வீட்ல இருந்து வண்டியை எடுக்கறதுக்கு முன்னாடி இதை பாத்துக்கோங்க! எல்லா இடத்துலயும் போலீஸை போட்டு செக் பண்றாங்க!
போக்குவரத்து காவல் துறையின் நடவடிக்கை தீவிரமாகியுள்ளதால், இனி வீட்டில் இருந்து வண்டியை எடுப்பதற்கு முன்னால் ஒரு விஷயத்தை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வாகனங்களுக்கு நம்பர் பிளேட் மிகவும் முக்கியம். நம்பர் பிளேட்களில் உள்ள எண்களும், எழுத்துக்களும் தெளிவாக பார்க்க கூடிய வகையில் இருப்பதும் அவசியம். வாகனங்களின் நம்பர் பிளேட்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

Image used for representation purpose only
ஆனால் இந்த விதிமுறைகளை மீறுவதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதாவது தங்களுக்கு பிடித்த ஸ்டைலில் எண்களையும், எழுத்துக்களையும் எழுதி கொள்கின்றனர். மேலும் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை ஒட்டி கொள்வது, சோஷியல் மெசேஜ்களை சொல்வது என நம்பர் பிளேட் விஷயத்தில் பலர் விதிமுறைகளை காற்றில் பறக்க விடுகின்றனர். இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக குற்ற செயல்களில் ஈடுபடும் வாகனங்களை காவல் துறையினரால் கண்டறிய முடிவதில்லை. மேலும் சாலை விபத்துக்களில் சம்பந்தப்பட்ட வாகனங்களையும் காவல் துறையினரால் 'ட்ராக்' செய்ய முடியாமல் போகிறது. நம்பர் பிளேட்கள் தெளிவாக இல்லாததுதான் இதற்கு காரணமாக உள்ளது. ஒரு சிலர் ஸ்டைலுக்காக நம்பர் பிளேட்களை தெளிவற்றதாக மாற்றினாலும், ஒரு சிலர் வேண்டுமென்றே நம்பர் பிளேட்களை சேதப்படுத்துகின்றனர்.
காவல் துறையினர் விதிக்கும் அபராதங்களில் இருந்து தப்பிப்பதற்காகவும், குற்ற செயல்களில் ஈடுபடும்போது சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காகவும் ஒரு சிலரால் நம்பர் பிளேட்கள் சேதப்படுத்தப்படுகின்றன. வாகனத்தில் இருந்து நம்பர் பிளேட்களை கழற்றி விடுவது அல்லது நம்பர் பிளேட்களில் இருந்து ஒரு சில எண்கள் மற்றும் எழுத்துக்களை அழித்து விடுவது போன்ற காரியங்களை குற்ற செயல்களில் ஈடுபடுவோர் செய்கின்றனர்.
இந்த விஷயங்கள் காவல் துறையினரின் கவனத்திற்கு வந்ததையடுத்து, தற்போது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஐதராபாத் போக்குவரத்து காவல் துறையினர் நம்பர் பிளேட் விதிமுறை மீறல்களுக்கு எதிராக தற்போது சாட்டையை சுழற்ற தொடங்கியுள்ளனர். நம்பர் பிளேட் விதிமுறை மீறல்கள் தொடர்பாக நடப்பு 2022ம் ஆண்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 1,32,392 இ-சலான்களை வாகன உரிமையாளர்களுக்கு அவர்கள் வழங்கியுள்ளனர்.
இதில், 97,756 சலான்கள் டூவீலர் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டவை ஆகும். மறுபக்கம் கார் உரிமையாளர்களுக்கு 31,392 சலான்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 3,244 சலான்கள் மற்ற வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக 525 கிரிமினல் கேஸ்களையும் ஐதராபாத் போக்குவரத்து காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். ஐதராபாத் போக்குவரத்து காவல் துறையினரின் இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதரபாத்தில்தானே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். உங்கள் வாகனத்தில் நம்பர் பிளேட் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் நீங்களும் எப்போது வேண்டுமானாலும் போக்குவரத்து காவல் துறையின் நடவடிக்கைக்கு ஆளாகலாம். எனவே நம்பர் பிளேட் விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளதா? என பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அத்துடன் மற்ற போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றுங்கள்.


Click it and Unblock the Notifications