காசு கம்மின்னு உசுரோட விளையாடதீங்க சார்! இதெல்லாம் இல்லாத காரை இடியே விழுந்தாலும் வாங்காதீங்க!
புதிதாக கார் வாங்கும் நாம் அந்த காரில் என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் இருக்கிறது என்பதை செக் செய்துவிட்டு தான் வாங்க வேண்டும். அதைப்பற்றி தான் இங்கு நாம் விரிவாக காணப்போகிறோம்.
புதிதாக கார் வாங்க போகிறோம் என்றால் அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இந்தியாவில் தற்போது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்கள் தான் அதிகமாக விற்பனையாகி வருகிறது. அதே நேரம் அரசும் கார் தயாரிப்பு நிறுவனங்களிடம் கார்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க பல்வேறு வலியுறுத்தல்களை செய்து கொண்டு வருகிறது.

தற்போது இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும் அட்வான்ஸான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்றாலும் சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. அதன்படி நம் கார் வாங்கும் போது காரில் முக்கியமாக இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன எதையெல்லாம் நாம் செக் செய்து விட்டு அந்த காரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விஷயத்தை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
ஏர் பேக்குகள்: ஒரு காருக்கு ஏர்பேக் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகவும் கார் விபத்தில் சிக்கும் போது காரின் உள்ளே இருக்கும் பயணிகள் வேகமாக எதிலும் சென்று மோதாமல் தடுப்பதுதான் இந்த ஏர் பேக்கின் வேலை. இது இருப்பதால் பல உயிர்கள் காக்கப்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு 2 ஏர்பேக் கட்டாயம் இருக்கும்.

முன் பக்க டிரைவர் மற்றும் பயணிகளுக்கான ஏர்பேக் அரசு விதிமுறைப்படி கட்டாயம் இருக்கும். நீங்கள் கார் வாங்கும் போது குறைந்தபட்சம் ஆறு ஏர்பேக் கொண்ட காரை தேர்வு செய்தால் அது பாதுகாப்பான காராக இருக்கும். அதே நேரம் ஏர்பேக் வேலை செய்ய வேண்டும் என்றால் நீங்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இபிடியுடன் கூடிய ஏபிஎஸ்: ஏபிஎஸ் என்பது காரை நாம் சடன் பிரேக் பிடிக்கும்போது உதவும் ஒரு முக்கியமான கருவியாகும். நீங்கள் வேகமாக காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது திடீரென குறுக்கே ஏதாவது வந்தால் நீங்கள் பிரேக்கை உடனடியாக பிடிப்பீர்கள். ஏபிஎஸ் இல்லாத கார்களில் கார் லாக் ஆகி தன் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்க நேரிடும்.

ஆனால் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பொருத்தப்பட்ட கார்கள் இப்படியான சூழ்நிலைகளில் ஸ்கிட் ஆகாமல் அதே நேரம் லாக் ஆகாமல் சிறப்பான பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸை வழங்கும். அதே நேரத்தில் கார் விபத்தும் ஏற்படாமல் தவிர்க்கப்படும். இது ஒரு முக்கியமான பாதுகாப்பு கருவியாகும்.
இஎஸ்சி: எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் என்பது கார் ஸ்டேரிங் வீலையும் காரின் வீல்களையும் கண்காணிக்கும் ஒரு கருவியாகும். அவசரகாலகட்டத்தில் இஎஸ்சி என்பது தேவையான அளவு பிரேக்கையும் இன்ஜின் பவரையும் கட்டுப்படுத்தும். இந்த கருவி ஓவர்ஸ்டேரிங் மற்றும் அண்டர்ஸ்டேரிங் ஆகிய பிரச்சினைகளை தவிர்க்க உதவியாக இருக்கும். குறைவான டிராக்ஷன் ஈரமான ரோடுகளில் கிடைக்கும் போது இது விபத்துக்களை தவிர்க்கும் வகையில் காரை கண்ட்ரோல் செய்து அதில் பயணிக்கும் பயணிகளின் உயிரை காப்பாற்றும்.

டயர் பிரஷர் மானிட்டரின் சிஸ்டம்: காரின் நான்கு வீல்களிலும் சரியான அளவு டியர் பிரஷர் இருப்பது காரின் நிலைத்தன்மை மற்றும் சிறப்பான ஹேண்டில் ஆகிய விஷயங்களுக்கு உதவியாக இருக்கும். கார் டிரைவருக்கு காரின் டயர் பிரஷர் குறைந்தால் அது குறித்து தெரிய வாய்ப்பு குறைவாக இருக்கிறது. இந்த பிரச்சனையை தான் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் சரி செய்கிறது.
இந்த சிஸ்டம் உள்ள கார்களில் ஏதாவது ஒரு டயரில் காற்று குறைவாக இருந்தால் அது உடனடியாக டிரைவரை அலர்ட் செய்யும். இதன் மூலம் அவர் உடனடியாக காரை ஓரம் கட்டி அந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். காரின் ஒரு டயரில் மட்டும் பிரஷர் குறைவாக இருந்தால் கார் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. அதை இந்த தொழில்நுட்பம் தடுக்கிறது.

பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன்: காரை டிரைவர் ஓட்டிக்கொண்டு செல்லும்போது காரை சுற்றி உள்ள சில குறிப்பிட்ட இடங்கள் டிரைவரின் பார்வையில் படாமல் இருக்கும். அதாவது சைடு மிரரில் பார்த்தாலும் ரியர் வியூ மிரரில் பார்த்தாலும் அந்த இடத்தில் வரும் வாகனம் குறித்து டிரைவருக்கு தெரியாமல் இருக்கும்.
அப்படியான இடங்களை கண்காணித்து அங்கு ஏதாவது வாகனங்கள் வந்தால் உடனடியாக டிரைவரை அலாட் செய்யும் கருவி இதுதான். இதனால் விபத்துக்களை தவிர்க்க முடியும். இதனால் கார் பாதுகாப்பாக பயணிக்க முடியும். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய உதவியை செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது வாகன நெருக்கடி அதிகமாகிவிட்டது. சாலையில் அதிகமான வாகனங்கள் பயணித்து வருகின்றன. இதனால் விபத்து நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதை தவிர்க்க வேண்டும் என்றால் பாதுகாப்பான காரை தேர்வு செய்வது தான் புத்திசாலித்தனம். இதன்படி மேலே உள்ள அம்சங்கள் கொண்ட கார்களை நீங்கள் தேர்வு செய்வது தான் உங்கள் உயிரை பாதுகாக்கும்.


Click it and Unblock the Notifications









