செகண்ட்-ஹேண்டில் கார் வாங்க/ விற்கும்போது உஷார்... டெல்லி கார் வெடிக்குண்டு சம்பவம் ஞாபகம் இருக்குல!!
சமீபத்திய டெல்லி கார் வெடிகுண்டு சம்பவத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியப் பாடம் என்னவென்றால், டெல்லியில் மட்டுமின்றி, நாட்டின் எந்தவொரு மூலையில் வசிப்பவரும் செகண்ட்-ஹேண்டில் கார் வாங்க/ விற்ற பின் உடனடியாகவும் சட்டபூர்வமாகவும் வாகன உரிமையை (ஆர்.சி பரிமாற்றம்) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) மாற்றுவதும், வாகனம் விற்கப்பட்டவுடன் காப்பீட்டை ரத்து செய்வதும் அல்லது மாற்றுவதும் அவசியம் ஆகும்.
இல்லையெனில், அசல் உரிமையாளரே சட்டப்பூர்வ உரிமையாளராகக் கருதப்படுவார். இதனால், வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகள், அபராதங்கள் அல்லது டெல்லியில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி மாலை 7 மணியளவில் பரபரப்பான சாலையில் நடந்த மோசமான சம்பவத்தைப் போல, வாகனத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் பெரும் குற்றங்களுக்கு ஆளாக நேரிடும்.

13 பேரின் உயிரை பறித்துள்ள இந்த சம்பவத்தில், குண்டு வெடித்த ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) கார், டீலர்கள் மூலம் பலரது கைமாறி, முறையாகப் பதிவு மாற்றம் செய்யப்படாமல் இருந்துள்ளது. ஆதலால், டீலர்கள் அல்லது இடைத்தரகர்கள் மூலம் வாங்க/விற்கும்போது கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரையில், இடைதரகர்கள் இல்லாமல் நேரடியாக உரிமையாளருடன் பேசி காரை விற்பது/ வாங்குவது பாதுகாப்பானது.
செகண்ட்-ஹேண்டில் காரை வாங்கி இவ்வாறான வேலைக்கு பயன்படுத்தும்போது, காரை விற்பனை செய்த முதல் ஓனர் அதனை முறையாக ஆர்டிஓ-இல் ரத்து செய்யாமல் இருந்தால் அவரும் தேவையில்லாமல் போலீசாரின் விசாரணைக்கு உள்ளாக வேண்டிவரும். ஏனெனில், இவ்வாறான செயலுக்காக காரை வாங்குபவர்கள் முறையாக தங்களது பெயரில் காரின் பதிவை ஆர்டிஓ-இல் மாற்றமாட்டார்கள்.

விசாரணையில் போலீசார் உண்மையை கண்டறிந்துவிடுவார்கள் என்றாலும், தேவையில்லாமல் விசாரணைகளில் சிக்குவதை தவிர்க்க முந்தைய உரிமையாளர் ஆர்டிஓ-இல் தனது பெயரிலான காரின் பதிவை நீக்கிவிடுவது நல்லது. இவ்வாறு, பயன்படுத்திய காரை விற்பனை செய்யும்போது, கார் உரிமையாளர்கள் சில முக்கியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். ஆனால் உண்மையில், காரை வாங்குபவர் தான் முதலில் ஆர்டிஓ-இல் பதிவு செய்ய வேண்டும்.
அவர் பதிவு செய்துவிட்டாலே விற்றவர் தனது ஆர்டிஓ பதிவை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. வாகனத்தின் உரிமை மாற்றத்திற்கான அனைத்து ஆவணங்களும் (படிவங்கள் 29, 30 போன்றவை) RTO-வில் சமர்ப்பிக்கப்படும் வரை, வாகனத்தை வாங்குபவரிடம் ஒப்படைக்கக்கூடாது. மேலும், வாங்குபவரின் நம்பகத்தன்மையை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும்.

வாங்குபவரின் அடையாளச் சான்றுகளான ஆதார், பான் கார்டு, முகவரிச் சான்று, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை ஒரு நகல் எடுத்து வைத்துக்கொள்வது இன்னும் சால சிறந்தது. அடையாளம் தெரியாதவர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நபர்களுக்கு வாகனத்தை விற்பதைத் தவிர்க்கவும். வெற்றுத் தாள்களில் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். RTO படிவங்கள் அனைத்திலும் வாங்குபவரின் விவரங்கள் முழுமையாக நிரப்பப்பட்ட பின்னரே கையெழுத்திட வேண்டும்.
பாதுகாப்பான பணம் செலுத்தும் முறைகளைப் பின்பற்றுவது நல்லது. தனிப்பட்ட காசோலைகள் அல்லது பணப் பரிமாற்றத்தைத் தவிர்த்து, வங்கிக் கணக்கு மூலம் அல்லது வங்கி சரிபார்க்கப்பட்ட காசாளர் காசோலை போன்ற பாதுகாப்பான முறைகளைப் பயன்படுத்துவது நல்லது. அனைத்து பரிவர்த்தனைகளையும் ஆவணப்படுத்துவது முக்கியம். எல்லாவற்றிற்கும் மேலாக, விற்பனை ஒப்பந்தம் (பில் ஆஃப் சேல்) ஒன்றை உருவாக்குவது நல்லது.

இதில் முழுப் பெயர்கள், முகவரிகள், வாகன அடையாள எண் (VIN) மற்றும் டெலிவரி தேதி, நேரம் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டு, இரு தரப்பினரும் கையெழுத்திட வேண்டும். விற்பவரிடமும் வாங்குபவரிடமும் தலா ஒரு நகல் இருக்க வேண்டும். வாகனம் விற்கப்பட்டவுடன், விற்பவர் RTO-க்கும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் முறையாகத் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் காப்பீட்டுக் கொள்கையை ரத்து செய்யலாம் அல்லது மாற்றலாம். எதிர்காலச் சட்ட சிக்கல்களையும் தவிர்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், கார் உரிமையாளர்கள் சட்ட சிக்கல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும், தங்களது கார் தவறான கைகளில் சென்று சேர்வதைத் தவிர்க்கலாம். டீலர் மூலம் விற்பனை செய்தால், உரிமை மாற்றம் செய்வதற்கான காலக்கெடுவை உறுதிசெய்து, அது பூர்த்தி செய்யப்பட்டதற்கான ஆதாரத்தைப் பெறுவது அவசியம்.


Click it and Unblock the Notifications









