என்னங்க... ரொம்ப பயமுறுத்துறீங்க!! விமானத்தில் செல்வதா வேண்டாமா? டர்புலென்ஸ் இங்கே தான் அதிகம்!
பிளைட் டர்புலென்ஸ் (Flight Turbulence), விமான பயணங்களில் அவ்வப்போது நடக்கக்கூடிய ஒன்று. குறிப்பிட்ட வழித்தடங்களில் பறக்கும் விமானங்களில் டர்புலென்ஸ் அடிக்கடி ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது எந்தெந்த வழித்தடங்கள் என்பதை பார்ப்பதற்கு முன்னர், விமானங்களில் டர்புலென்ஸ் எதனால் ஏற்படுகின்றன என்பதை பார்ப்போம்.
விமானங்கள் பல்லாயிரம் அடி உயரத்தில் அதிவேகமாக இயங்கக்கூடியவை என்பது நமக்கு தெரியும். ஒவ்வொரு விமான பயணத்தையும் டேக்-ஆஃப்க்கு முன்னரே கணித்துவிடுவர். அதாவது, விமானம் எந்த விமான நிலையத்திற்கு செல்லவுள்ளது, எந்தெந்த பகுதிகள்/ நாடுகளை கடந்து செல்லவுள்ளது, விமானம் பறக்கவுள்ள வழித்தடங்களில் காலநிலை எவ்வாறு உள்ளது என எல்லாவற்றையும் பாதுகாப்பு கருதி விமானத்தின் டேக்-ஆஃப்க்கு முன்பாகவே சரிப்பார்த்துவிடுவர்.

இருப்பினும், இயற்கையை முழுவதுமாக புரிந்துக் கொள்ளும் சக்தி யாரிடமும் கிடையாது அல்லவா... விமானம் டேக்-ஆஃப் ஆகும் முன்புவரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காலநிலை சீரானதாக இருந்திருக்கலாம். காலநிலை மோசமடைவதற்கான சாத்தியக்கூறுகள் கூட அப்போது கிடைத்திருக்காது. ஆனால், விமானம் அந்த பகுதியை நெருங்கிய சமயத்தில் திடீரென காலநிலை மோசமடையலாம்.
அத்தகைய நேரத்தில், கனமழை, இடி, மின்னல்கள் மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் செல்லும்போது விமானம் குலுங்குவது வாடிக்கையான ஒன்றே. இந்த குலுக்கலை தான் பிளைட் டர்புலென்ஸ் என அழைக்கின்றனர். எல்லா டர்புலென்ஸும் மோசமானது என சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால், 90% டர்புலென்ஸ் ஆபத்தானவை கிடையாது. பிளைட் டர்புலென்ஸை 3 விதமாக பிரிக்கின்றனர்.

இதில், அதிக குலுக்கலை ஏற்படுத்தக்கூடிய 3வது பிரிவு டர்புலென்ஸ் தான் மோசமானது ஆகும். ஆனால், அவ்வாறான டர்புலென்ஸ் 50,000 - 1 லட்சம் விமான பயணங்களில் ஒருமுறை மட்டுமே மிகவும் அரிதாக நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவ்வாறான ஒரு டர்புலென்ஸ் தான் சமீபத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்துள்ளது.
விமானத்தினுள் ஏற்பட்ட அதி பயங்கரமான குலுக்கலினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்; கிட்டத்தட்ட 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குறிப்பாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் டர்புலென்ஸில் சிக்கிக் கொள்வது அவ்வப்போது நடக்கக்கூடிய ஒன்றே. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சிங்கப்பூரில் இருந்து இலண்டனுக்கு சென்ற விமானத்தில் டர்புலென்ஸ் அதிகமாக ஏற்பட்டதை அடுத்து விமானம் பாதியிலேயே சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

பிளைட் டர்புலென்ஸ் ஏற்படுவதற்கு மலைகள் முக்கியமான காரணமாக விளங்குகின்றன. அதாவது, மலைப்பிரதேச பகுதிகளுக்கு மேல் செல்லும்போது அதிகளவில் டர்புலென்ஸை சந்திப்பதாக விமானிகள் தெரிவிக்கின்றனர். இந்த காரணத்தினாலேயே இமயமலை தொடருக்கு மேல் விமானங்கள் பறப்பதில்லை. அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 33 பேர் டர்புலென்ஸ் காரணமாக விமானத்தினுள் காயம் அடைவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023ஆம் ஆண்டில் அதிக டர்புலென்ஸை சந்தித்த டாப்-10 விமான பயணங்களை ஐரோப்பாவை சேர்ந்த டர்ப்ளி என்கிற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி பார்க்கும்போது, கடந்த ஆண்டில் சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா க்ரூஸ் என்கிற பகுதிக்கு சென்ற விமானம் அதிக டர்புலென்ஸை சந்தித்துள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டில் இந்திய வழித்தடம் எதுவும் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கணக்கெடுப்பு கடந்த 2023ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். 2024ஆம் ஆண்டில் எல்லாவற்றிற்கும் மேலாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் அதிபயங்கரமான டர்புலென்ஸ் ஏற்பட்டதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏற்கனவே கூறினோம் அல்லவா.... டர்புலென்ஸை முன்கூட்டியே கண்டறியும் வகையில், கடந்த காலங்களில் இருந்து நாம் நிறைய விஷயங்களில் முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆதலால், டர்புலென்ஸை பற்றி பயம் தேவையில்லை.


Click it and Unblock the Notifications









