸரீகளை கொண்டு மழைக்காலத்தில் காரின் உட்பக்க கேபினை பராமரிக்கலாம். இவற்றிற்காக நீங்கள் சிறிய தொகையை செலவு செய்தாலே போதுமானது. குறிப்பாக, காரினுள் வாசனையை நறுமணமூட்ட இன்னும் பல்வேறு ஆக்ஸஸரீகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அதேநேரம் சில ஆக்ஸஸரீகள் காரின் உட்பக்கத்தை அழகுறவும் செய்யும்.


Click it and Unblock the Notifications









